தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்

Go down

பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் Empty பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்

Post  ishwarya Thu May 23, 2013 1:00 pm

கோவில் நகரமான மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், அழகர் கோவிலையும் இணைத்து சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த இந்த திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். திருவிழா தொடங்கிய நாளில் இருந்தே மதுரை நகரம் விழாக் கோலம் பூண்டு விடும்.

ஆண்டின் 12 மாதமும் மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலில் திருவிழாக்கள் நடைபெற்று வந்தாலும், சித்திரை மாதம் நடக்கும் திருவிழாவே தனி முத்திரை பதிக்கிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதே போல் அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த 10-ந் தேதி முகூர்த்தக்கால் நாட்டியதுடன் விழா ஆரம்பமானது. மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் தினமும் காலை, இரவு நேரங்களில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் நான்கு மாசி வீதிகளிலும் உலா வந்தனர்.

அப்போது பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகம் 21-ந் தேதியும், திக்கு விஜயம் 22-ந் தேதியும் நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 23-ந்தேதி வெகு விமரிசையாக நடந்தது. இதை தொடர்ந்து நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணத்தை தொடர்ந்து அழகர் மலையில் கள்ளழகரின் புறப்பாடு 23-ந்தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது. அதன்படி சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு, கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் நேரிக் கம்பு ஏந்தி மதுரைக்கு புறப்பட்டார்.

மதுரையை நோக்கி வந்த கள்ளழகருக்கு நேற்று கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல், மூன்று மாவடி, புதூர், ரிசர்வ் லைன், மாரியம்மன் கோவில் அவுட் போஸ்ட் பகுதிகளில் வழிநெடுக பக்தர்கள் எதிர்கொண்டு (எதிர் சேவை) வழிபட்டனர். கள்ளழகர் மதுரைக்கு வந்தபோது இரவு 8.15 மணி அளவில் திடீரென சூறைகாற்றுடன் மழை கொட்டியது.

அப்போது அங்கிருந்த பக்தர்கள் "அழகர் வந்தார்... மழையும் வந்தது...'' என்று ஆடிபாடி மகிழ்ந்தனர். இதனை தொடர்ந்து நேற்று இரவு 10 மணி அளவில் தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் கள்ளழகர் திருமஞ்சனம் நடந்தது. பின்னர் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலையை சாற்றிக் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலில் கள்ளழகர் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். பின்னர் 3 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்கு புறப்பட்டார். முன்கூட்டியே அங்கு வந்திருந்த வீரராகவ பெருமாள் கள்ளழகரை வரவேற்றார்.

அதனை தொடர்ந்து சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. அதன்படி காலை 7.35 மணிக்கு பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது அங்கு திரண்டிருந்த லட்சக்கணககான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.

கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் தீப்பந்தம் ஏந்தியும், தோலினால் செய்த பைகளில் தண்ணீரை நிரப்பி பக்தர்கள் மீது பீச்சி அடித்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். மேலும் பக்தர்கள் செம்புகளில் சர்க்கரை நிரப்பி அதில் கற்பூரம் ஏற்றி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இந்த கண்கொள்ளா காட்சியை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்தனர்.

இதனால் மதுரை மாநகரமே `களை' கட்டியது. இதனை தொடர்ந்து பகல் 12 மணியளவில் வைகை ஆற்றில் இருந்து கள்ளழகர் புறப்பட்டு ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது கள்ளழகரை குளிர்விக்க செய்யும் வகையில் தீர்த்த வாரி நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் அங்கபிரதட்சணம் செய்தும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

தீர்த்த வாரியின்போது ஏராளமான பக்தர்கள் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இன்று இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். இன்று நள்ளிரவு 1.27 மணி முதல் 1.47 மணி வரை சந்திரகிரகணம் ஏற்படுவதால் கள்ளழகர் வண்டியூர் வீரராகபெருமாள் கோவிலுக்கு சென்று விடுகிறார்.

கிரணம் முடிந்த பிறகு பூஜை செய்யப்பட்டு அதிகாலை 6 மணிக்கு சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்திற்கு செல்கிறார்.திருவிழா தொடங்கிய நாளில் இருந்தே மதுரை நகரில் இரவு முழுவதும் ஆங்காங்கே பக்தர்கள் கூட்டமாகவே காணப்படுகிறது.

கள்ளழகர் ஆற்றில் இறங்குவது ஏன்?

பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் முத்தாய்ப்பாக கள்ளழகர் வருடந்தோறும் வைகையாற்றில் எழுந்தருளுகிறார். அன்று எந்த நிற பட்டு உடுத்தி ஆற்றில் இறங்குகிறாரோ? அதை பொருத்தே அந்த ஆண்டு செழிப்பாக அமையும் என்று பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

கள்ளழகர் ஆற்றில் இறங்குவது குறித்து புராண வரலாற்று ரீதியாகவும், செவி வழிச் செய்தியாகவும் பல்வேறு கதைகள் கூறப்படுகிறது. கள்ளழகர் ஆற்றில் இறங்குவது குறித்து புராண வரலாற்றில் கூறப்பட்டுள்ளதாவது:-

முன்னொரு காலத்தில் அழகர் மலையில் உள்ள நூபுர கங்கை தீர்த்தக்கரையில் சுதபஸ் என்ற முனிவர் திருமாலை நினைத்து தியானம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக துர்வாச முனிவர் வந்தார். ஆனால் சுதபஸ் முனிவர் அவர் வந்தது தெரியாமல் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.

தான் வந்ததை கவனிக்கமால் இருந்த சுதபஸ் முனிவர் மீது துர்வாச முனிவர் கோபம் கொண்டார். அதோடு மண்டூகமாக (தவளை) பிறக்கும்படி சுதபஸ் முனிவருக்கு சாபமிட்டார். பின் கோபம் தணிந்த துர்வாச முனிவர் மதுரை வைகையாற்றங்கரையில் தவம் செய், அங்கு திருமாளின் திருவடி தரிசனத்தால் சாப விமோசனம் பெறுவாய் என்று கூறினார்.

சாபத்தால் மண்டூகமாக பிறந்த சுதபஸ் முனிவர் வைகையாற்றங்கரையில் பெருமாளை மனமுருகி தவம் செய்தார். அப்போது அவரது பக்திக்கு முக்தி தர எண்ணிய பெருமாள் அங்கு தோன்றி அவரது சாபத்தை நீக்கினார். இந்த புராண வரலாற்றின் படியே இன்றளவும் கள்ளழகர், மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிப்பதற்காகவே வைகையாற்றில் இறங்குகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சித்திரை திருவிழாவில் கோலாகலம் : கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார் ; வரலாறு காணாத மக்கள் வெள்ளம்
» விடிய, விடிய நடந்த கள்ளழகரின் எதிர்சேவை: நாளை வைகை ஆற்றில் இறங்குகிறார்
» அழகர்கோவிலில் இன்று கள்ளழகர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 24-ந்தேதி தொடங்கியது. தினமும் சாமி புறப்பாடு நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திரு
» கார்த்தியின் பச்சை துரோகமா? பச்சை நோட்டு பாசமா?:பரப்பாகும் வில்லங்க வீடியோ!
» 9 முழ பட்டுசேலை உடுத்தி தலைப் பொங்கல் கொண்டாடிய சினேகா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum