தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஏகாதசி மகிமை

Go down

ஏகாதசி மகிமை Empty ஏகாதசி மகிமை

Post  amma Tue Jan 15, 2013 6:35 pm

ஏகாதசி
என்பது பதினொன்று என்பதைக் குறிக்கும்.
பவுர்ணமியிலிருந்தும்அமாவாசையிலிருந்தும் வரும் பதினோராம் நாளையே ஏகாதசி
என்று குறிப்பிடுவர். இந்த நாள் மாதத்தில் இருமுறை வருவது.இந்த நாள்
மகாவிஷ்ணுவிற்கு உகந்தநாளாகக் கூறுவர்.இந்தநாள் முழுவதும் உபவாசமிருந்தும்
இறைவனைப் பாடியும் பஜனை செய்தும் இறைவனின் நினைவில்
கழிப்பார்கள்.இறைவனுக்கு அருகாமையில் என்பதுதான் இதன் பொருள்.
மறுநாள்
துவாதசி. அதிகாலையில் எழுந்து பூஜை நிவேதனம் முதலியன முடித்து அதிதிகளுக்கு
அன்னமிட்டுப் பின் உண்பார்கள்.இந்த விரதம் சைவ வைணவர்களிடையே
கடைப்பிடிக்கப் பட்டு வந்தது.பலருக்கும் ஏகாதசி விரதம் பற்றித்
தெரியாதிருந்தது.
ஆனால் மன்னனான அம்பரீஷன் முனிவர் மூலமாக ஏகாதசி
விரதத்தைப பற்றித் தெரிந்து கொண்டான்.இந்த விரதத்தை விவரம் தெரிந்த
நாளிலிருந்து கடைப்பிடித்து வந்தான்.
பல ஆண்டுகளாக ஏகாதசிக்கு முதல்
நாளான தசமியன்று இரவு உண்ணாமல் மறுநாள் ஏகாதசி முழுநாளும் உபவாசமிருந்து
அதற்கு மறுநாள் துவாதசி அன்று பூஜை முடித்து அதிதிகளுக்கு அன்னமிட்டுப்
பின் உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
உபவாசம் என்றசொல்லுக்கே
இறைவனின் அருகிருத்தல் என்றே பொருள். அதன்படி எப்போதும் இறை தியானத்தில்
இருந்து ஹரியை வழிபட்டு வந்தான் அம்பரீஷன்.
இதனால் ஹரியின் அன்புக்குப் பாத்திரமானவனானான்.
ஒருமுறை
ஏகாதசி விரதமிருந்த அம்பரீஷன் துவாதசி பாரணைக்குத் தயாராக
இருந்தான்.ஏகாதசி உபவாசத்திற்குப் பின் உணவு உண்பதற்குப் பாரணை என்று
பெயர்.அச்சமயம் துர்வாச முனிவர் தன் சீடர்களுடன் அரண்மனைக்குள்
நுழைந்தார்.முனிவரைப் பார்த்த அம்பரீஷன் மனம் மிக மகிழ்ந்தான்.அன்புடன்
அவரை வரவேற்று உபசாரங்கள் செய்தான்.
"வரவேண்டும் சுவாமி, தாங்கள் என் குடிசைக்கு வந்ததில் மிக்க மகிழ்ச்சி"
கம்பீரமாக ஆசனத்தில் அமர்ந்த முனிவர்,"அம்பரீஷா, இன்று என்ன திதி தெரியுமல்லவா?" என்றார்.
"ஆம்
சுவாமி, இன்று துவாதசி திதி. அடியேனுடன் தாங்கள் பாரணைக்கு எழுந்தருள
வேண்டும்."என்று மிகுந்த வினயத்துடன் கேட்டுக் கொண்டான் அம்பரீஷன்.
"அதற்காகத்தான் வந்துள்ளேன்.சற்றுப்பொறு யமுனையில் நீராடிவிட்டு வருகிறேன்."
"தங்கள் சித்தம் சுவாமி அடியேன் காத்திருக்கிறேன்."துர்வாசர் சீடர்கள் புடைசூழ யமுனைக்குச் சென்றார்.
வெகுநேரம் வரை அம்பரீஷன் காத்திருந்தான்.அவனுடன் சேர்ந்து அந்தணர்களும் காத்திருந்தனர்.நீராடச் சென்ற முனிவர் வரவில்லை.
இன்னும் சற்று நேரத்தில் துவாதசி திதி கழிந்து விடும்.அதற்குள் பாரணை முடிக்கவேண்டும் இல்லையேல் ஏகாதசி விரதம் தவறிவிடும்.
என்ன செய்வது என்று புரியாமல் அனைவரும் திகைத்துக் கொண்டு இருந்தனர்.
துர்வாசர்
வராமல் பாரணை செய்வதும் தவறு.அந்தணர்களிடம் ஆலோசனை கேட்டான்
அம்பரீஷன்.துவாதசி கழிய இன்னும் சிறிது நேரமே உள்ளதால் அந்த நேரத்திற்குள்
சிறிது துளசி தீர்த்தம் உட்கொண்டால் பாரணை செய்த மாதிரியாகிவிடும். முனிவர்
வந்தபின் அவருடன் உணவு உட்கொள்ளலாம்.என்றதால் வேறு வழியின்றி துளசி
தீர்த்தம் பருகி விரதத்தை முடித்தனர்.
இவ்வாறு உட்கொண்டதால் உணவு
உண்டதாகவும் கொள்ளலாம் பட்டினியாக இருப்பதாகவும் கொள்ளலாம் என்று
எண்ணிக்கொண்டு முனிவருக்காகக் காத்திருந்தான் அம்பரீஷன்.
இச்செய்தியை அறிந்தார் துர்வாசர்.மிகுந்த கோபமடைந்தார்.
"அம்பரீஷா,
என்னை பாரணை செய்ய அழைத்து விட்டு என்னை விடுத்து நீ பாரணை செய்தது
மிகுந்த தவறு. இதற்கான தண்டனையை நீ அனுபவித்தே ஆகவேண்டும்." என்றார்
சினத்துடன்.அம்பரீஷன் அஞ்சி நடுங்கினான். மிகுந்த பணிவுடன்
பேசினான்."சுவாமி, துவாதசி திதி போய்விடுமே என்று சிறிது நீர் மட்டுமே
பருகினேன்.தயவு செய்து உணவு உண்ண வாருங்கள். அனைவரும்
காத்திருக்கிறோம்."என்றவனைக் கடுமையாகப் பார்த்தார் முனிவர்.
"நீ நீர் பருகியது கூடத் தவறுதான். அதுவே பாரணை செய்ததற்கு ஒப்பாகும்.மகரிஷியான என்னை அவமதித்து விட்டாய்."
"முனி சிரேஷ்டரே . மன்னியுங்கள்.தயவு செய்து கோபம் தணியுங்கள்." என்று கால்களில் பணிந்த அம்பரீஷனை உதறித் தள்ளினார்.
"இதோ
நான் விடுக்கும் இந்த அக்கினிப் பிழம்பு உன்னைச் சுட்டெரிக்கட்டும்."
என்றவாறு மந்திரம் ஜபிக்க அதிலிருந்து உண்டான ஒரு தீப் பிழம்பு அம்பரீஷனை
நோக்கி வந்தது.
ஹரியிடம் மாறாத பக்தி கொண்டவனும் ஏகாதசி விரதத்தை
மிகவும் கடுமையாக கடைப்பிடித்துவந்தவனுமான அம்பரீஷன் தன் இரு கரங்களைக்
கூப்பி நாராயணனைத் துதிக்க, அவரது ஸ்ரீசக்கரம் அம்பரீஷனைக்
காத்தது.அத்துடன் தீப்பிழம்பையும் அழித்துவிட்டு
அதனை ஏவிய துர்வாசரைத்
துரத்தவே முனிவர் ஓடினார்.தன்னைத் துரத்திய ஸ்ரீசக்ரத்தின்
கோபத்திலிருந்து தப்பிக்க நேரே பிரம்மாவின் சத்யலோகம் சென்றார்.அவரோ" ஸ்ரீ
சக்ரத்தைத் தடுக்க என்னால் ஆகாது.நேரே கைலாயம் செல்" எனக் கூறி அனுப்ப
முனிவர் சிவனை நாடிச் சென்றார்.கைலாசபதியும் தன்னால் ஆகாது" நீ ஹரியிடமே
செல்" எனக் கூற முனிவர் வைகுண்டம் வந்து ஹரியின் காலில் பணிந்தார்.
"பிரபோ, அபயம்,"என்று அபயக் குரல் கொடுத்துக் கதறினார்.நாராயணன் புன்னகைத்தான்.
"துர்வாசரே, ஏனிந்த பதற்றம்? என்ன நடந்தது?" மாயக் கண்ணனல்லவா, ஒன்றும் அறியாதவர் போலக் கேட்டார்.
"பிரபோ, என்னைக் காப்பாற்றுங்கள். தங்களின் ஸ்ரீ சக்ரம் என்னைத் துரத்துகிறது. தாங்கள்தான் அதைத் தடுத்து நிறுத்தவேண்டும்"
"துர்வாசரே,
இது என் பக்தன் மீது நீர் கொண்ட கோபத்தின் மொத்த உரு.இதைத் தடுக்க என்
பக்தன் ஒருவனால் மட்டுமே முடியும். அவனிடமே சரணடைவீர்."என்றவர் கபடமாகச்
சிரித்தார்.
துர்வாசர் மீண்டும் அம்பரீஷனிடமே ஓடிவந்தார்.
"அம்பரீஷா,
ஏகாதசி விரதத்தின் மகிமையும் பெருமையும் அறியாமல் உன்னைச் சபித்து
விட்டேன்.உன் பக்தியையும் பரமாத்மா உன் மீது கொண்டுள்ள அன்பையும் புரிந்து
கொண்டேன்.இந்தஸ்ரீசக்ரத்தின் வெப்பத்திலிருந்து என்னைக் காப்பாற்று என
வேண்டிக்கொண்டார்.
தன் முன்னே நின்ற துர்வாசரை அன்புடன் பார்த்த
அம்பரீஷன்,"சுவாமி, நான் செய்ததும் தவறுதான்.என்னையும் தாங்கள் மன்னிக்க
வேண்டும்." என்றவன் தன் கரங்களைக் கூப்பி நாராயணனை த்யானம் செய்தான். .
"பரந்தாமா,
பக்தவத்சலா, இந்த அடியவனைக் காக்கும் பொருட்டு என் இல்லம் வந்தது நான்
செய்த பெரும் பாக்கியம்.தயவு செய்து அதிதியாக வந்த முனிவரைக் காத்து
ரட்சிக்க வேண்டும்."என்று மனமுருக வேண்டினான்.
முனிவரின் எதிரே
தீப்பிழம்பாய் நின்ற சக்ரம் மறைந்தது.இதற்குள் ஓராண்டு
முடிந்திருந்தது.அதிதியான முனிவருக்கு அன்னமிடாமல் உண்ணக் கூடாது என்று
அதுவரை விரதமிருந்து வந்தான் அம்பரீஷன்.இதையறிந்த முனிவரும் மனம் வருந்தி
பின் உணவு உண்டு விரதத்தை முடித்துவைத்தார்.

அம்பரீஷன் முனிவருக்குப் பல பரிசுகளைக் கொடுத்து அவரை அனுப்பி வைத்தான்.
நேரே
வைகுண்டம் சென்று நாராயணன் முன் நின்றார் மகரிஷி."நாராயணா, ஏனிந்த
விளையாட்டு?தங்களின் சக்கரத்தைத் தங்களால் தடுத்து நிறுத்த இயலாதா?என்னை
இப்படி சோதிக்கலாமா?"
"துர்வாசரே, நீர் அம்பரீஷனை சோதிக்கலாமா?துவாதசி
முடிந்து விடும் என்று தெரிந்தும் நீர் சரியான நேரத்திற்குச் செல்லாமல்
காலம் கடத்தியது தவறல்லவா?"
"இது ஏன் நடந்தது என்று எனக்கே தெரியவில்லை சுவாமி."
"கலங்காதீர்.
அம்பரீஷன் மூலமாக ஏகாதசி மகிமையை உலகுக்கு உணர்த்தவே இப்படி ஒரு
நிகழ்ச்சியை நடத்தினேன்.உம்மால் அம்பரீஷன் பெருமையும் உயர்ந்தது.
"தங்களின் இந்த விளையாட்டுக்கு நான் ஒரு கருவியாக இருக்க நேர்ந்ததை அறிந்து நான் மிகவும் பெருமைப் படுகிறேன் பிரபோ"
என்று நாராயணனை வணங்கி விடை பெற்று வைகுண்டத்தை விட்டுப் புறப்பட்டார் துர்வாசர்.
ஏகாதசி
விரதம் இருந்து இறைவனை வணங்குவது என்பது ஆன்மீக வழியைக் காட்டும்
என்றாலும் அது ஆரோக்யத்திற்கான வழி என்பதை நாம் புரிந்து கொள்ள
வேண்டும்.உபவாசம் உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் பண்படுத்தும் என்பதையே நம்
முன்னோர் சொன்ன வாழ்க்கை முறை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum