தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பஞ்ச கிருஷ்ண தலங்கள் : திருக்கண்ணபுரம்

Go down

பஞ்ச கிருஷ்ண தலங்கள் : திருக்கண்ணபுரம் Empty பஞ்ச கிருஷ்ண தலங்கள் : திருக்கண்ணபுரம்

Post  amma Fri Jan 11, 2013 1:41 pm

பஞ்ச கிருஷ்ணாரண்ய க்ஷேத்ரங்களில் இன்னொன்று. அதனாலேயே கண்ணபுரம் என்றானது.
அதைத் தவிரவும் ஒரு காரணம் உண்டு. ‘‘அஷ்டாட்சரமான ‘ஓம் நமோ நாராயணா’ எனும்
மந்திரத்தை எந்த தலத்தில் அமர்ந்து சொன்னால் பகவானின் தரிசனம் கிட்டும்?
அப்படிப்பட்ட க்ஷேத்ரத்தை எனக்குக் கூறுங்கள்’’ என்று கண்வ முனிவர் நாரத
மகரிஷியிடம் வேண்டினார். ‘‘கிழக்கு சமுத்திரத்திற்கு சமீபத்தில்
திருக்கண்ணபுரம் எனும் கிருஷ்ண க்ஷேத்ரம் இருக்கிறது. அங்கு கருணைக் கடலாக
சேவை சாதிக்கிறார், சௌரிராஜன். க்ஷேத்ரம், வனம், நதி, கடல், நகரம்,
தீர்த்தம், விமானம் என ஏழும் இங்கு சேர்ந்திருப்பது மிகவும் அரிதானது.
கிருஷ்ண க்ஷேத்ரமாகவும் வனத்தில் கிருஷ்ணாரண்யமாகவும் காவிரி நதி பாய்ந்து
வளமூட்டியபடியும் கிழக்கு கடலின் கரையினிலும் (வங்காள விரிகுடா),
உபரிசிரவசு மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட கண்ணபுரம் என்கிற நகரமும் நித்ய
புஷ்கரணியும் உத்பாலவதாக விமானம் கொண்டு ஆலயம் விளங்குகிறது.

கிருஷ்ணாரண்ய
சௌரிராஜன், அஷ்டாட்சர எழுத்துகளின் மொத்த சொரூபமாக இலங்குகிறார். எனவே,
அங்கு சென்று மந்திரத்தை ஜபிக்க, பரந்தாமனின் தரிசனம் நிச்சயம்’’ என்று
நாரத மகரிஷி மகிமைகளை விஸ்தாரமாகக் கூறி அனுப்புகிறார். கண்வ முனிவருக்கு
அதிசுந்தரமான தரிசனத்தை ஸ்ரீ கிருஷ்ணர் அளித்ததால் கண்வபுரம் என்று பெயர்
பெற்று, அதுவே கண்ணபுரமாக மாறியது. இங்கு சேவை சாதிக்கும் சௌரிராஜன்
சாட்சாத் கிருஷ்ணனே. கோயில் அர்ச்சகர் ஒருவர் தன் காதலிக்கு சூடிய மாலையை
பெருமாளுக்கு சாற்றி விட்டார். கோயிலுக்கு வந்திருந்த சோழ மன்னனுக்கு
சூட்டிய மாலையை பிரசாதமாகத் தந்தார். அதற்குள் இருந்த தலைமுடியை கண்டு
மன்னன் கோபம் கொண்டான். எப்படி வந்தது என்று வெகுண்டான்.

அர்ச்சகர்,
‘‘பெருமாளுக்கு சௌரி உள்ளது. அதுதான் இது’’ என்று பொய் கூறி, பெருமாள்
பாதத்தை சரணடைந்தார். மறுநாள் மன்னன் வந்து பார்த்தபோது தலையில் முடியோடு
சௌரிராஜனாக சேவை சாதித்தார், பெருமாள்! விபீஷணன், ‘‘கிடந்த கோலத்தை
திருவரங்கத்தில் கண்டேன். நடையழகை காணுவேனா?’’ என்று கோரினான். இத்தலத்தில்
பெருமாள் விபீஷணனுக்கு நடையழகை காட்டி அருளினான். இன்றும் அமாவாசை தோறும்
இந்நிகழ்ச்சியை நடித்துக் காட்டும் திருவிழா இங்குண்டு. ‘சௌரி’ என்ற
சொல்லுக்கு யுகங்கள் தோறும் அவதரிப்பவன் என்று பொருள். பல்வேறு யுகங்களை
கண்ட திவ்ய தேசம் இது. ‘‘திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானின்
பெயரை உச்சரித்த மாத்திரத்தில் எனது துயர்களெல்லாம் போயின. இனி எனக்கு என்ன
குறையுள்ளது!’’ என்று நம்மாழ்வார் வினவுகிறார்.

மூலவராக சௌரிராஜப்
பெருமாளும் கண்ணபுர நாயகித் தாயாரும் சேவை சாதிக்கிறார்கள்.
திருவாரூரிலிருந்தும் நாகப்பட்டினத்திலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.
நன்னிலத்திலிருந்து 6 கி.மீ. தொலைவு. இந்த கிருஷ்ண ஜெயந்தி அன்று
எங்கிருந்தாலும் சரி, இந்தத் தலங்களின் பெயரை உச்சரித்தாலேயே கிருஷ்ணன்
சந்தோஷப்படுவான். வாய்ப்பிருந்து தரிசிக்க முடிந்தால், பார்வையால் ஆரத்
தழுவிக் கொள்வான். இந்த ஐந்து தலங்களின் மீது அத்தனை பிரியம் அவனுக்கு. இவை
என் ஊர்கள் என்று தனித்த அபிமானம் கொண்டிருக்கிறான். அதனாலேயே இந்த ஐந்து
தலங்களிலும் ‘‘வாருங்கள்...’’ என்றழைத்தபடி நமக்காகக் காத்திருக்கிறான்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum