தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆசைகளை நிறைவேற்றும் ஆம்ரவனேஸ்வரர்

Go down

ஆசைகளை நிறைவேற்றும் ஆம்ரவனேஸ்வரர் Empty ஆசைகளை நிறைவேற்றும் ஆம்ரவனேஸ்வரர்

Post  meenu Thu Mar 07, 2013 2:35 pm

மாமரங்கள் நிறைந்திருந்ததால் ஆம்ரவன க்ஷேத்திரம் என்று அழைக்கப்பட்ட தலம், திருமாந்துறை. தற்போது, மாந்துறை.

ஆம்ரவனம், பிரம்மானந்தபுரம், அஹாபஹாரி, மிருகண்டீஸ்வரபுரம் என்றெல்லாம் போற்றப்பட்டது இத்தலம். இங்கு ஈசன் ஆதிரத்னேஸ்வரர், சுத்தரத்னேஸ்வரர், மிருகண்டீஸ்வரர், ஆம்ரவனேஸ்வரர் என்றெல்லாம் வணங்கப்படுகிறார்.

மிருகண்டு முனிவர் புத்திரன் வேண்டி இத்தலத்தில் தவமியற்றியுள்ளார். இந்திரனுக்கு கௌதமரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில் அவன் செய்த பூஜையால் நிவர்த்தியானது. வேதமித்திரன் என்பவரது தந்தையின் அஸ்தி, இத்தலத்தில் தூய ரத்தினமானது. தட்ச யாகத்திற்குச் சென்றதால் உண்டான தோஷம் நிவர்த்தியாக சூரியன் இத்தலத்தில் வழிபட்டுள்ளார். இத்தல ஈசனைத் துதித்த சந்திரன் இரவுக்கு அதிபதியாக பதவி பெற்றான். சமுத்திரராஜனும் இத்தலத்து இறைவனை வழிபட்டு அசுத்தம் நீங்கப் பெற்றிருக்கிறார்.
தாயை இழந்த மான் குட்டிகளுக்காக இத்தல ஈஸ்வரனும், அம்பிகையும் தந்தை மான், தாய்மானாக உருவெடுத்து, அந்த மான் குட்டிகளைக் காப்பாற்றியுள்ளனர்.

கஹோல ரிஷியின் மகன் மருதாந்தன் அடைந்த தோஷம் இம்மாந்துறை திருத்தலத்தில் நீங்கியதாக தலபுராணம் கூறுகிறது. அந்த தோஷத்தால் அவனது கழுத்தில் ஏற்பட்டு இருந்த இரும்பு குண்டுகள் ரத்தினக் கற்களாக மாறின. இதை முனிவர்கள் அவனிடம் கூறி அவன் பாபவிமோசனம் அடைந்து விட்டதை உணர்த்தினர். மருதாந்தனும் ஆம்ரவனேஸ்வரரைத் துதித்து போற்றினான். பின்னர் மாந்துறைக்கு அடுத்துள்ள அகம்ஹர எனப்படும் ஆங்கரை எனும் ஊரில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்தான். அந்த லிங்கமூர்த்தி மருதாந்த நாதேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

வயல்களும் தென்னந்தோப்புகளும் சூழ்ந்த இயற்கை எழில் நிறைந்த ஊரே மாந்துறை. இந்த ஊருக்கு அருகே ஆங்கரை, திருத்தவத்துறை, அன்பிலாந்துறை ஆகிய தலங்கள் அமைந்துள்ளன. சாலையை ஒட்டி பூஞ்சோலைகளுக்கும், மாஞ்சோலைகளுக்கும் இடையே ஆலயம் அழகுற அமைந்துள்ளது. அற்புதமான இயற்கை எழிலின் ரம்யமான சூழலில் இறைவனை இங்கு தரிசிப்பதால், அருளோடு மன அமைதியும் நமக்கு இத்தலத்தில் கிடைக்கிறது.

வர்ணங்களின் ஜொலிப்பில் நம் கண்கள் மலர, அழகிய மூன்று நிலை சிறிய ராஜகோபுரத்துடன் ஆலயம் அற்புதமாக அமையப் பெற்றுள்ளது. உயரிய மதில்கள். ஆலயத்தினுள் நீண்ட மண்டப வரிசை. வலப்பக்கம் விநாயகர் சந்நதியும் தல விருட்சமான மாமரமும் அமைந்துள்ளன. வில்வமரமும் உடன் உள்ளது. ஒரு திருச்சுற்றினை உடைய ஆலயமிது.

மகாமண்டபம் மிகவும் கலைநயம் மிக்க தூண்களைக் கொண்டு விளங்குகிறது. பின்னர் அர்த்த மண்டபம் மற்றும் ஈசனது கருவறை. அங்கு ஒரே மகாமண்டபத்தைக் கொண்டே அம்பாள் சந்நதியும் அமையப் பெற்றுள்ளது. அம்பாள் தென்முகமாக மகாமண்டபத்தை ஒட்டிய அந்தராளம், கருவறையுடனான தனி சந்நதியில் குடி கொண்டு அருள்பாலிக்கிறாள். மேலிரு கரங்களில் தாமரை புஷ்பங்களோடும், கீழிரு கரங்கள் அபய-வரதமாகக் கொண்டு பாலாம்பிகை என்கிற திருநாமத்தோடு நின்ற வண்ணம் எழில் சிந்தும் திருக்கோலத்தில் இறைவி தரிசனம் அளிக்கிறாள். அம்பிகையின் வாகனமாக நந்திதேவர் வீற்றிருப்பதால் இந்த ஆலயத்தின் பழைமை புரிகிறது.

கருவறையில் ஆம்ரவனேஸ்வரர் கிழக்கு முகமாக சுமார் ஐந்தடி உயரத்தில் வீற்றருள்கிறார். இத்தல முருகன் அபூர்வமாக மயில் மீது சாய்ந்து நின்றபடி வள்ளி-தெய்வயானையுடன் அருள்கிறார்.

மகாமண்டப கிழக்கு வாயிலில் மான்குட்டிக்கு தாயாக இத்தல அம்மையப்பர் விளங்கிய நிகழ்வுகள் சுதைச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள நவகிரக சந்நதியுள் சூரியன் மேற்கு நோக்கி இருக்க, அவரைப் பார்த்தபடி மற்றைய கிரகங்கள் உள்ளது, வித்தியாசமான அமைப்பாகும்.

இத்தலத்தை திருஞானசம்பந்தர் போற்றி ஒரு பதிகம் பாடியுள்ளார். வித வித மலர்களைக் கொண்டு வரும் காவிரியின் பெருமைகளைப் புகழ்ந்துள்ளார். தேவர்கள் தொழும் மாந்துறை ஈசனை சிவாகம முறைப்படி தூப, தீபங்கள் மற்றும் தோத்திரப் பாடல்களால் மலர் தூவி, வணங்கி வழிபடுவோர், தவப்பயனதனைப் பெறுவார்கள் என்றும், எக்காலமும் தொழும் அடியவர்களின் உள்ளத்துள் எழுந்து, ஆனந்தம் தருவார் என்றும் போற்றுகின்றார். ஹர ஹர என்று சொல்லும் பணியை செய்யும் சம்பந்தன் எனத் தன்னை சுட்டிக் காட்டிக் கொள்ளும் ஆளுடையப்பிள்ளையார் இடைவிடாது அரன் நாமத்தைச் சொல்லி அவனருளை பரிபூரணமாய் அடைந்திட வழி காட்டுகின்றார்.

வள்ளல் ராமலிங்கரும் தனது அருட்பாவில் இப்பதியை ஆராதித்துள்ளார். அருணகிரிநாதர் இத்தல முருகனைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார்.

தல தீர்த்தமாக கொள்ளிட நதி, ஆலயத்தின் வலப்புறம் ஓடுகிறது. அந்நதியை காயத்ரி நதி என அழைக்கின்றனர். இந்நதியில் நீராடி அங்காரக சதுர்த்தியன்று (செவ்வாய்க் கிழமையன்று வரும் சதுர்த்தி) ஆம்ரவனேஸ்வரரை வழிபட்டால் அனைத்துவித ரோகங்களும் நீங்கும். மனதில் தோன்றும் நியாயமான ஆசைகள் நிறைவேறும். துன்பங்கள் அகன்று இன்பங்கள் பெருகும்.

இவ்வாலயத்தை சோழமன்னன் சுவேதகேது கட்டியுள்ளார். திருபுவனச் சக்ரவர்த்தி மற்றும் ராஜராஜதேவர் ஆகியோரது கல்வெட்டுகள் இவ்வாலயத்தில் காணப்படுகின்றன.

ஆலயத்தில் தினமும் மூன்று கால பூஜைகள் நடக்கின்றன. காலை 6 முதல் 11 மணி வரையும் மாலை 5 முதல் 8 மணிவரையும் ஆலயம் திறந்திருக்கும்.

ஆருத்ரா தரிசனம், அன்னாபிஷேகம், சங்கரஜெயந்தி, மகாசிவராத்திரி போன்ற விழாக்கள் ஆலயத்தில் விசேஷமாக நடத்தப்படுகின்றன.

பங்குனி மாதம் 1, 2, 3 தேதிகளில் காலையில் சூரிய கதிர்கள் ஈசன் மீது படர்கிறது. அந்த சமயம் இங்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெறுகின்றன.

திருச்சி-லால்குடி பேருந்து சாலையில் திருச்சியிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது மாந்துறை. சாலையை ஒட்டியே ஆலயம் அமைந்துள்ளது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum