தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பச்சை நாச்சி அம்மன் ஆலயம்

Go down

  பச்சை நாச்சி அம்மன் ஆலயம் Empty பச்சை நாச்சி அம்மன் ஆலயம்

Post  ishwarya Fri May 24, 2013 11:52 am

ஸ்தல வரலாறு....

ஒரு வீடு கூட இல்லை. அது ஒரு திறந்த வெளி. சுற்றிலும் வீடுகள் எதுவும் இல்லை. தனியாக ஒரு சிறிய ஆலயம். அந்த ஆலயத்தின் முகப்பில் ஒரு இளம்பெண் அமர்ந்திருந்தாள்.

பச்சை வளையல்....... சாலையில் ஒரு வளையல்காரர் பெட்டி நிறைய வளையல்க ளைச் சுமந்தபடி கூவிக் கூவி விற்றபடி வந்தார். அந்த இளம்பெண் அந்த வளையல்காரரைப் பார்த்து அருகே அழைத்தாள். வளையல் பெட்டியை அந்தப் பெண்ணருகே இறக்கினார் அந்த வளையல்காரர். 'என்னம்மா? வளையல் வேணுமா?' 'ஆமாம். பச்சை வளையல் இருக்கா?' 'பச்சையா?' 'ஆமாம்...

நான் பச்சை நிற வளையல் மட்டுந்தான் போடுவேன். அதனால் தான் அப்படி கேட்டேன்'. 'இருக்கம்மா... நிறைய இருக்கு'. 'அப்படியானால் என் ரெண்டு கை நிறைய போட்டு விடுங்கள்'. கரங்களை அந்த வளையல்காரரை நோக்கி நீட்டினாள் அந்தப் பெண். அவரும் அவள் விருப்பப்படி இரண்டு கைகள் நிறைய பச்சை நிற வளையல்களை அணிவித்தார்.

அந்தப் பெண்ணின் முகமெல்லாம் பூரிப்பு. வளையல்காரர் பெட்டியை மூடிக்கொண்டு புறப்பட்டார். 'அம்மா! பணம்?' 'பணமா?' தயக்கத்துடன் கேட்டாள் அந்தப் பெண். 'ஆமாம்' 'என்கிட்டே இல்லையே!' 'இல்லையா? அப்புறம்?' புரியாது கேட்டார் வளையல்காரர். 'எவ்வளவு தரணும்?' சொன்னார்.

அண்ணனிடம் பணம்............

'சாலையை கடந்து வலதுபக்கம் திரும்பி கொஞ்ச தூரம் நடந்தால் என் அண்ணன் பிராயடி வீடு வரும். அங்கே போய் வாங்கிக் கொள்ளுங்கள்'. அந்தப் பெண்ணின் பேச்சை நம்பிய வளையல்காரர் புறப்பட்டார். சாலையை அடைந்து வலது புறம் திரும்பினார். பார்த்தார். எட்டிய தொலைவு வரை ஒரு வீடு கூட இல்லை. ஆனால் சற்று தொலைவில் ஒரு சிறிய ஆலயம் மட்டும் இருந்தது.

புரிய வில்லை அவருக்கு. தயக்கத்துடன் அந்த ஆலயத்திற்கு அருகே சென்றார். என்ன ஆச்சரியம்? அவருக்கு சேர வேண்டிய பணம் ஆலயத்தின் வாயிற்படியிலேயே இருந்தது. திகைப்புடன் நிமிர்ந்து பார்த்தார் வளையல்காரர். கருவறையில் இருந்த பிராயடி கருப்பு சுவாமி அவரைப் பார்த்து மெல்ல நகைப்பது போல் இருந்தது. அவர் மனதில் மின்னலாய் ஓர் உணர்வு.

உடனே திரும்பி அந்த இளம்பெண் அமர்ந்திருந்த ஆலயத்தை நோக்கி நடந்தார். அங்கு அந்தப் பெண்ணைக் காணவில்லை. எதுவும் புரியாது கருவறையில் வீற்றிருந்த அம்மனை வணங்கிவிட்டுப் புறப்படலாம் என்று கருவறை அருகே சென்று அன்னையை கும்பிட்டார்.

மறுகணம்- அவர் முகம் வியர்க்கத் தொடங்கியது. அவரது உடல் படபடவென நடுங்கத் தொடங்கியது. காரணம்? கருவறை அம்மனின் இரு கரங்களிலும் அவர் சற்று முன்னர் அணிவித்த அதே பச்சை நிற வளையல்கள். அப்படியானால்? இப்போது மெல்ல புரியத் தொடங்கியது வளையல்காரருக்கு.

தன்னிடம் வளையல் போட்டுக் கொண்டது பிராயடி கருப்பு சுவாமியின் தங்கை பச்சை நாச்சி அம்மனா? மேனி சிலிர்த்தது அவருக்கு. அன்னையின் திருவிளையாடலை எண்ணி மனம் கொள்ளா உவகையுடன் நடக்கத் தொடங்கினார் வளையல்காரர். இது செவி வழி வரும் தல வரலாறு.

ஆம். அன்னை பச்சை நாச்சி அம்மனின் திருவிளையாடல்தான் இது. அன்னையின் ஆலயம் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் முன்னே ஆல அரச மரங்கள் ஒன்றோடு ஒன்று பின்னி பிரமாண்டமாக வளர்ந்து நிற்க, அந்த தல விருட்சங்களின் அடியில் நாகர் மற்றும் விநாயகர் திருமேனிகள் உள்ளன.

ஆலய முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் அகன்ற அழகான மகாமண்டபம் உள்ளது. மகா மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். கிழக்கு திசையில் மதுரை வீரன், பொம்மி, வெள்ளையம்மாளும் மேற்கு திசையில் தேரடி கருப்பு, விநாயகர் திருமேனிகளும் அருள்பாலிக்கின்றன.

முகப்பில் துவார பாலகிகளின் ஓவியத்தைக் கடந்தால் அர்த்த மண்டபமும் அடுத்து கருவறையும் உள்ளன. கருவறையில் இறைவி பச்சை நாச்சியம்மன் எட்டு கரங்களுடன் அமர்ந்த நிலையில் புன்னகை தவழும் முகத்துடன் அருள்பாலிக்கிறாள்.

இங்கு அன்னைக்கு சாற்றப்படும் வளையல், உடை, ரிப்பன் அனைத்துமே பச்சை நிறத்தில்தான் உள்ளன. தினசரி ஒரு கால பூஜை நடைபெறும் இந்த ஆலயம் காலை 7.30 முதல் 12 மணி வரையிலும் மாலை 4.30 முதல் 7.30 வரையிலும் திறந்திருக்கும்.

வைகாசி மாத அமாவாசையை அடுத்து வரும் செவ்வாய்க் கிழமை முதல் 15 நாட்கள் இங்கு அன்னைக்கு திருவிழா மிக கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் திருவிழாவில் குட்டி குடித்தல் விழாவும், இரண்டாம் நாள் பக்தர்களுக்கு விருந்தோம்பலும் 12-ம் நாள் மஞ்சள் நீராட்டு விழாவும் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. அது சமயம் ஊரே திருவிழா கோலம் பூண்டிருக்கும். 7-ம் நாள் திருவிழாவின் போது அன்னை வீதியுலா வருவதுண்டு. பனை

ஓலையில் அன்னை உருவம்........... இங்கு அன்னைக்கு உற்சவ சிலை கிடையாது. மாறாக பனை ஓலையில் அன்னையின் உருவம் செய்து அதையே வீதி உலாவில் பவனி வரச் செய்வார்கள். அன்னையின் அண்ணன் பிராயடி கருப்பு சுவாமிக்கு இந்த ஆலயத்திற்கு சற்று தொலைவில் சாலையோரம் தனிக் கோவில் உள்ளது.

ஆடி மாதம் 28 நாட்கள், வெள்ளிக்கிழமைகள், ஜனவரி முதல் நாள், தை மாத முதல் நாள், சித்திரை முதல் நாள் போன்ற நாட்களில் அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. திருமணம் நடக்க வேண்டியும், குழந்தை பேறு வேண்டியும், தங்கள் வாழ்வில் பசுமை தழைக்க வேண்டியும் அன்னையை வேண்டிக் கொள்ளும் பக்தர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறுவது உண்மையே!

அந்தப் பக்தர்கள் இங்கு வந்து அன்னைக்கு பால், பன்னீர், மஞ்சள் பொடி, திரவியப்பொடி, சந்தனம், குங்குமம், தயிர் இவைகளால் அபிஷேகம் செய்து தங்கள் நன்றிக்கடனை நிறைவேற்றுகின்றனர். ஆலய முகப்பில் பின்னிப் பிணைந்து காட்சி தரும் தலவிருட்சங்களை வலம் வந்து அன்னையை பிரார்த்தனை செய்தால் மனம் வேறுபட்டு பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்வதுடன் அவர்கள் வாழ்க்கையில் பசுமை தழைப்பது நிஜம் என்று சிலிர்ப்போடு கூறுகின்றனர் பக்தர்கள்.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து புதுக் கோட்டை நெடுஞ்சாலையில் 3 கி.மீ தொலைவில் உள்ளது இந்த பச்சை நாச்சி அம்மன் ஆலயம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum