தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெண்களின் கதாபாத்திரங்கள்

Go down

பெண்களின் கதாபாத்திரங்கள் Empty பெண்களின் கதாபாத்திரங்கள்

Post  meenu Mon Jan 21, 2013 2:04 pm

வாழ்க்கையே ஒரு நாடக மேடை என்பார்கள். நிஜம்தான். இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் நிறைய கதாபாத்திரங்களை வகிக்கிறோம். தாய், மனைவி, மகள், சகோதரி, தோழி.. இப்படி, ஒரு பெண் உறவு ரீதியாக பல பாத்திரங்களை வகிக்கிறாள். வீட்டில் அவளுக்கு குடும்பத் தலைவி கதாபாத்திரம்.

அவளே வேலைக்குப் போகும் பெண்ணாகவும் இருந்தால், அலுவலகத்தில் மேனேஜர், கிளார்க், சேல்ஸ் கேர்ள், துணி தைப்பவர், துப்புரவு பணியாளர் போன்ற ஏதாவது ஒரு பாத்திரத்தை வகிக்கவேண்டியிருக்கும். ஒரு ஆண் என்றால் அவரும், உறவு ரீதியான கதாபாத்திரங்களை- அலுவல்ரீதியான காதபாத்திரங்களை வகிக்கவேண்டியதிருக்கிறது.

இப்படி ஆண்-பெண் அனைவரும் வயது வித்தியாசமின்றி ஒவ்வொரு நாளும் அவரவர் கதாபாத்திரங்களோடு ஒன்றி, அதுவாகவே வாழவேண்டியிருக்கிறது.சரி. சினிமாவிலோ, நாடகத்திலோ ஒரு நடிகர், கதாபாத்திரமாக மாறி நடிக்கும்போது, `அவர் பொறுப்பை உணர்ந்து நன்றாக நடித்திருக்கிறார் என்றோ, நன்றாக நடிக்கவில்லை என்றோ நம்மால் சொல்ல முடிகிறது'.

ஆனால்...

- ஒரு அம்மா, அவரது நிஜ வாழ்க்கை பாத்திரத்தை சரியாக செய்துகொண்டிருக்கிறாரா?

- ஒரு அப்பா, அவரது நிஜவாழ்க்கை பாத்திரத்தை சரியாக செய்துகொண்டிருக்கிறாரா?

- அலுவலக அதிகாரி ஒருவர் தனது அந்த பொறுப்பை உணர்ந்து தனது பாத்திரத்தை சரியாக செய்கிறாரா? நல்ல கேள்விகள்தான்.

இதற்கெல்லாம் என்ன பதில் என்று கேட்கிறீர்களா! அப்பா என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும். அம்மா என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும். அதிகாரி என்றால் இப்படித்தான் செயல்படவேண்டும் என்று ஒரு `இமேஜை' நாம் உருவாக்கிவைத்திருக்கிறோம். ஒரு அலுவலகம். அங்கு ஒருவர் அதிகாரி.

இன்னொருவர் வாட்ச்மேன். அலுவலக பணிகளில் மட்டுமே அவர் உயரதிகாரி. இவர் வாட்ச்மேன். அந்த பாத்திரம் அலுவலகத்தோடு நிறைவடைந்துவிடும். அலுவலகத்திற்கு வெளியே இருவரும் சக மனிதர், நண்பர் என்ற கதாபாத்திரத்திற்கு மாறிவிடவேண்டும். ஆனால் பெரும்பாலான உயரதிகாரிகள், அலுவலகத்திற்கு வெளியேயும் தங்களை உயரதிகாரிகளாகத்தான் வைத்திருக்கிறார்கள்.

வாட்ச்மேனை வெளி இடங்களிலேயும் வாட்ச்மேன் ஆகத்தான் பார்க்கிறார்கள். `தான் உயரதிகாரி. மறந்தும்கூட சிரிக்கவோ, சகஜமாக பழகவோமாட்டேன். அலுவலகத்தில் இருக்கும் அதே தோரணையுடன்தான் பழகுவேன்' என்று, அதிகார போர்வையை தன்மேல் எப்போதும் போர்த்திக்கொள்ளும் நிலையில் இருந்து அவர்கள் மாறவேண்டும். பல பெண்கள் உயரதிகாரிகளாக இருக்கிறார்கள்.

அவர்கள் தன்னோடு அலுவலகத்தில் வேலை பார்க்கும் சக ஊழியர்களுக்கு மரியாதை கொடுத்து பழகுவார்கள். அந்த பெண் அதிகாரி வீட்டில் ஒன்றோ, இரண்டோ பெண்கள் வீட்டு வேலை பார்த்துக்கொண்டிருப்பார்கள். அந்த பணிப்பெண்களிடம் அந்த உயரதிகாரிகளான பெண்கள் நிறைய வித்தியாசம் காட்டுவார்கள்.

கடுகடு முகத்தோடு அவர்களை எதிர்கொள்வார்கள். அலுவலக அதிகாரியாக இருப்பவரும் பெண். வீட்டு வேலை பார்ப்பவரும் பெண். அவர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறார். இவர், வீட்டில் வேலை பார்க்கிறார். அவரது வேலை பைல் பார்ப்பது, முடிவெடுப்பது, கையெழுத்து போடுவது போன்றவை. பாத்திரம் தேய்ப்பது, சமையல் செய்வது, வீட்டை சுத்தம் செய்வது போன்றவை இவரது வேலை.

அவரவர் செய்யும் வேலைக்கு தக்கபடி அவரவருக்கு சம்பளம் கிடைக்கிறது.`தன்னை விட அந்த வேலைக்காரப் பெண்ணுக்கு சம்பளம் குறைவு. தன்னைவிட நடை, உடை, பாவனையில் அவர் ஜொலிப்பு குறைவு. வாழ்க்கை சவுகரியங்களை அனுபவிப்பதில் பொருளாதார ரீதியாக அவர்கள் பின்னடைவாக இருப்பதை உணர்ந்து, தன்னைவிட அவர் குறைந்தவர்' என்ற எண்ணத்தை உருவாக்கிக்கொள்கிறோம்.

அதனால்தான் வேலைக்காரப் பெண்களிடம் பேசும் முறை, அவர்களிடம் நடந்துகொள்ளும் விதம் போன்ற அனைத்தும் மரியாதைக் குறைவாக இருக்கிறது. ஒரு மனிதரின் மதிப்பை அவரிடம் இருக்கும் பொருட்கள், பதவி, பணம் போன்றவைகளைவைத்துதான் முடிவு செய்கிறோம். அது தவறு என்பதை நாம் உணர்ந்தாலும், அந்த குணாதிசயத்தை எளிதாக மாற்றிக்கொள்ள முடியாத நிலையில்தான் இருக்கிறோம்.

மன்னிக்கும் குணம் என்பது நல்லது. பட்டம், பதவி, பளபளவென்று இருப்பவர்கள் தவறு செய்தால், `அவர் ரொம்ப ஸ்மார்ட் ஏனோ அப்படி பண்ணிட்டார்' என்று மன்னிக்கும் நாம்- நமது குழந்தைகள் தவறு செய்தால், `புரியாமல் வெகுளித்தனமாக ஏதோ பண்ணிட்டான்' என்று மன்னிக்கும் நாம்- வீட்டு வேலைக்கார பெண் செய்யும் தவறை மட்டும் மன்னிக்காமல், `அவள் இப்படி பண்ணிட்டாள்.

அப்படி பண்ணிட்டாள்' என்று கூறி, அந்த விஷயத்தை பெரிதாக்குகிறோம். இப்படி மன்னிப்பில் காட்டும் பாரபட்சத்தை களைந்து எல்லோரையும் மன்னிக்க பக்குவப்படவேண்டும். திருடுவது தவறான குணம். ஆனால் யார் திருடுகிறார்கள் என்பதைப் பொறுத்து அதை சாதாரணமானதாகவோ, அசாதாரணமாகவோ ஆக்குகிறோம்.

பொதுவாக வீட்டில் பணம் திருடு போய்விட்டாலே, யார் திருடியிருப்பார்கள் என்ற கேள்வி எழும்போது, தனது வீட்டோடு தொடர்புடையவர்களில் யார் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கிறார்களோ அவர்கள்தான் திருடி இருப்பார்கள் என்று பலரும் முடிவு செய்துவிடுகிறார்கள்.

அப்படிப்பார்த்தால் பெரும்பாலும் வசதிபடைத்தவர்கள், தங்கள் வீட்டில் வேலைபார்க்கும் பெண்தான் அதை எடுத்திருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அதை ஆதாரபூர்வமாக அறிவதற்கு முன்னால் அந்த பெண்ணைப் பற்றி தனக்குள் தப்பான எண்ணத்தை உருவாக்கிக்கொள்வது சரியல்ல! அந்த பெண்ணே எடுத்தார் என்பதை ஆதாரபூர்வமாக அறிந்தால்கூட, அவளை வேலையில் இருந்து நிறுத்திவிட நமக்கு உரிமை இருக்கிறது.

தேவையற்ற வார்த்தைகளைப் பேசி அவள் மனதை வேதனைப்படுத்தி, அதையும் பலரிடம் கூறிக்கொண்டிருப்பது நமது எண்ணத்திற்கு நாமே செய்யும் தீங்காகும். அப்படி ஒரு தீங்கை நாம் செய்தால், `இங்கே திருடிய பெண், எப்போதும்- எங்கேயும் திருடுவாள்' என்றோ, `வீட்டு வேலை செய்யும் எல்லா பெண்களும் இப்படித்தான்' என்றோ நமக்குள் எண்ணங்கள் உருவாகும். அவை நமக்கு மனஅழுத்தத்தை தரும்.

அதனால் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் பின்னணி பார்க்காமல் மன்னிப்போம். மன்னித்தால் நமக்கு அது மறந்துவிடும். அப்படி குற்றங்களை நாம் மறப்பது நமது மனதிற்கு செய்யும் நல்ல காரியமாகும். தவறை மன்னிக்கும் நல்ல குணம் நம் அனைவரிடமும் இருக்கிறது. ஆனால் அதை எல்லோரிடமும் பயன்படுத்தாமல் பாகுபாடு காட்டி, பயன்படுத்துகிறோம்.

நமக்குள் நிறைய அன்பு இருக்கிறது. நமக்குள் நிறைய இனிய சொல் இருக்கிறது. நமக்குள் நிறைய கருணை இருக்கிறது. ஆனால் அதை யாரிடம் காட்டுவது என்பதில்தான் நாம் பாகுபாடு காட்டுகிறோம். நமக்குள் இருக்கும் நல்லவை அனைத்தையும் சிலரிடம் மட்டும் காட்டுகிறோம். பலரிடம் காட்டாமல் நல்லவைகளை பதுக்கிவைத்துக்கொண்டு, கெட்டவைகளை மட்டும் வெளிப்படுத்துகிறோம்.

நம்மிடம் பணம் இருக்கிறது. அதை நாம் வெளிக்காட்டி நம்மை அந்தஸ்து மிக்கவராக உயர்த்திக்கொள்கிறோம். நம்மிடம் கல்வி இருக்கிறது. அதை வெளிக்காட்டி நம்மை கல்வி அறிவுமிக்கவராகவும் காட்டிக்கொள்கிறோம். இந்த இரண்டையும் காட்டும் நாம் நம்மிடம் இருக்கும் நல்லகுணங்களை வெளிக்காட்டி நம்மை சிறந்த மனிதர்களாக்க மட்டும் ஏன் தயங்குகிறோம். நம்மிடம் இருக்கும் விலைமதிக்க முடியாத நல்ல குணங்களை நாம் வெளிக்காட்டினால் உண்மையிலே நம் நிலை உயர்ந்துவிடும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum