தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வனயுத்தம் பதினோரு வருட உழைப்பு: உருகுகிறார் ஏ.எம்.ஆர். ரமேஷ்

Go down

 வனயுத்தம் பதினோரு வருட உழைப்பு: உருகுகிறார் ஏ.எம்.ஆர். ரமேஷ் Empty வனயுத்தம் பதினோரு வருட உழைப்பு: உருகுகிறார் ஏ.எம்.ஆர். ரமேஷ்

Post  ishwarya Wed Mar 13, 2013 11:52 am

தடைகளை வென்று திரைக்கு வந்திருக்கிறது, ‘வனயுத்தம்’. 11 வருட ஆய்வு, ஒரு வருட படப்பிடிப்பு, ஒரு வருட போராட்டம் என அத்தனையையும் கடந்து வந்திருக்கிறார் இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். ‘‘வீரப்பன் கதையை படமாக எடுத்தால் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் என்று எனக்குத் தெரியும். பிரச்னைக்குரிய படங்களை எடுத்து பரபரப்பு விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டும் என்று எப்போதும் விரும்பியதில்லை. முக்கியமான நிகழ்வுகளின் உண்மைகளை மக்களுக்கு என் படைப்புகள் மூலம் தர வேண்டும் என்பதுதான் என் குறிக்கோள். அப்படிச் செய்யும்போது பிரச்னை வருவது சகஜம்தானே.

ராஜீவ்காந்தி கொலையை வச்சு ‘குப்பி’ எடுத்தபோதும் பல பிரச்னைகளை சந்தித்தேன். படம் வெளிவந்த பிறகு காவல் துறை தரப்பில் இருந்தும், விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்தும் பாராட்டு கிடைத்தது. காரணம், உண்மையை உள்ளபடி சொன்னதாலதான். ‘காவலர் குடியிருப்பு’ படத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது பெங்களூர்ல நடந்தது என்ன என்பதை காட்டியதற்கும் எதிர்ப்பு வந்தது. தணிக்கை குழுவுடன் போராடி அந்தப் படத்தை கொண்டு வந்தேன். இப்போ ‘வனயுத்தம்’. இதுல வீரப்பனை ஹீரோ என்று சொல்லவில்லை. வில்லன் என்றும் சொல்லவில்லை. அப்படிச் சொல்வதும், ஆராய்வதும் என் வேலை இல்லை. காட்டுக்குள் என்ன நடந்தது என்பதை காட்டுகிறேன். அவற்றில் சில மக்களுக்கு தெரிந்தவை, பல தெரியாதவை. போலீஸ் பக்கம்தான் நியாயம் என்றோ, வீரப்பன் செய்ததுதான் சரி என்றோ எந்த இடத்திலும் சொல்லவில்லை. வனத்துக்குள் நீண்ட நாள் நடந்த ஒரு யுத்தத்தை மக்களின் பார்வைக்கு கொண்டு வந்திருக்கிறேன். கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலை முன்னிலைப்படுத்தி அதன் வழியாக கதை சொல்லியிருக்கிறேன். ராஜ்குமார் கடத்தல் சம்பவம் பற்றி ஒவ்வொரு நிமிடத்துக்கும் ரிகார்ட்ஸ் இருக்கிறது. அதைத்தான் படமாகப் பதிவு செய்திருக்கிறேன். உண்மையை அப்படியே காட்டியிருக்கிறேன்.

படத்தை எதிர்த்து வீரப்பன் மனைவி கோர்ட்டுக்குச் சென்றார். அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. படத்தில் அவர்கள் குடும்பம் பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். ஆனால், படத்தில் அப்படி ஏதும் இல்லை. கோர்ட்டில் நாங்கள் எங்கள் நிலையை விளக்கினோம். கடைசியில் படத்தில் வீரப்பன் மனைவி வரும் சில காட்சிகளை கோர்ட் நீக்கச் சொன்னது. நீக்கிவிட்டு படத்தை ரிலீஸ் செய்துள்ளோம். இந்த காட்சி நீக்கத்தால் படத்துக்கு பாதிப்பு ஒன்றும் இல்லை. இந்தப் படத்தை தமிழக ரசிகர்களைப் போலவே கன்னட ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள். போலீஸ் அதிகாரிகளும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தமிழ், கன்னடம் தவிர தெலுங்கில் படத்தை டப் செய்திருக்கிறோம்.

வீரப்பனாக கிஷோரின் நடிப்பு அவ்வளவு பாராட்டும்படியாக இருக்கும். முதலில் நானே கூட இப்படி நினைக்கவில்லை. வீரப்பனாக அப்படியே பொருந்தியிருக்கிறார் கிஷோர். அவர் மனைவியாக விஜயலட்சுமி நடித்திருக்கிறார். அர்ஜுன் போலீஸ் அதிகாரி. வழக்கமான போலீஸ் அதிகாரியாக இல்லாமல் கமாண்டோ அதிகாரியாக வருகிறார். வீரப்பன் வாழ்ந்த இடங்களான சத்தியமங்கலம் பகுதி காட்டிலேயே படம் பிடித்திருக்கிறோம். இதில் விஜய் மில்டனின் ஒளிப்பதிவு கண்டிப்பாக பேசப்படுவதாக இருக்கும். இதுபோல உண்மை சம்பவங்களை படமாக எடுப்பதை விட்டுவிட்டு கமர்சியல் சினிமா எடுக்கலாமே என்கிறார்கள். கமர்சியல் சினிமா செய்ய நிறைய பேர் இருக்கிறார்கள். பணம் போட்டு பணம் எடுக்கிற எதுவாக இருந்தாலும் அது வியாபாரம். நான் சினிமாவில் வியாபாரம் செய்ய வரவில்லை. மக்களுக்கு உண்மையை சொல்லும் ஒரு கருவியாக சினிமாவை பயன்படுத்திக் கொள்கிறேன். போராட்டத்தின் மூலம் கிடைக்கிற வெற்றியை விட, பணம் பெரிய சந்தோஷத்தை கொடுத்து விடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாலிசி இருக்கிறது. என் பாலிசி இது. இதில் என் பயணம் கடைசிவரை இருக்கும். அடுத்து விடுதலைப் புலித் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையை படமாக எடுக்க இருக்கிறேன். அதுவும் எனக்கு சவாலான விஷயம்தான்...’’ என்கிறார் ஏ.எம்.ஆர்.ரமேஷ்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum