தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆடிப்பூரம் : வளங்களை வாரி வழங்கும் வளையல் பிரசாதம்

Go down

ஆடிப்பூரம் : வளங்களை வாரி வழங்கும் வளையல் பிரசாதம்  Empty ஆடிப்பூரம் : வளங்களை வாரி வழங்கும் வளையல் பிரசாதம்

Post  ishwarya Sat Feb 16, 2013 5:30 pm

ஆடி மாதம் கடக ராசியான சந்திரன் வீட்டில் சூரியனும், சூரியனின் ராசியான சிம்மத்தில் சந்திரனும் பரிவர்த்தனை யோகத்தில் சஞ்சரிக்கும் நள வருடம்,
சனிக்கிழமை, பூரம் நட்சத்திரம், சுக்லபட்சம், சதுர்த்தசி திதி கூடிய நன்னாள் அது, ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் நந்தவனத்தில் விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார்
பூ பறித்துக் கொண்டிருந்தார். அப்போது, புதர் மண்டியிருந்த இடத்தில் இருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது. அங்கு சென்றவர் துளசி செடியின் அடியில் கை, கால்களை உதைத்துக் கொண்டு அழகிய பெண் குழந்தை இருப்பதை பார்த்து ஆச்சரியம் மேலிட்டார்.

குழந்தையை கையில் எடுத்து உச்சி முகர்ந்தார். ஆண்டவன் தனக்கு அருளிய குழந்தை என்று ஆனந்தம் அடைந்தார். ‘கோதை’ என்று பெயர் சூட்டி அன்போடும், பாசத்தோடும் வளர்த்து வந்தார். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாக வளர்ந்த கோதைக்கு பரந்தாமன் மீது பக்தி அதிகரித்தது. சகல சாஸ்திர ஞானங்கள் இயற்கையாகவே மளமளவென்று வர ஆரம்பித்தது. பல பாசுரங்களையும், திருமொழி நூல்களையும் பாற்கடல் வாசன் மீது பாடினார்.
இதற்கிடையில் தீவிர பக்தியானது காதலாக மாறியது. கனவில் மட்டுமின்றி, நிஜத்திலும் கண்ணனை தன் மணாளனாக நினைக்க ஆரம்பித்தாள். ஒரு கட்டத்தில் திருவரங்கனையே மணப்பது என்ற உறுதியும் பூண்டாள்.

தினமும் பூ பறித்து அதை மாலையாக தொடுத்து பெருமாளுக்கு சாற்றுவது பெரியாழ்வாரின் வழக்கம். அந்த திருப்பணியை அவர் செவ்வனே செய்து வந்தார்.
ஒருநாள் அங்கு வந்த கோதை, ‘என் மனதுக்கு பிடித்தவன் அணியப்போகும் மாலைதானே.. நான் அணிந்துவிட்டு கொடுத்தால்தான் என்ன’ என்று நினைத்து அந்த மாலையை அணிந்து அழகு பார்ப்பாள். மீண்டும் அதை பழையபடி வைத்துவிடுவாள். இது பல நாட்களாக தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது.
ஒருநாள் வெளியே சென்றுவிட்டு அவசரமாக வீட்டுக்கு வந்த பெரியாழ்வார், பெருமாளுக்கான மாலையை கோதை சூடி அழகு பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து
பதறி விட்டார். ‘அபசாரம், அபசாரம்.

ஆண்டவனுக்காக தொடுத்து வைத்திருக்கும் மாலையை சூடலாமா’ என்று கோபத்துடன் கடிந்துகொண்டார். பின்பு அவசர அவசரமாக பூக்களை தொடுத்து புதுமாலையை எடுத்துக்கொண்டு போய் பெருமாளுக்கு சாற்றினார்.அன்று இரவு பெரியாழ்வார் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவரது கனவில் அரங்கன் தோன்றி, ‘கோதை என்மீது மிகுந்த பிரியமும் பக்தியும் வைத்திருக்கிறாள். அவள் சூடிக் கொடுத்த மாலையை தினமும் மிகுந்த அன்புடன் ஏற்று வந்தேன்.

இன்று என்னவாயிற்று?’ என்று கேட்கிறார். பரந்தாமனே இப்படிக் கேட்டதில் பெரியாழ்வாருக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். கோதையின் பக்தியை உணர்கிறார். பக்தியாலும், அன்பாலும் பரமனையே அவள் வசப்படுத்தியிருப்பதை உணர்ந்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். பகவானின் உள்ளத்தையே ஆண்ட கோதையை அன்று முதல் ‘ஆண்டாள்’ என்ற திருநாமம் சூட்டி அழைத்தார். பெருமாளின் விருப்பத்துக்கு ஏற்ப அவள் சூடிக் கொடுக்கும் மாலையையே பெருமாளுக்கு சாற்றி வந்தார். ஆண்டாளுக்கு உரிய வயது வந்தவுடன் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கிறார் பெரியாழ்வார். ஆனால் ஆண்டாளோ, ‘ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பெருமாளே என் காதலன். அவரன்றி வேறொருவரை மனதால்கூட நினைக்க முடியாது’ என தீர்க்கமாக
சொல்லிவிட்டாள். குழப்பத்தில் இருக்கும் பெரியாழ்வாருக்கு மீண்டும் கனவில் தோன்றிய அரங்கன், ‘ஆண்டாள் விருப்பப்படியே திருவரங்கத்திற்கு அழைத்து வா’ என்று சொல்லி மறைகிறான்.

‘கனவில் வந்து இறைவன் சொன்னது உண்மைதானா? கனவில் சுவாமி சொன்னார் என்றால் யாரும் சிரிக்க மாட்டார்களா? எதை நம்பி ஆண்டாளை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்துப் போவது?’ என்றெல்லாம் ஆயிரமாயிரம் சந்தேகத்துடனும், தயக்கத்துடனும் ஆண்டாளுடன் ஸ்ரீரங்கம் வந்தடைந்தார் பெரியாழ்வார். ஊர் எல்லையில் ஏராளமான வேத விற்பன்னர்கள், பொதுமக்கள் திரளாக கூடியிருந்ததை பார்த்ததும் ஏதோ திருவிழா என்று நினைக்கிறார். வந்திருப்பது
பெரியாழ்வாரும், ஆண்டாளும் என்று தெரிந்து கொண்டதும், வேத விற்பன்னர்களும், ஆலய முக்கியஸ்தர்களும் ஓடோடி வந்து வரவேற்று வணங்குகிறார்கள் ‘தன்னை மணந்துகொள்ள சாட்சாத் மகாலட்சுமியே வருவதாக எங்கள் கனவில் அரங்கநாத பெருமான் நேற்று சொன்னார்.

மகாலட்சுமியை வரவேற்கத்தான் திரண்டிருக்கிறோம். சூடிக்கொடுத்த சுடர்க்கொடியை பெருமாள் திருமணம் செய்துகொள்வதாக கூறியிருப்பதால் கல்யாண வைபவத்துக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்திருக்கிறோம்’ என்கிறார்கள். அரங்கனின் திருவுளத்தை எண்ணி மெய்சிலிர்க்கிறார் பெரியாழ்வார். அதே நேரத்தில் சடங்கு, சம்பிரதாயங்களுக்கு காத்திருக்கும் அளவுக்கு ஆண்டாளுக்கு பொறுமை இல்லை. ‘ஸ்ரீரங்கா’ என்று உரக்க கூறியபடியே கோயில் கருவறைக்கு ஓடுகிறாள். அக்கணமே ஆண்டவனுடன் ஐக்கியமாகிறாள். பகவானின் கைத்தலம் பற்றி, வடிவால் அவன் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையாக அருள்பாலிக்கிறாள். இதுவே ஆண்டாளின் திவ்ய சரித்திரமாகும்.

ஆடிப்பூர நாயகியான ஆண்டாள் இறைவனுடன் இரண்டற கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் 2 நூல்களை நமக்கு அருளித் தந்துள்ளார். எப்படி வாழ வேண்டும், எப்படி பக்தி செலுத்த வேண்டும் என்பதை இந்த பாசுரங்களில் உணர்த்தியிருக்கிறார். இதில் திருப்பாவை என்னும் ‘சங்கத் தமிழ் மாலை’ 30 பாசுரங்கள் கொண்டது. மார்கழி மாதம் பாவை நோன்பு நோற்று தினமும் ஒரு பாடல் வீதம், மாதம் முழுவதும் ஒவ்வொரு பாடலாக பாடி
இந்த பிறவி பெருங்கடலை நீந்திக் கடக்க அருள்புரிந்துள்ளார். நாச்சியார் திருமொழி 143 பாடல்கள் கொண்ட தொகுப்பாகும். இதில் ‘வாரணமாயிரம்’ என
தொடங்கும் பத்து பாடல்கள் திருமண பாடல்களாகும்.
இவை இரண்டையும் பக்தி சிரத்தையுடன் படிக்க தீங்கின்றி நாடெங்கும் மழை பொழியும், கன்னிப் பெண்களுக்கு தடைகள், தோஷங்கள் நீங்கி திருமண பிராப்தம் கூடிவரும் என்பது ஐதீகமாகும். ஆடிப்பூர நாளில் அம்மன், அம்பாள், பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடக்கும். ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட தலங்களில் திருத்தேரோட்ட உற்சவம் நடக்கும். அன்னை ஆதிபராசக்தி சுயம்புவாக அருள்பாலிக்கும் மேல்மருவத்தூரிலும் ஆடிப்பூர உற்சவம் வெகு விமரிசையாக நடக்கிறது. எல்லா கோயில்களிலும் அம்மன், அம்பாளுக்கு வளையல் சாற்றுவார்கள், பக்தர்கள் காணிக்கையாக தரும் வளையல்களை அம்மனுக்கு சாற்றிவிட்டு பின்னர் அதை மங்கள பிரசாதமாக தருவார்கள். இதை அணிந்துகொண்டால் திருமண பாக்யம், குழந்தை பாக்யம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்நாளில் சகல நலங்களையும், வளங்களையும், நீங்காத செல்வத்தையும் பெற அவள் பாதம் பணிவோமாக.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum