தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 56

Go down

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 56 Empty புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 56

Post  meenu Wed Feb 06, 2013 1:26 pm


கேளப்பா குடினாதன் ஆட்சிஉச்சம்
கெட்டவர்கள் கண்ணுற்று நோக்கினாலும்
சூளப்பா சுகமில்லை களவுபோகும்
சோரு துணிக்குக் கையேந்தி நிற்கச்செய்யும்
ஆளப்பா அகத்திலே துன்பங்காணும்
அப்பனே அரண்மனையார் பகையுண்டாகும்
கூளப்பா கூட்டுறவு பிரிந்து போகும்
கொற்றவனே கொடுந்துன்பம் விளையும் பாரே.


இன்னொரு கருத்தையும் நீ உன்னிப்பாகக் கவனித்துக் கேட்பாயாக. இலக்கினாதிபதி ஆட்சி உச்சம் எய்திடினும் தீயகோள்கள் பார்வை பெறின் அச்சாதகனின் இல்லத்தில் களவு போகும். அவன் சோற்றுக்கும் துணிக்கும் கையேந்தி நிற்கும் நிலையும் ஏற்படும். அவன் மனையில் துன்பமே மிகும். அரசாங்கப்பகையும் அவனுக்கு உண்டாகும். கூட்டு வாணிகம் புரிந்தவர்களும் கூட்டுறவோடு இருந்தவர்களும் பிரிவர். கொடுந்துன்பம் விளையும் என்பதையும் குறித்துச் சொல்வாயாக.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 57



சீரே நீகுருவுக்கு வியமாறெட்டில்
செழுமதியும் மதிலிருக்க சகடயோகம்
ஆரே நீ அமடுபயம் பொருளும் நஷ்டம்
அப்பனேபேர் விளங்கும் நிதியுமுள்ளோன்
கூறே நிகுருவுக்கு கேந்திரகோணம்
குழவிக்கு நிதி கல்வி மெத்தவுண்டு
பாரே நீபோகருட கடாக்ஷத்தாலே
பாடினேன் புலிப்பாணி பதமாய்த்தானே


நான் கூறும் ஒரு சிறப்பினையும் நீ குறித்துக் கேட்பாயாக. குருபகவானுக்குப் பன்னிரண்டு, எட்டு, ஆறு ஆகிய இடங்களில் சிறந்த சந்திர பகவான் இருக்க ஏற்படுவது சகடயோகம் ஆகும். அதனால் ஏற்படும் பலன்கள் என்னவெனின் அமடு, பயம், பொருட்சேதம், எனினும் நற்கீர்த்தியே வாய்க்கும். நிதியும் சிறந்து காணும். இன்னுமொன்று குரு 1,4,7,10 மற்றும் 1,5,9 ஆகிய இடங்களில் இருக்க அச்சாதகனுக்கு கல்விச்சிறப்பு மெத்தவும் உண்டாகும். எனது சற்குருவான போகமாமுனிவரது கருணா கடாட்சத்தை முன்னிறுத்தி நான் (புலிப்பாணி) இதனைப் பதமாகப் கூறினேன்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 58


பாரப்பா பனிரெண்டில் மதியும்நிற்கப்
பகருகின்ற பவுமனுமே மதிக்குயெட்டில்
சீரப்பா செவ்வாய்க்கு யெட்டிதீயர்
சிவசிவா சென்மனுமோ அன்னியபீசம்
ஆரப்பா அயன்விதியை அரையலாமோ
அப்பனே அனலனொடு குளிகன் சேர்ந்து
கூறப்பா குடியிருக்க அட்டமத்தில்
கொற்றவனே அவைபோலே கூறுவாயே.


இன்னொரு சேதியையும் நீ கேட்பாயாக! 2ஆம் இடத்தில் சந்திரன் நிற்க மதிக்கு எட்டில் அந்த செவ்வாய் நிற்க அச் செவ்வாய்க்கு எட்டில் தீக்கோள்கள் நிற்பினும் சிவபரம் பொருளின் பேரருட் கருணையால் அச்சாதகன் அன்னியபீசம் என்றே கூறுக. அதேபோல் பிரமன் படைப்பின் விந்தை இன்னுமொன்றுளது. சூரியனோடு குளிகனும் இலக்கினத்திற்கு அட்டமத்தில் கூட அச்சாதகன் அன்னிய பீசமே என்று கூறுக.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 59


பாரப்பா பால்மதிக்கும் நான்கில்வெள்ளி
பாங்குள்ள வெள்ளிக்கு நான்கில் இந்து
ஈரப்பா இல்லுக்கு இவர்கள்நான்கில்
இடிபோலே குமுறுமடா தாரையோகம்
சீரப்பா சென்மனுக்கு சிவிகைகிரீடி
சிறப்பான வாகனமும் நிலமும் செம்பொன்
கூறப்பா போகருட கடாட்சத்தாலே
குடினாதன் பெலமறிந்து கூறுவாயே.


புலிப்பாணி போக மகா முனிவரின் பேரருட் கருணையாலே கூறுகின்ற மற்றொரு கருத்தையும் நீ கேட்பாயாக! வளர்பிறைச் சந்திரனுக்கு நான்கில் சுக்கிரனும் அதே போல் சுக்கிரனுக்கு நான்கில் மதியும் நிற்கவும் அல்லது இலக்கினத்திற்கு நான்கில் இவர்கள் இருப்பினும் இடிமுழக்கம் செய்து வருவது போலக் குமுறிக் கொண்டு வரும் தாரை யோகம் ஆகும். இப்படிப்பட்ட சிறப்புடைய அமிசம் பெற்ற சாதகனுக்கு சிவிகையும்,விளைவயல் மற்றும் சிறப்பான வாகன யோகமும் நிலமும், செம்பொன்னும் நிறைந்த அளவில் வந்து சேரும். இதனை இலக்கினாதிபதியின் பலம் அறிந்து கூறுவாயாக.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 60


பாரப்பா பதினைந்து நாளிலேயும்
பகருகின்ற பால்மதியும் வெய்யோனைத்தான்
சீரப்பா சீறியே அரவந்தீண்டில்
செத்திடுவர் போர்முகத்தில் அனந்தம்மன்னர்
ஊரப்பா ஊரெங்கும் பேதி அம்மை
உத்தமனே கவுமாரி யாலேசீக்கு
பாரப்பா மன்னர்களு மடியாவிட்டால்
மகத்தான அன்னமது அரிதாம், பாரே


இன்னொரு கருத்தையும் நன்கு கவனிப்பாயாக! வளருகின்ற கலையால் பதினைந்து நாள்களில் உயர்வு பெறும் சந்திரனையும் மற்றும் சூரியனையும் (இராகு கேது ஆகிய) பாம்பு சீறித் தீண்டும் சீர் பெறில் போர் முகத்தில் அனெகம் மன்னர் இறந்தொழிவர்; ஊரெங்கும் கொள்ளை நோயும், அம்மை பேதி போன்ற தீய வியாதிகளும் கெளமாரியின் கருணையினால் உத்தமனே வந்து வாய்க்கும். அவ்வாறு மன்னர்கள் மடியாவிடின் பெருமைக்குரிய அன்னமது கிடைப்பது அரிதாகிப் போகும்
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 61


பாரப்பா இரு ஐந்தில் புந்திநிற்க
பகருகின்ற பரமகுரு யேழில்நிற்க
ஆரப்பா அசுரகுரு யெட்டில் நிற்க
அப்பனே மீனத்தில் அருக்கன் பிள்ளை
வீரப்பா வில்வளவில் சேயும் நிற்க
விளங்குகின்ற மற்றோர்கள் யெங்கும்நிற்க
கூறப்பா குமரனையுங் கண்டுங்காணார்
குவலயதில் தேவனென்று கூறினேனே


மற்றொரு கருத்தையும் நீ கேட்பாயாக! இலக்கினத்திற்குப் பத்தில் புதன் நிற்க எல்லாராலும், புகழ்ப்படும் குரு பகவான் ஏழாம் இடத்தில் நிற்க அதே நேரத்தில் அசுர குருவான சுக்ராச்சாரியார் எட்டில் நிற்க அப்பனே! மீனத்தில் சூரியகுமாரனான சனியும், தனுசில் செவ்வாயும் நிற்கவும், பிற இடங்களில் வேறு கிரகங்கள் நிற்கவும் பிறந்த குமாரனைப் பிறர் கண்டும் காணார் என்றும் இந்நிலவுலகத்தில் தேவன் அவனே என்றும் போகமா முனிவரின் கருணாகடாட்சம் பெற்ற புலிப்பாணி கூறினேன்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 62


ஆமென்ற செவ்வாயும் ராகுமாந்தி
அப்பனே ரெண்டோனைக் கூடிநிற்கில்
போமென்ற பூதலத்தில் பரமன்பூசை
புகழ்பெரிய அய்யனோடு ருத்திரன் ருத்திரி
ஓமென்ரே ஓங்காளி வீரபத்திரன்
ஓதிடுவன் ஆகாச மாடந்தானும்
தாமென்ற போகருட கடாட்சத்தாலே
தப்பாமல் செய்திடுவன் சென்மந்தானே


இன்னுமொன்று கூறுகிறேன் கேட்பாயாக! செவ்வாயும் ராகுவும் மாந்தியுடன் இலக்கினத்திற்கு இரண்டிற்குரியவனைக் கூடி நிற்பின் அச்சென்மன் இப்பூதலத்தில் சிவ பூஜையும், பெரிய புகழ் உடைய ஐயனார். மற்றும் உருத்திரன், உருத்திரி, ஓங்கார வடிவினளாம் காளி மற்றும் வீரபத்திரன் மற்றும் ஆகாசமாடன் ஆகியோருடைய பூஜைகளையும் செய்யும் தேவதை வசியன் என்று போகருடைய கருணையாலே புலிப்பாணி கூறினேன்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 63


தாமென்ற அம்புலிக்கு நாலாமாதி
தயவாக லெக்கினத்து நாலோன் தானும்
யேனென்ற யெவ்விடத்தில் கூடிட்டாலும்
இதமாக அசுரகுரு இணங்கி நிற்க
தேனென்ற தேவிபரா துர்க்கை பூசை
திடமாகச் செய்திடுவன் வராகியோடு
கோனென்ற கொடியோர்கள் எதிர்நில்லார்கள்
கொற்றவனே வசியனடா கூறுகூறே


சிறப்புடைய சந்திரனுக்கு நான்கிற்குடையவனும் அதே போல் இலக்கினத்திற்கு நான்கிற்குடையவனும் இராசி மண்டலத்தில் எவ்விடத்தில் கூடி நின்றாலும், அதற்கு இதமாக அசுர குரு இணங்கி நிற்கவும், தேன் போன்று இனிமை செய்யும் தேவி பராசக்தி என்ற துர்க்கை மீது பேரன்பு பூண்டு பூசை செய்வதோடு வராகி பூஜையும் இணக்கமுறச் செய்வோன் என்றும் எத்தகைய சூழ்ச்சிகளும் கொடியவர்களும் இவனுக்கு எதிர் நிற்க மாட்டார்கள் என்றும் இவனே தேவதை வசியன் என்று திடமாகக் கூறுக.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 64


கேளப்பா ஈரைந்தில் முகோள் நிற்க
கெதியுள்ள சன்னியாசி யோகம்யோகம்
ஆளப்பா அத்தலதில் இருகோள் நிற்கில்
அப்பனே தபசியடா யோகிஞானி
கூளப்பா ஒரு கோளும் குணமாய்நிற்கில்
குவலயதில் புனிதனடா ஞானியோகி
வீளப்பா விண்ணுலகத் தேவரோடு
விதமாக வீற்றிருப்பான் ரிஷிகளோடே


இன்னுமொரு கருத்தைக் கூறுகிறேன் கேட்பாயாக! இலக்கினத்திற்குப் பத்தாமிடத்தில் மூன்று கிரகங்கள் நிற்க கெதிதருகின்ற சன்னியாசி யோகம் என்பர். அதே பத்தாம் இடத்தில் இரண்டு கிரகங்கள் இருப்பின் தபசியாகவும், யோகியாகவும், ஞானியாகவும் இருப்பான். மற்றும் அதே இடத்தில் ஒரு கோள் பலம் பெற்று குணமாக இணக்கத்துடன் நின்றால் அவன் அந்நிலவுலகில் புனிதனாகவும் ஞானியாகவும் யோகியாகவும் விளங்குவதோடு விண்ணுலகில் உள்ள தேவர்களோடு சகல வரிசைகளுடன் ரிஷிகளின் கூட்டத்துடன் உடன் உறைவான்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 65


கூடினேன் கரும்பாம்பு செவ்வாய் நீலன்
கொற்றவனே ஓரிடத்திற் கூடிநிற்க
தெடினேன் தையலிட பொருளுஞ்சேரும்
திடமான மனையுமது கட்டுவானாம்
சூடினேன் சுகமுண்டு சென்மனுக்கு
சுருதிமொழி பிசகாது சிலகாலத்தில்
ஆடினேன் அழுதாலும் வினையும்போமோ
அப்பனே அமடுகளுந் திடமாய்ச்சொல்லே


இன்னுமொரு செய்தியையும் நீ கேட்பாயாக! கரும் பாம்பு எனச் சொல்லப்படும் இராகுவும், செவ்வாயும் நீலன் எனும் சனிபகவானும் ஒருமனையில் கூடிநிற்க ஸ்திரீகளால் தனசேர்க்கை ஏற்படும். கீர்த்திமிகு வீடு கட்டுவான். அச்சென்மனுக்கு சுகம் உண்டு. எனது சற்குருவான போகமகா முனிவரது பேரருட்கருணையால் நான் கூறும் இம்மொழி தவறாது. எனினும் சில வேளைகளில் அழுதாலும் ஊழ்வினைப் பயன் விட்டுப் போகுமா என்ன? எனவே சிற்சில அமடுகளும் (துன்பங்களும்) வந்து சேரும் என்று திடமாகச் சொல்வாயாக.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum