தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 35 - மூன்றாமிடத்தில் மாந்தி

Go down

 புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 35 - மூன்றாமிடத்தில் மாந்தி Empty புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 35 - மூன்றாமிடத்தில் மாந்தி

Post  meenu Wed Feb 06, 2013 1:33 pm

புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 35 - மூன்றாமிடத்தில் மாந்தி


கூறப்பா குளிகனுமே மூன்றில் நிற்க
கொற்றவனே துணைவனுடன் போரும்செய்வன்
வீரப்பா விரதனடா வாய்ச்சமர்த்தன்
விளம்புகிறேன் நாலினுட விவரங்கேளு
பாரப்பா பதி கடந்து கிரியில் வாசம்
பாலனவன் சிலகாலம் வாழ்ந்திருந்து
கூறப்பா போகருட கடாக்ஷத்தாலே
குற்றமில்லை புலிப்பாணி கூறினேனே.


இக்குளிகன் திருதிய ஸ்தானத்தில் அதாவது மூன்றாமிடத்தில் அமையப் பெற்ற சாதகன் தன் தம்பியரோடும், நண்பர்களோடும் போர் செய்பவன் என்பதையும் நீ உணர்ந்து கூறுவதோடு இவன் வாய்ச் சமர்த்தன், நல்ல விரத ஒழுக்கமுள்ளவன் என்பதையும் உணருக. மேலும் நான் கூறுவதைக் கேட்பாயாக. குளிகன் நான்கில் அமையப் பெற்ற சாதகன் தன் பிறப்பிடத்தை விட்டு வேற்றிடம் சென்று, மலைப் பகுதிகளிலும் சில காலம் வாழ்ந்திருப்பன். அதனால் குற்ற மொன்றுமில்லை என்று போக முனிவரின் பேரருட் கருணை கொண்டு புலிப்பாணி கூறினேன். இதை நன்கு ஆய்ந்து தெளிக.

இப்பாடலில் மூன்றாமிடத்தில் மாந்தி என்றும் குளிகன் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 36 - ஐந்தாம் இடத்தில் மாந்தி


கூறினேன் கிரிஅய்ந்தில் முடவன்பிள்ளை
குணமாக வாழ்வனடா சேய்க்குதோஷம்
தேரினேன் வீரனடா சத்துருபங்கன்
திடமாக வாழ்வனடா தனமுள்ளோன்
ஆரினேன் அயன் விதியுமெத்தவுண்டு
அப்பனே அடுத்தோரைக் காக்கும் வீரன்
கூறினேன் குளியனுமே ஆறில் நிற்க.
கொற்றவனே இப்பலனைக் கூறினேனே.


இலக்கனத்திற்கு ஐந்தாம் இடத்தில் சனியின் குமாரனான குளிகனானவன் நிற்கப்பிறந்தவன் குணவானாக வாழ்வான் எனினும் புத்திர தோடம் உடையவனேயாவான். மிகச் சிறந்த வீரனாக இவன் விளங்குவதோடு பகையை ஒழித்தழிக்கும் பாங்கறிந்தவன்; திடமாக வாழ்பவன். வெகுதன தான்ய சம்பத்துடைவன், மேலும் இக்குளிகன் ஆறாமிடத்தில் நிற்கப் பிறந்தவன் நிறைந்த ஆயுள் உள்ளோன். பரோபகாரி, இவனும் வீரனே என்பதனை நன்கு கிரக பலம் அறிந்து கூறுவாயாக.

இப்பாடலில் ஐந்தாம் இடத்தில் மாந்தி என்றும் குளிகன் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 37 - ஏழாம் இடத்தில் மாந்தி



குறித்திட்டேன் குளிகனுமோ ரேழில்நிற்கக்
கொற்றவனே குடும் பிக்குக் கண்டம்சொல்லு
சிரித்திட்டேன் சென்மனுக்கு விவாதத்தாலே
சிவசிவா செம்பொன்னும் நஷ்டமாகும்.
அரித்திட்டேன் அட்டமத்தில் குளிகன்நிற்க
அப்பனே அழும்பனடா ஜலத்தால் கண்டம்
முரித்திட்டேன் போகருட கடாக்ஷத்தாலே
முகரோக முண்டென்று மூட்டுவாயே.


மேலும் ஒரு கருத்தைக் குறித்துச் சொல்வேன் கேட்பாயாக! இலக்கினத்திற்கு ஏழாம் இடத்தில் குளிகன் நிற்கப் பிறந்த சாதகனுக்குக் கண்டம் நேரும். இவனுக்கு விவாதத்தாலே வெகுதன விரயம் சிவனருளாலே சித்திக்கும். அதே போல் எட்டாமிடத்தில் குளிகன் நிற்கப் பிறந்த ஜாதகன் மகா அழும்பன் என்பதோடு நீரால் கண்டம் ஏற்படும் என்பதையும், அறிவித்துக் கொள்ளலாம். என் குருவான போகருடைய கருணையாலே புலிப்பாணியாகிய நான் கூறும் இன்னொன்றையும் நீ அறிந்து கொள்க. இச்சாதகன் முகரோகன் என்பதையும் நீ உணர்த்துவாயாக.

இப்பாடலில் ஏழாம் இடத்தில் மாந்தி என்றும் குளிகன் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 38 - ஒன்பதாம் இடத்தில் மாந்தி



மூட்டுவாய் குளிகனுமோ பாக்கியத்தில்
முகவசியன் அழும்பனடா பிதுர் துரோகி
கூட்டுவாய் குவலயத்தில் தனமுள்ளோன்
குற்றமில்லை கருமத்தின் குறியைக் கேளு
நீட்டுவாய் நீணிலத்தில் கருமிதுரோகன்
நிலையறிந்து நீயறிவாய் அய்யம்வாங்கி
தீட்டுவாய் தின்பனடா விரலேஉச்சம்
சிறப்பாக செப்புவாய் திண்ணந்தானே.


இலக்கினத்திற்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் குளிகன் நிற்கப் பிறந்த ஜாதகன் முகவசியமுடையவன் என்றாலும் அழும்பனாய் பிதுர் துரோகியாய் விளங்குவான். எனினும் இப்பூமியின் கண் நிறை தனம் பெற்று மகிழ்வோனே யாவான். அதனால் குற்றமில்லை எனக் கூறுக. இனி பத்தாம் இடமான கர்ம ஸ்தானத்தில் குளிகன் நிற்கப் பிறந்த சாதகன் கருமியாகவும், துரோகம் செய்பவனாகவும் இருப்பான். கிரக நிலையை நன்கு ஆய்ந்தறிந்து தீட்டு நிகழ்ந்த வீட்டில் உஞ்சை விருத்தி ஜீவனம் செய்பவனாக இருப்பன். கிரக பலம் அறிந்து சிறப்பாகவும் திண்ணமாகவும் பலன் கூறுக.

இப்பாடலில் ஒன்பதாம் இடத்தில் மாந்தி என்றும் குளிகன் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 39 - பதினொன்றாம் இடத்தில் மாந்தி


தானென் பதினொன்றில் குளிகன் நிற்கத்
தரணிதனில் பேர் விளங்குந் தனமுமுள்ளோன்
யேனென்ற அயன்விதியும் அறிந்துசெப்பு
யென்மகனே வசியனடா ஜாலக்காரன்
வீணென்ற விரயனடா ரசவாதத்தால்
விளம்புகிறேன் வீடுமனை கொதுவை வைப்பான்
கோனென்ற போகருட கடாக்ஷத்தாலே
கொற்றவனே வியத்தில் நின்ற பலனைக்கூறே


இலக்கினத்திற்கு பதினொன்றாம் இடத்தில் குளிகன் நிற்கப் பிறந்த சாதகன் பூமியில் நல்ல புகழ் உடையவனேயாவான். சிறந்த தனலாபம் உடையவனே. இவனது ஆயுள் பலத்தை அறிந்து கிரக நிலைமை தெரிந்து நீ சொல்லுக. இவன் வசியன் [தேவதை வசியன்] ஜாலக்காரன். இனி பன்னிரண்டாம் இடத்தில் குளிகன் நிற்கப் பிறந்தவன் வீண்விரயம் செய்பவன். ரசவாதம் தேர்ந்தவன். குடும்ப நாசம் செய்பவன். ன் குருவான போகருடைய அருளாணையாலே நான் கூறுவதை ஆராய்ந்தறிந்து நன்கு உணர்த்துக.

இப்பாடலில் பதினொன்றாம் இடத்தில் மாந்தி என்றும் குளிகன் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 40 - சூரியன் 3,6,10,11 ல் தரும் யோகம்


பாரப்பா மூன்றாறு பத்துஒன்று
பகருகின்ற பன்னொன்றில் வெய்யோன்நிற்கில்
சீரப்பா சீலனுட மனையில் தானும்
சிவசிவா தெய்வங்கள் காத்திருக்கும்
வாரப்பா வாகனமும் ஞானம்புத்தி
வளமான புத்திரர்கள் அரசர்நேசம்
கூறப்பா புரிவனடா சத்துருங்கன்
கொற்றவனே மூர்க்கனென்று கூறுவீரே.


இலக்கினத்திற்கு 3,6,10,11` ஆகிய இடங்களில் பதுமன் என்றும் இனன் என்றும் பரிதி என்றும் கூறப்படும் சூரியன் தேறி நின்றால் அச்சாதகனுடைய மனையில் சிவ பரம்பொருளின் பெருங்கருணையால் தெய்வங்கள் காத்து நிற்கும், அச்செல்வனுக்கு நல்ல வாகன யோகமும், நல்ஞானமும், விசேடமானா புத்தியும், வளமை தரும் புதல்வர்களும் அரசர்களுடைய ஆதரவும் அன்பும் ஏற்படும் என்றும், பகைவரை அழித்தொழிக்கும் வீரனாக அமைந்து மூர்க்கனாக விளங்குவான் என்றும் கூறுவாயாக.

இப்பாடலில் சூரியன் இலக்கினத்திலிருந்து 3,6,10,11 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 41 - சூரியன் 2, 3, 4, 7, 5 ல் தரும் பாதகம்



கூறேநீ ஈராறும் ரெண்டுரெண்டு
கொற்றவனே பாக்கியமும் யேழோடஞ்சில்
ஆரேனீ ஆதித்த னிருந்தானானால்
அப்பனே அங்கத்தில் காந்தலுண்டு
சீரேனீ சொற்பனமும் சிரங்குகண்ணோய்
சிவசிவா சிந்தித்த தெல்லாமாகும்
கூறேனீ போகருட கடாக்ஷத்தாலே
கொலையீனார் பகையது வருகுஞ்சொல்லே


சூரியபகவான் 2,3,4,7,5 ஆகிய இடங்களில் இருப்பாரேயானால் [இலக்கினத்திலிருந்தது] அச்சாதகனுக்கு உடலில் காந்தல் உண்டென்றும் சொற்ப அளவிற்கே சீர் பெறுவான் என்றும், சிவனருளால் சிரங்கு, கண்ணோய் முதலியன ஏற்படும் என்றும் நின்று இதந்தரும் என் குருநாதரான போகரது கருணா கடாக்ஷத்தாலே இம் மகனுக்கு, வஞ்சித்துக் கொலை செய்யும் ஈனர்களின் பகையும் வரும் என்று கிரகநிலையை நன்கு ஆய்ந்தறிந்து பலன் கூறுவாயாக.

இப்பாடலில் சூரியன் இலக்கினத்திலிருந்து 2,3,4,7,5 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 42 - சந்திரன் 1,4,7,10, 1,5,9 ல் தரும் யோகம்



கேளப்பா கலையினுட பெருமை சொல்வேன்
கனமுள்ள தனலாபம் கேந்திரகோணம்
ஆளப்பா அகம்பொருளும் நிலமுங்காடி
அப்பனே கிட்டுமடா கறவையுள்ளோன்
சூளப்பா சுகமுண்டு ஜென்மனுக்கு
சுயதேச பரதேச அரசர்நேசம்
கூளப்பா கொடியோர்கள் சேர்ந்துநோக்க
கொற்றவனே கலைகண்டு கூற்ந்துசெப்பே


அமிர்த கலையை அள்ளி வழங்கும் சந்திர பகவானின் பெருமையையினை இனிக் கூறுகிறேன் கேட்பாயாக! மிகுதியான நன்மை தரும் இரண்டாம் இடத்திலும் இலக்கினத்திற்குப் பதினொன்றாம் இடமான இலாபஸ்தானத்திலும், மற்றும் 1,4,7,10 என்ற கேந்திர ஸ்தானங்களிலும் 1,5,9 என்னும் திரிகோண ஸ்தானத்திலும் சந்திர பகவான் நிற்பாரேயாகில் நல்ல மனையும், நிறைந்த தன வருவாயும் நிலமும், விளை வயலும் கன்று காலிகளும் நிரம்ப வந்தடையும். இச்சாதகனுக்கு மெத்த சுகம் உண்டென்றும் சுயமான தேசத்திலும் பிற தேசத்திலும் வாசஞ்செய்யும் போதும் அரசினரால் ஆதாயம் மிகவும் உண்டாகும்.எனினும் தீயகோள்களை தங்கள் தீட்சண்யமான பார்வையில் நோக்குதலின் உண்மையறிந்து சந்திர பகவானின் கலை தீட்சண்யம் அறிந்து பலன் கூறுக.

இப்பாடலில் சந்திரன் இலக்கினத்திலிருந்து 1,4,7,10, 1,5,9 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 43 - சந்திரன் 3,7,5,11 ல் தரும் யோகம்



சூடப்பா சந்திரனார் மூன்றேழ்ஐந்து
சுத்த இந்து பன்னொன்றில் தனித்திருக்க
மாடப்பா மந்திரங்கள் செய்வன் காளை
மகத்தான வாதமொடு வயித்தியம் செய்வான்
கூடப்பா குடும்பமது விருத்தியாகும்
குவலயத்தின் எதிரிக்கு மார்பிலாணி
வீடப்பா போகருட கடக்ஷத்தாலே
விதியறிந்து புவியோர்க்கு விளம்புவாயே.


எல்லாராலும் போற்றப்படும் சந்திரபகவான் 3,7,5,11 ஆகிய இடங்களில் தனித்திருக்க, அச்சாதகன் செல்வமுள்ளோன் என்றும் மந்திரங்கள் அறிந்து முறைப்படி பிரயோகித்து வெற்றி காண்பவன் என்றும் வாதம் செய்வதில் வல்லவன் என்றும் வயித்திய சாத்திரத்தில் சிறந்தோன் என்றும் அவனது குடும்பமானது என்றும் விருத்தியடையும் அவனது எதிரிகள் அழிவர் என்றும் எனது சற்குருவான போகரது கருணையாலே புலிப்பாணி அருளியதை புவியோர்க்கு உணர்த்துவாயாக.

இப்பாடலில் சந்திரன் இலக்கினத்திலிருந்து 3,7,5,11 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 44 - செவ்வாய் 1,10,2,11,6 ல் தரும் யோகம்


கேளப்பா செவ்வாயும் ஒன்று பத்து
கனமுள்ள தனலாபம் ஆறில்நிற்க
ஆளப்பா அகம்பொருளும் நிலமும் செம்பொன்
அப்பனே கிட்டுமடா தொழிலுமுள்ளோன்
சூளப்பாரு குடித்தலைவன் சத்துருபங்கன்
கொற்றவனே வகையாகப் பகர்ந்து சொல்லே


புலிப்பாணி ஆகிய நான் சொல்லும் இக்குறிப்பினையும் நீ நன்கு உணர்ந்து கொள்வாயாக! செவ்வாய் கிரகமானது 1,10,2,11,6 ஆகிய இடங்களில் அமர்ந்திருப்பின், அவனுக்கு மனை வாய்த்தாலும், செம்பொருட்சேர்க்கையும், சிறந்த நிலமும்,செம்பொன்னும் கிட்டுமென்றும், செய்தொழில் விருத்தியுடையவன் என்றும் பல குடும்பங்களைக் காக்கும் தலைவன் என்றும், எதிரிகளை வெற்றி கொள்ளும் வீரனென்றும் மற்றைய கிரக நிலவரங்களை ஆராந்து கூறுவாயாக.

இப்பாடலில் செவ்வாய் இலக்கினத்திலிருந்து 1,10,2,11,6 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 45 - செவ்வாய் 6,8,12,3,7,10,9 ல் தரும் பாதகம்


சொல்லப்பா ஆறெட்டு பன்னிரண்டும்
சுகசப்த கேந்திரமும் பாக்கியம் ரெண்டில்
அல்லப்பா அத்தலத்தில் ஆரல்நிற்க
அப்பனே அகம் பொருளும் நிலமும் நஷ்டம்
குள்ளப்பா குடும்பமது சிதறிப்போகும்
கொற்றவனே குருவுக்கு தோஷமுண்டாம்
வல்லப்பா போகருட கடாக்ஷத்தாலே
வளமாகப் புலிப்பாணி வசனித்தேனே.


இன்னுமொன்றும் சொல்லுகிறேன் கேட்பாயாக. இச் செவ்வாய், சேய், பவுமன் என்றும் உரைக்கப்படுபவன். இவன் 6,8,12,3,7,10,9-இல் நிற்க நிலமும் பொருளும் மனையும் சேதமாகும்; குடும்பமானது சிதறிப்போகும் இதனைச் செவ்வாய் [குரு] தோடம் என்றும் கூறுவார்கள் வல்லவராகிய என் சற்குரு போக மாமுனிவரின் கருணையாலே வன்மையுடன் புலிப்பாணி முனிவராகிய நான் கூறினேன்.

இப்பாடலில் செவ்வாய் இலக்கினத்திலிருந்து 6,8,12,3,7,10,9 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 46 - வியாழன் 4,7,10,1,5,9,2,11 ல் தரும் யோகம்


பாரப்பா பரகுரு நாலேழ்பத்து
பகருகின்ற கோணமுடன் தனமும்லாபம்
சீரப்பா சென்மனுக்கு யோகம் செப்பு
செந்திருமால் தேவியுமே பதியில்வாழ்வன்
கூறப்பா குடிநாதன் கண்ணுற்றாலும்
குவலயத்தில் வெகுபேரை ஆதரிப்பன்
ஆரப்பா ஆரெட்டு பன்னிரெண்டு
அறைகின்றேன் அதன்பலனை அன்பால்கேளே


வியாழ பகவான் என விளம்பப்படும் குருபகவான் 4,7,10 மற்றும் 1,5,9 இன்னும் 2,11 ஆகிய இடங்களில் இருந்தால் இச்சாதகனுக்கு யோகம் மிகவும் உண்டென்று கூறுவாயாக! செந்திருமால் தன் தேவியுடன் இவன் மனையில் வாழ்வார்கள். இன்னும் இரண்டாமிடத்ததிபதி இவனைக் காணில் இப்பூமியில் வெகு பேரை ஆதரிப்பான். இனி 6,8,12 ஆகிய இடங்களில் நின்றால் எத்தகைய பலன் விளைவிப்பான் என்பதனையும் கூறுகிறேன். இதனை நீயும் அன்புடனே கேட்பாயாக!

இப்பாடலில் வியாழன் இலக்கினத்திலிருந்து 4,7,10,1,5,9,2,11 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 47 - வியாழன் 8 ல் தரும் பாதகம்


கேளப்பா யெட்டுக்கு வேசிகள்ளன்
கெடுதியுள்ள மனைவிபகை நோயால் கண்டம்
ஆளப்பா அரசர்பகை பொருளுஞ்சேதம்
அப்பனே அவமானம் கொள்வண்டம்பன்
தாளப்பா ஆறுக்கு தோஷமுண்டு
தார்வேந்தர் பகையுமுண்டு ரோகமுண்டு
கூறப்பா ஈராறில் எங்கோனாட்சி
குற்றமில்லை சென்மனுக்கு யோகங்கூறே


இனி எட்டாம் இடத்தில் குருபகவான் வீற்றிருப்பின் அவன், வேசி கள்ளனாகவும், தீய மனைவியால் பகைகொண்டவனாகவும், அவளாலும், பகையாலும் கண்டம் அடைபவனாகவும், அரசரது பகை பெற்றவனாகவும், பொருட் சேதம் அடைபவனாகவும், நிறைந்த அவமானம் அடைபவனாகவும், பெரிய டம்பனாகவும் இருப்பன். மேலும் 6ஆம் இடத்தில் குரு நிற்பின் சாதகனுக்கு அதனாலும் தோடம் உண்டு. அரசரது பகைநேரும். நோய் உபாதை ஏற்படும். ஆயினும் பன்னிரண்டாம் இடத்தில் குரு நின்றால் அதுவே அவனது ஆட்சி வீடானதால் அதனால் எந்த ஒரு குற்றமும் சென்மனுக்கு இல்லையென்று நீ ஆய்ந்தறிந்து கூறுவாயாக.

இப்பாடலில் வியாழன் இலக்கினத்திலிருந்து 8 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 48 - சுக்கிரன் 1,4,7,10,5,9 ல் தரும் யோகம்


கேளப்பா அசுரகுரு கேந்திரகோணம்
கெட்டவர்கள் கண்ணுற்று பார்த்திட்டாலும்
ஆளப்பா அசுரகுரு பலனளிப்பர்
அப்பனே உப்பரிக்கை மேடையுண்டு
வாளப்பா வயிரங்கள் முத்துமாலைகள்
வளமாகப் பொருந்தி நிற்கும் வளவிலேதான்
நீளப்பா நின்றதொரு இராசியாதி
நிலையறிந்து புவியோர்க்கு நிகழ்த்துவாயே


புலிப்பாணி கூறுவதைச் சற்றே கேட்பாயாக! அசுரர்களின் குரு எனப் போற்றி செய்யப்பெறும் சுக்ராச்சாரி சாதகனின் கேந்திர கோணத்தில் நிற்க அவரைத் தீய கோள்கள் பார்ப்பினும் அவர் நற்பலன்களையே தருவார். அச்சாதகனுக்கு உப்பரிகை மேடையும், கனவயிரமும் முத்துமாலை போன்ற அணிமணிகளும் அவன் மனையில் பொருந்தி இன்பம் தருவதாகும். இதனை இலக்கின, இராசி அதிபர்களின் பலமுணர்ந்து ஆய்ந்து கூறுக.

இப்பாடலில் சுக்கிரன் இலக்கினத்திலிருந்து 1,4,7,10,5,9 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 49 - சுக்கிரன் 12,3,6,8 ல் தரும் பாதகம்

பாரப்பா பனிரெண்டு மூன்றாரெட்டில்
பலமுள்ள அசுரகுரு அதனில் தோன்ற
வீரப்பாவிதிகுறைவுவெதர்நோய்வாதம்
விளங்குகின்ற செம்பொன்னும்மனையும் நஷ்டம்
கூறப்பா குழவிக்கு மகோதரமும் பாண்டு
கொற்றவனே குன்மமொடு சயமும்சோகை
சீரப்பா ஈராறில் சுங்கன் ஆட்சி
சிவசிவா சயனசுகம் யோகஞ்சொல்லே.


ஒரு சாதகனுக்கு 12,3,6,8 ஆகிய இடங்களில் அசுர குருவான சுக்ராச்சாரியார் பலமுடன் சஞ்சாரம் செய்வாரானால் அச்சாதகனுக்கு ஆயுள் குறைவதுடன், மர்ம உறுப்புகளில் [பீசத்தில்] நோயுறுதலும்,வாதநோய் ஏற்படுவதும் மிகவும் விளக்கம் பெற்ற செம்பொன் மற்றும் வாழ்மனையும் நஷ்டமாம். மேலும், மகோதரம்,பாண்டு ஆகிய நோய் மட்டுமல்லாமல் குன்மம், சயம், சோகை ஆகிய நோய்களும் ஏற்படும். ஆயினும் 12ஆம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றால் சிவபரம்பொருளின் பேரருளால் சயன சுகமும் நல்ல யோகமும் ஏற்படும் எனக் கூறுவாயாக.

இப்பாடலில் சுக்கிரன் இலக்கினத்திலிருந்து 12,3,6,8 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 50 - சனி 9,6,11,3,10 ல் தரும் யோகம்



கனமுள்ள நவமாறு லாபம் மூன்று
கதிர்மைந்த னதிலிருக்க விதியும் தீர்க்கம்
தனமுண்டுபிதுர் தோஷம் சத்துருபங்கம்
தரணிதனில் பேர்விளங்கும் அரசன்லாபம்
குணமுள்ள கருமத்தி லிருக்கநல்லன்
கொற்றவனே வாகனமும் தொழிலுமுள்ளோன்
பொணம் போலபோகாதே சபையில் கூறு
பூதலத்தில் யென்னூலைப் புகழுவாயே.


பெருமைக்குரிய 9,6,11,3 ஆகிய இடங்களில் சூரிய குமாரனான மந்தன் என்ற சனிபகவான் நிற்க அச்சாதகனுக்கு ஆயுள் தீர்க்கம். நிறை தனமுடையவர். அதே போல் பிதுர் தோஷமும் உடைய அச்சாதகன் சத்துரு பங்கனாகவும் இருப்பான். பூமியில் அவனது புகழ் விளங்கிக் காணும். அரச லாபம் பெறுவான். இனி, சனிபகவான் 10இல் நிற்க அச்சாதகன் நன்மையான பலன்களையே அடைவான். வாகன யோகம் உடையவனாகவும், செய் தொழில் கீர்த்தி உடையவனாகவும் விளங்குவான். இதையெல்லாம் உணராது உணர்ந்தார் உள்ள சபையில் பிணம் போலப் பேசாமல் இராதே. நான் கூறும் வார்த்தைகளைக் கேட்டுக் கூறுவாயேல் நீ புவியில் என்னூலைப் போற்றுவாய்.

இப்பாடலில் சனி இலக்கினத்திலிருந்து 9,6,11,3,10 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 51


பாரப்பா இன்னமொன்று பகரக்கேளு
பானுமைந்தன் பன்னொன்றி லமைந்தவாறும்
சீரப்பா சிறந்தகுரு சப்தமத்தில்
சீறிவரும் கரும்பாம்பு நாலிலேற
ஆரப்பா ஆரல்யிரு மூன்றதாகும்
அப்பனே அருக்கனுந்தான் மூன்றில்போக
வீரப்பா விலகுமடா தோஷம் தோஷம்
விதியுண்டு சென்மனுக்கு விளம்பக்கேளே


இன்னுமொரு கருத்தையும் உனக்கு விளக்கமாகக் கூறுகிறேன் நன்கு கேட்பாயாக! கதிர் மைந்தனாம் சனி 11இல் அமைந்து சிறப்புமிக்க குருபகவான் சப்தம (7ல்) ஸ்தானத்திலும் இராகு 4 ஆம் இடத்திலும், செவ்வாய் மூன்றிலும், சூரிய மூன்றில் போய் நிற்க (சனி பகவானால்) தோடம் உண்டெனினும் சென்மனுக்கு ஆயுள் உண்டென்று கூறுவதுடன் மேலும் நான் சொல்லும் கருத்துகளையும் கேட்பாயாக!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum