தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இசைக்கு ஒரு இசையமைப்பாளரின் கற்பனை வளம்தான் முக்கியம்! – ஹாரிஸ் ஜெயராஜ்

Go down

இசைக்கு ஒரு இசையமைப்பாளரின் கற்பனை வளம்தான் முக்கியம்! – ஹாரிஸ் ஜெயராஜ் Empty இசைக்கு ஒரு இசையமைப்பாளரின் கற்பனை வளம்தான் முக்கியம்! – ஹாரிஸ் ஜெயராஜ்

Post  ishwarya Fri Apr 12, 2013 1:12 pm

நாளைய தலைமுறை சினிமா ரசிகர்களை பாதித்திருக்கும் இசையமைப்பாளர்களில் ஹாரிஸ் ஜெயராஜும் ஒருவர். தன்னுடைய துள்ளல் இசையமைப்பினால் பல இளைஞர்களின் மனதைத் திருடியவர். அவ்வப்போது அபூர்வமான மெலடி பாடல்களால் இதயங்களையும் மீட்டுபவர்… ‘அனல் மேலே பனித்துளி…’ ஒன்று போதும். உதாரணத்துக்கு ‘மின்னலே’ படம் மூலம் பரவலாக அரியப்பட்டாலும் அவர் இசையமைத்த முதல் படம் ‘மஜ்னு’. அதற்குப் பிறகுதான் வெளியானது. இசைக்காகவே பேசப்பட்டது இப்படம்.

அதன்பிறகு இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுடன் கைக்கோர்த்துக்கொண்டு அவர் இசையமைத்த திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் புதிய தடத்தைப் பதித்தன. ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ அதில் குறிப்பிடத்தகுந்தவை. மற்ற இயக்குநர்களின் படங்களில் (உதாரணத்திற்கு ‘லேசா லேசா’, ’12 பி’, ‘தாம் தூம்’, ‘அந்நியன்’, ‘ஆதவன்’) அவருடைய இசை முணுமுணுக்கப்பட்டாலும் ஏனோ கௌதமனுடனான அவரது புரிந்துணர்வின் வெளிப்பாடு அந்தப் படங்களில் மிஸ்ஸிங்…. என்றுதான் தோன்றுகிறது.

‘வெண்மதி வெண்மதியே நில்லு…’ பாடலை மீண்டும் மீண்டும் இசைத்துப் பார்க்கிறார். தன் காரின் மேல் கை வைத்து உற்சாகமாக போஸ் கொடுக்கிறார். உலக இசைப் பயணத்துக்கான பரபரப்பு நிமிடங்களிலும் ஹாரிஸை உற்சாகமாகப் பார்க்க முடிகிறது.

பேட்டிக்கு முன்னால் அவரைப் பற்றி ஒரு சில தகவல்கள். இயற்பெயரே ஹாரிஸ் ஜெயராஜ்தான். பிறந்த தேதி ஜனவரி 8, 1975. பிறந்த ஊர் சென்னை. அப்பா ஜெயக்குமார், ஒரு கிடாரிஸ்ட். மலையாள இசையமைப்பாளர் ஷியாமின் உதவியாளராக அவரது இசைக் குழுவில் இருந்து, சொந்தமாகச் சில திரைப்படங்களுக்கு இசையும் அமைத்தவர்.

ஜெயக்குமார் தனது மகன் ஹாரிஸ் ஒரு பிரபல பாடகராக வேண்டும் என்று விரும்பினார். சின்ன வயதிலேயே கர்னாடக சங்கீதமெல்லாம் கற்றுக் கொடுத்தார். ஆனால் விதி அவரை இசையமைப்பாளராக்கியது. லண்டனிலுள்ள ட்ரினிட்டி இசைக் கல்லூரியில் இசைக்கான பட்டம் பெற்றார் என்று சொன்னால் தவறு. ஆசிய மாணவர்களிலேயே அதிக மதிப்பெண் பெற்று அந்தக் கல்லூரியிலிருந்து தேர்ச்சி பெற்றவர் ஹாரிஸ் ஜெயராஜ்.

ராஜ்கோட்டி, ஏ.ஆர். ரஹ்மான், மணி சர்மா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, வித்யாசாகர் என்று இன்றைய ஏனைய இசையமைப்பாளர்கள் அனைவரிடமும் வேலை பார்த்த அனுபவம் ஹாரிஸ் ஜெயராஜை ஒரு தனித்துவம் உள்ள இசையமைப்பாளராக உச்சாணிக் கொம்பிற்கு அழைத்துச் சென்றிருக்கிறது. புகழின் உச்சியில் இருந்தாலும் குறைந்தபட்ச பந்தாகூட இல்லாமல் தரையில் கால் பதிந்து நடக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் என்ன சொல்கிறார் என்று இனி பார்ப்போம்.

ஏன் இசையமைப்பாளர்களும் இயக்குநர்களும் அடிக்கடி சண்டை போட்டுக்குறாங்க? செல்வராகவன் – யுவன், கௌதம்மேனன் – ஹாரிஸ், வதந்தபாலன் – ஜீ.வி.பிரகாஷ்?

நான் என்னைப்பற்றி மட்டுமே சொல்ல முடியும். பெரும்பாலும் இசையமைப்பாளர்கள் தனிமையில் இருப்பார்கள். சதா ட்யூன், சப்தம், ஸ்வரம்னு எதாவது மனசுக்குள்ளே ஓடிக்கிட்டே இருக்கும். ஒரு நாளின் அதிகப்படியான நேரங்களை தனிமையில் கழிக்கும் மனிதனுக்குக் கோபம் வருவது இயற்கைதானே! இசை ஒரு கனவு மாதிரி. அது கலையாமல் பார்த்துக்கணும். எதுக்கும் சமரசமாகிவிடக் கூடாது. நான் எப்படி இந்த சினிமாவுக்கு வந்தேனோ அப்படியேதான் இருக்கேன்.

நான் இசை கோர்ப்பவன். ஊசி முனையில் நூலைக் கோர்க்கும் லாவகம் எனக்குத் தெரிந்திருக்கும். எனக்கு யாரும் சொல்லித் தர வேண்டாம். அவங்க வேறு விதமா யோசிக்கும் போது, நமக்கு கோபம் வந்துடும். முழுக்க முழுக்க கோபமானவனோ, முழுக்க முழுக்க சிரிச்சு பழகும் ஆளோ நான் இல்லை. உங்களை மாதிரி, இதோ இந்த சாலையில் சைக்கிளில் போகிற மனுஷன் மாதிரியேதான் நானும் இருக்கேன். இருந்தும் என் வாழ்வு வேறு. நான் பெரியவனா? நீ பெரியவனா?ன்னு யுத்தம் செய்ய நான் வரலை. இப்பவும் கௌதம் என் நண்பர்தான்.

எங்களுக்குள் மனஸ்தாபம் கிடையாது. என்னையும் அவரையும் காலம் இணைத்து வைத்தது. இந்த பிரிவுக்கும் காலம்தான் காரணம். இப்பவும் கௌதம் ஒரு பிரச்சினைன்னு சொன்னா நான்தான் முதலில் போய் நிற்பேன். நல்ல படங்களை நம்பிக் கொடுத்தார். நன்றியை மறக்கவும், மறுக்கவும் கூடாது. கலைஞர்களுக்குள் சின்னதா வருத்தம் வருவது சகஜம்தான். இனி நானும் அவரும் சேருவோமா என்பதற்கு எங்களை சேர்த்த காலமே பதில் சொல்லட்டும்.

என்ன சொன்னார் கௌதம்மேனன், அப்படி என்னதான் பிரச்சினை?

நிறைய விஷயங்கள் இருக்கு. இப்ப அது எதுக்கு? என் பயணம் எனக்கு முக்கியம். தடுக்கி விழுந்தாலும் நானேதான் எழுந்துக்கணும். அவரவர்களுக்கான பயணங்கள் அவரவர் கையில்தான் இருக்கு. பார்க்கும் போது கண்டிப்பா பேசிக்குவோம். ஆரத் தழுவி அன்பை பகிர்ந்துப்போம். யுவன் – செல்வராகவன், ஜீ.வி.பிரகாஷ், நான் – கௌதம்ன்னு எல்லோரையும் ஏதோ ஒரு விஷயம் இணைச்சிருக்கும். ஏதோ ஒரு விஷயம் பிரிச்சிருக்கும். என் பிரச்சினை என்னன்னு என் மனசுக்குள் மட்டுமே வெச்சிருக்கேன். அதை யார்கிட்டேயும் சொல்ல முடியாது.

ஜி. ராமநாதன், எஸ்.ராஜேஸ்வர ராவ், கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி., இளையராஜா அப்புறம் ஏ.ஆர்.ரஹ்மான் இப்ப நீங்க, இசையின் பரிணாம வளர்ச்சி எப்படி இருக்கிறது

இதுக்கு பதில் எல்லோருக்கும் தெரியும். நிறைய ஜாம்பவான்கள் இருந்த இடம் இது. இந்த இடத்துக்கான போராட்டம் இன்னும் பலருக்கு கனவு. அந்த கனவில் இப்போதும் எனக்கு இடம் இருக்கு. ஒவ்வொரு காலக் கட்டமும் ஒவ்வொரு மாதிரி.

இசையும் அதற்கான தேவையும் பிரிக்க முடியாத கால கட்டம் அது. இசை எல்லாத் தமிழர்களின் மனதிலும் ஊறிக் கிடந்த காலம் அது. அந்தக் காலத்தில் இசை பற்றிய ஞானம் எல்லோருக்கும் இருந்தது. ஒரு ஹீரோ தன் காதலை சொல்ல 60 பாடல்கள் வரை தேவைப்பட்டிருக்கு. இப்ப அப்படியில்லை.

இது வளர்ச்சியா? வீழ்ச்சியான்னு எனக்கு தெரியலை. இரண்டு சின்ன பாட்டு. மூணு பெரிய பாட்டு இதுதான் இப்ப தமிழ் சினிமாவின் நிலை. இசையின் தேவை படத்தில் குறையுது. அதற்கேற்ப நான் உள்பட எல்லோரும் மாறி விட்டோம். ஆனா இப்போ இசையமைப்பாளனுக்கு நிறைய வேலை இருக்கு. ஆனால் இசைக் கலைஞர்களுக்கு வேலை இல்லை. 200 பேர் இசை மீட்டிய இடத்தில் 30 பேர் இருந்தால் போதும். எல்லா வேலையும் முடித்து விடலாம்.

இதில் எது சிறந்தது என்று நினைக்கிறீர்கள்? இப்போது இருப்பது வளர்ச்சியா இல்லை வீழ்ச்சியா?

தந்தி போய் டெலிபோன் வந்துச்சு. ஐந்து வருஷம் வரைக்கும் பல கிராமங்களில் டெலிபோன்தான் இருந்துச்சு. ஆனா இப்ப எவ்வளவு செல்போன். எத்தனை வகையான மாற்றங்கள். கிராமபோன், ஆடியோ கேசட், சி.டி போய் இன்னைக்கு ஐ பாட் வந்தாச்சு. அது அந்த காலம், பொற்காலம்ன்னு சொல்லலாம். நானென்று இல்லை. இனி யாராலும் அப்படி ஒரு காலத்தைக் கொண்டு வர முடியாது. மனசுக்கு ஆறுதல் தேவைப்பட்டால் நானே அவர்களின் பாடல்களைத்தான் தேடிப் போறேன். எல்லோரும் அப்படித்தான்.

வருங்காலத்தில் அந்தப் பட்டியலில் என் பாட்டும் இருந்தா நல்லதுன்னு நினைக்கிறேன். அவங்க பாட்டு அவ்வளவு ஆறுதல். அமுதம் மாதிரி இசை. இனி எல்லோரும் சேர்ந்து கிடைச்ச இடத்தில் இருந்து விட்டு போக வேண்டியதுதான். நேரம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் கடந்து போய்க்கிட்டு இருக்கு.

அப்படியானால் அந்தப் பொற்காலம் திரும்பாது என்று கூறுகிறீர்கள், அப்படித்தானே?

ரொம்ப நேர்மையா, வியர்வை வழிய, குரல் குழைய ஒரு பொண்ணுக்கிட்ட ஒரு பையன் போய், ஐ லவ் யூ சொன்னா, என்ன மச்சான் கதை இதுன்னு ரசிகர்கள் அலுத்துக்கிறாங்க. இப்ப எதாவது டிராமா பண்ணியே ஆகணும். வசனம் பேசணும். காதலுக்கு மட்டும் இரண்டு பாட்டாவது வைக்கணும். இப்பக் கூட ஒரு பாட்டுப் போட்டேன்.

அது காலத்தை கடந்து நிற்குமான்னு எனக்குத் தெரியாது. ஆனா அதைத்தான் இப்ப உள்ள தலைமுறை விரும்புது. அது நிச்சயம் காலம் கடக்காது. ஆனா ஹிட் அடிக்கும். இளைஞர்களுக்கு பாஸ்ட் பீட்தான் பிடிக்குது. நாமளும் அவங்க வேகத்துக்கு சேர்ந்து போயிட வேண்டியதுதான். இனி அந்த காலம் வர சான்ஸே இல்லை. ஆளுக்கு ஒரு ஸ்டைல். ஆளுக்கு ஒரு பாட்டு. நானும் இதுல இருக்கேன், அவ்வளவுதான்.

ஏ.ஆர். ரஹ்மான் காலத்துக்கு முன்பு வரை ட்யூன்கள் ஹார்மோனியத்திலிருந்து பிறந்தன. இப்போது கீபோர்டில். இரண்டிற்கும் என்ன வேறுபாடு?

எதுவும் கிடையாது. ஹார்மோனியம் வாசிக்கும்போது கை வலிக்கும். ஒரு கையால் வாசித்துக் கொண்டே, இன்னொரு கையால் பெர்லோஸ் போட வேண்டும். கீபோர்டில் இரண்டு கையாளும் ஜாலியாக நின்று கொண்டேகூட வாசிக்கலாம்.

இசைக்கு ஒரு இசையமைப்பாளரின் கற்பனை வளம்தான் முக்கியமே தவிர ஹார்மோனியமோ, கீபோர்டோ அல்ல. ஹார்மோனியம் வாசிக்கத் தெரிந்தவர்களெல்லாம் இளையராஜாவாகிவிட முடியாது. கீபோர்டு வாசிப்பவர்கள் ஏ.ஆர். ரஹ்மானாகிவிட முடியாது.

திடீர்ன்னு உலக இசைப் பயணத்துக்கு புறப்பட்டாச்சே?

இது ரொம்ப நாளா போட்ட ஃபிளான். தனியா, பெரிசா மியூசிக் டூர் பண்ணணும்னு ஆசை. அதற்கான பக்குவமும், தகுதியும் இப்பதான் வந்திருக்கு. என் பாட்டு, இன்னும் சில பாட்டுன்னு இதுல இருக்கு. சினிமாவுக்கு வந்து பத்து வருஷமாச்சு. ‘மின்னலே’ படத்துல நான் போட்ட பாட்டு எத்தனை பேருக்கு பிடிக்கும்ன்னு தெரியலை. ஆனா நம்பிக்கை இருந்துச்சு. அதுக்கு இப்பவும் நான் நன்றி உள்ளவனா இருக்கேன். நிறைய பயணம், அது தந்த அனுபவம் எல்லாமும்தான் இந்த பெரிய பயணத்துக்கு காரணம்.

இது ரொம்ப திட்டமிடுதலோடு நடக்குது. மைக்கேல் ஜாக்சன் இசை நிகழ்ச்சி போல பிரம்மாண்டம் இருக்கும். பெரிய ஸ்டேஜ், 3 டி தொழில்நுட்பத்தில் காட்சிகள்ன்னு அசத்தப் போற டூர் இது. சென்னை, கோவையிலும் நிகழ்ச்சி இருக்கு. டைரக்டர் விஜய்தான் இதில் முக்கியமான ஆள். அவர்தான் நிகழ்ச்சியை இயக்குகிறார். அதற்காக தினமும் பயிற்சி, பாடல்கள்ன்னு பரபரப்பா நகர்ந்திட்டு இருக்கு நாட்கள்.

சேனலுக்கு சேனல் மியூசிக் ஷோ நடக்குது. ஐந்து வயது சிறுவனும், சிறுமியும்கூட அசத்துறாங்க. எத்தனை எத்தனையோ அற்புதமான இளைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்துகிறார்கள்.

ஆனால் இன்னும் பின்னணிப் பாடகர்களுக்காக மும்பைக்கு ஃபிளைட் பிடிப்பது அவசியம்தானா?

இப்போ அந்த நிலைமை மாறியிருக்கு. எல்லாமும் மாறிட்டு வருது. சேனல்களில் நடக்கும் மியூசிக் ஷோக்கள் திறமைசாலிகளை கண்டெடுத்து தருகிறது. நான் எப்பவும் நம்மூர் திறமைசாலிகளைத்தான் பயன்படுத்த நினைக்கிறேன். மும்பையை நம்பறத விட, இங்க இருக்கும் ஒரு திறமைசாலியை கண்டெடுக்கவே நான் விரும்புறேன்.

அதுக்கு நிறைய உதாரணங்கள் இருக்கு. ஸ்ரேயா கோஷல், பென்னி தயாள்ன்னு சிலரின் வாய்ஸூம் நமக்கு தேவைதான். அவங்களையும் விட்டு விட முடியாது. இப்ப உள்ள இளைஞர்களுக்கு பாஸ்ட் பீட்டுதான் பிடிக்குது. அதுக்கு அவங்க தேவைப்படுறாங்க.

இப்ப நடத்தப்போற மியூசிக் டூர்லயும் முழுக்க முழுக்க தமிழ் ஆள்கள்தான் இருக்காங்க. மலேசியா, துபாய்ன்னு ஒரு மாசம் டூர். இதுல முழுக்க முழுக்க நம்ம தமிழ் சுத்தமாக ஒலிக்கணும். அதுக்கு நம்ம ஆள்கள்தான் சரி.

எம்.எஸ்.வி., இளையராஜா எல்லாம் பரிசுத்த கிரியேட்டர்களாக இருந்தார்கள். இன்றைய இசையமைப்பாளர்கள் அப்படி இருக்கிறார்களா?

அது வேறு காலம். இது வேறு காலம். எல்லாத்தையும் காலமும், நேரமும்தான் தீர்மானிக்குது. நான் உள்பட பலரும் அதுக்கு விதி விலக்கு அல்ல.

உங்களுக்கு பிடிச்ச இன்றைய தலைமுறை இசையமைப்பாளர்கள் யார்? மனதில் உள்ளதை மறைக்காமல் சொல்லுங்கள்.

பாதிப்பு இல்லாம நான் இருக்கணும்னு நினைச்சுதான் நான் பிறருடைய பாடல்களைக் கேட்பதைத் தவிர்க்க முயல்கிறேன். ஆனா நல்ல பாட்டை மிஸ் பண்ணுவதே இல்லை. இமான் சூப்பர். தவிச்சுக்கிட்டு இருந்த இமானுக்கு ‘மைனா’ நல்ல பிரேக். எல்லோருக்குமான சாயலில் இருந்து இப்ப தனித்து நிற்கிறார். யுவன், விஜய் ஆண்டனி, ஜீ.வி பிரகாஷ்ன்னு எல்லோரையும் ரசிக்கிறேன். எப்போதாவது யுவனைப் பார்த்தால் அவரின் நல்ல பாட்டு பத்தி நிறைய பேசுறேன். அவரும் என் பாடல்களைப் பற்றிப் பேசுவார்.

உடுமலை நாராயணகவி தொடங்கி கண்ணதாசன், வாலி, வைரமுத்து வரையிலும் பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் இருந்துச்சு. இப்போது கவித்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாடல்கள் இல்லை என்பது பலரின் வருத்தம்.

புரியாத வார்த்தைகளை சேர்ப்பதால் பாடல்களின் தனித்துவம் கெட்டு விடாதா?

இது எனக்கும் வருத்தம்தான். ஆனா பாடல்களின் தனித்துவம் எங்கேயோ ஓரிடத்தில் கெட்டு விட்டது. அது இப்பவும் தொடர்ந்துக்கிட்டே இருக்கு. தப்பு எங்கே நடந்திருந்தாலும் நாம திருத்தணும். அதை சில பேர் செய்யுறாங்க. நானும் அதுல இருக்கேன். ‘வசீகரா…’, ‘அனல் மேலே பனித்துளி….’, ‘உயிரே உயிரே….’, ‘அடியே கொல்லுதே…’ போல கிளாஸிக்கல் ஹிட் கொடுக்கணும். கிளாஸிக்கல் ஆள்களே சிலிர்க்கிற அனுபவத்தை தரணும்ன்னுதான் போராடிக்கிட்டு வர்றேன்.

ஏ.ஆர். ரஹ்மான் தொடங்கி எல்லோரிடமும் வேலை பார்த்துருக்கேன். எனக்கு முதலிடம், இரண்டாம் இடம் மாதிரி நம்பர் ஆசையெல்லாம் கிடையவே கிடையாது. 25 வருஷம் கழிச்சு ஹாரிஸின் 100 பாடல்களாவது காலத்தை கடந்து நிற்கணும். ‘அவளுக்கென அழகிய முகம்…’, ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து….’, ‘யமுனை ஆறறிலே ஈரக் காற்றிலே…’, ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது…’ மாதிரி இதயம் எல்லாம் இளகி ஓடணும். அப்படி பாடல்களைக் கொடுக்க வேண்டும் என்றுதான் ஆசை.

இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் பின்னணி இசை என்றாலே இரைச்சலாக இருக்கிறது. சண்டைக் காட்சிகளும் சரி, பாடல்களும் சரி காதைப் பிளக்கிறது. ‘சாஃப்ட் பிஜிஎம்’ என்று சொல்வார்களே, மென்மையான பின்னணி இசை அதை ஏன் தவிர்க்கிறார்கள்? சமீபத்துல ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மாதிரி ஒரு சில படங்கள்தான் பின்னணி இசையில் ஈர்க்கிறது. அதைத் தொடர்ந்து செய்ய முடியாதா?

தேவையில்லாத சத்தங்களை தவிர்க்கணும்னு நினைக்கிறேன். என்கிட்ட வேலை பார்ப்பவர்களிடம் அதைத்தான் சொல்லி வர்றேன். கதையும், காட்சிகளும்தான் இங்கு பின்னணி இசையை தீர்மானிக்குது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ல ரஹ்மானுக்கு அப்படி ஒரு நல்ல ப்ளாட்பார்ம் கிடைச்சது. காதல், ஆக்ஷன் கதைக்கேற்ற பின்னணி கட்டாயம் வேணும். நான் உள்ளிட்ட எல்லோரும் அதைத்தான் செய்யுறாங்க.

கடைசியாக ஒரு கேள்வி. எம்.எஸ்.வி., இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் என்று இசையமைப்பாளர்கள் எல்லோருமே தெய்வ நம்பிக்கை உடையவர்களாகவே இருக்கிறார்கள். நீங்கள் எப்படி? உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?

ரொம்பவே உண்டு. கடவுள் பக்திதான் என்னை டென்ஷன் இல்லாமல் காப்பாற்றுகிறது. எல்லாம் கடவுள் செயல் என்று என் வேலையைச் செய்யும்போது மனதில் வீண் குழப்பங்கள் எதுவும் வருவதில்லை. ஒரு நிம்மதியை உணர முடிகிறது. எல்லாமே நான்தான், என்னால்தான் என்று நினைத்தால்தானே கஷ்டம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum