தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மங்கலம், பரமானந்தம், அதிர்ஷ்டம், அழகு... நித்யகல்யாணி!

Go down

 மங்கலம், பரமானந்தம், அதிர்ஷ்டம், அழகு... நித்யகல்யாணி! Empty மங்கலம், பரமானந்தம், அதிர்ஷ்டம், அழகு... நித்யகல்யாணி!

Post  amma Fri Jan 11, 2013 1:57 pm

ஒருசமயம் பிரம்மா ஈசனை நோக்கி கடுந்தவம் புரிந்தார். அவர்முன் தோன்றிய
ஈசன், ஒரு வில்வப் பழத்தினை அளித்தார். முக்கண்ணன் அளித்த அந்தப் பழத்தை
மூன்றாக உடைத்தார் பிரம்மா. அவற்றை வடக்கே கயிலையிலும் மத்தியில் மேரு
மலையிலும் தெற்கே தென் பொதிகை அருகேயுள்ள துவாதசாந்த வனத்திலும் நட்டார்.
இந்த துவாதசாந்த வனமே இன்றைய கடையம். தேவி இந்த வில்வ வனத்தில் கடுந்தவம்
புரிந்தாள். ஈசன் வில்வ விருட்சமாகத் தோன்றி அருள்புரிந்தார். ஆகவே,
இங்குள்ள வில்வ மரத்தை சிவபெருமானாகவே நினைத்து வணங்குகின்றனர். அதுவே
தலமரமும் ஆனது.

தேவர்களுக்கும் கம்பாசுரனுக்கும் மாபெரும் யுத்தம்
மூண்டது. தேவேந்திரன் அயோத்தி பேரரசரான தசரதரை உதவிக்கு அழைத்தார். தசரதர்
அசுரர்களைக் கொன்று குவித்தார். இதனால் அவருக்கு வீரஹத்தி தோஷம் உண்டானது.
இதை நீக்கிக் கொள்ள நேராக இத்தலத்தை நோக்கித்தான் வந்தார். வில்வவன நாதரின்
திருப்பாதம் பணிந்தார். ஈசனின் அருளால் ஸ்ரீமன் நாராயணனையே ஸ்ரீராமன் என்ற
பிள்ளையாகப் பெற்றார். ஒருமுறை, தசரதர் காட்டில் வேட்டையாடிக்
கொண்டிருந்தார். அப்போது சிரவணன் எனும் சிறுவன் பார்வையிழந்த தன் பெற்றோரை
தொட்டில் கட்டி காட்டு வழியாகத் தூக்கி வந்தான். பெற்றோருக்கு தாகம்
எடுத்தது. அவர்களை ஓரிடத்தில் அமர்த்திவிட்டு சுனையில் நீர் எடுக்க
வந்தான்.

சுனையின் சலசலப்பு கேட்ட தசரதர், ஏதோ மிருகம்தான் என்று
எண்ணி, சத்தம் வந்த திசை நோக்கி அம்பை எய்தார். அது சிறுவனை துளைத்தது.
அந்த இடத்திலேயே அவன் வீழ்ந்து இறந்தான். ஓடிச் சென்று பார்த்தவர்
அதிர்ந்தார். சிறுவனின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டார். பெற்றோர் தசரதனை
நோக்கி சாபமிட்டனர், ‘‘எங்களைப் போலவே நீயும் புத்திர சோகத்தால் இறப்பாய்’’
என்றனர். பின்னர், மகன் இறந்த தூக்கம் தாங்காமல் அவர்களும் இறந்தனர்.
தசரதர் உடனே இந்த வில்வ வனநாதரை வணங்கி, தான் செய்த பாவத்துக்கு மன்னிப்பு
கேட்டார். இந்த புராணச் சம்பவம் நிகழ்ந்த தலம் இதுதான் என்கிறது தலவரலாறு.
இதை நிரூபிக்கும் வகையில் இப்பகுதியில் குகை ஒன்றும் அதன் அருகே சுனை
ஒன்றும் உள்ளன.

இந்த சுனைக்கு அருகேயுள்ள பாறையில் சிற்பங்கள்
வரையப்பட்டுள்ளன. கோயிலின் கதவில் சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் சிற்பமாக
அமைந்துள்ளது. சிரவணனுக்கு, 63 நாயன்மார்களை ஒட்டி சிலை
அமைக்கப்பட்டுள்ளது. பிற்காலத்தில் ராமபிரானும் நதியில் நீராடி, இந்த
வில்வவனநாதரை தரிசித்தார். இன்றும் இங்குள்ள தத்துவசாரா நதிக்கு, ராமநதி
என்றும் பெயர் உண்டு. இப்படியாக தந்தையும் மகனும் வணங்கியதுதான் இந்த
கடையம் நித்ய கல்யாணி சமேத வில்வவனநாதர் ஆலயம். இந்த சிவாலயத்தில்
ராமாயணத்தோடு தொடர்புடைய சிற்பங்களைக் காணலாம்.

மகாகவி பாரதியார்
இவ்வூரின் மருமகன் ஆவார். இவ்வூரைச் சேர்ந்த செல்லம்மாளைத்தான் அவர்
திருமணம் செய்து கொண்டார். இவ்வூரில் சில வருடங்கள் அவர் தங்கியிருந்தார்.
அப்போது வில்வவனநாத சுவாமி கோயிலுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
‘சங்கரன் தேவி, சரஸ்வதி, மாதா, மகேஸ்வரன் தோழி, மகாலட்சுமி, உத்தமதேவி’
என்றெல்லாம் நித்ய கல்யாணி அம்மனை வர்ணித்துள்ளார். கோயிலின் முன்புள்ள
வட்டப் பாறையில் அமர்ந்துதான் ‘‘காணி நிலம் வேண்டும், பராசக்தி, காணி நிலம்
வேண்டும்’’ என்ற புகழ் பெற்ற பாடலை எழுதினார்.

கடையம் வில்வநாதர்
ஆலயத்தின் வரலாற்றை கோயிலின் கருவறைச் சுவரில் எழுதிவைத்திருக்கிறார்கள்.
அதன்படி 800 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீவிக்கிரம பாண்டியன் என்பவரால் இந்த
ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. இந்த இறைவனுக்கு கலியுக ராமேஸ்வரமுடையார்,
தசரத ராமேஸ்வரமுடையார் என்ற திருப்பெயர்களும் உண்டு. இங்குள்ள சிவிலி
மண்டபத்தை நாயக்க மன்னரும் தெப்பக் குளத்தை தளவாய் முதலியார்
குடும்பத்தினரும் கட்டினார்கள்.
வடமொழியின்படி ‘கல்யாண்’ என்றால்
மங்கலம், பரமானந்தம், அதிர்ஷ்டம், அழகு, வளம், கருணை, நன்மை, ஆசீர்வாதம்,
பரிசுத்தம், வணங்கத்தக்க, சொர்க்கம் என்று பல்வேறு பொருள்கள் உள்ளன.

இத்தலத்து
அம்மன் நித்யகல்யாணி என்பதால் எந்நாளும் எந்நேரமும் வரம் அருளுபவளாகக்
கருதப்படுகிறாள். ஒரு காலத்தில் இத்தலத்து அம்பாள் நித்யகல்யாணி, மிகுந்த
உக்கிர தேவதையாக இருந்துள்ளாள். மக்கள் எல்லோரும் உக்கிரம் குறைய வேண்டி
பிரார்த்தனை செய்தனர். ‘‘தற்போது ஜன நெருக்கடியான இடத்தில் நான்
இருக்கிறேன். எனவே, நான் என் கையில் உள்ள கடையத்தினை தூக்கி வீசுகிறேன்.
அது எங்குபோய் விழுகிறதோ அங்கு நான் குடி கொள்வேன். நீங்கள் என்னை
வழிபடுங்கள்’’ என்று அவர்களுக்கு பதிலளித்தாளாம். அந்தக் கடையம் விழுந்த
இடமே இன்றைய கடையம் என்னும் ஊராகியது.

சிவாலய அமைப்புபோல
அல்லாமல், இங்கு பலிபீடத்தை அடுத்து நந்தி உள்ளார். பிற்காலத்தில் கொடிமரம்
அமைக்கப்பட்டதால் இந்த அமைப்பு மாறியிருக்கலாம் என்கிறார்கள். இங்குள்ள
விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவர். குறிப்பாக, வருவாய்த் துறையில் வேலை
பார்த்து வரும், வி.ஏ.ஓ.க்கள், ரெவின்யூ இன்ஸ்பெக்டர்கள், தலையாரி, கிராம
மணியம் ஆகியோர் பெருமளவு இவரை தரிசிக்க வருகிறார்கள். இவரை தரிசிப்பதன்
மூலம் தங்கள் பணிகள் இடையூறின்றி நடப்பதுடன், பதவி உயர்வும் கிடைக்குமென
நம்புகிறார்கள். இவருக்கு ‘மணியம் விநாயகர்’ என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்த கோயிலின் வரவு செலவைக் கூட மிகத் துல்லியமாக இவர் கண்காணிக்கின்றார்.
இதில் சிறு பிரச்னை ஏற்படுத்தினாலும் கூட தண்டனை உறுதி என்றும்
கருதப்படுகிறது.

தற்போது தெற்கு வாசலே பிரதான வாசலாக உள்ளது.
தெற்கு வாசல் வழியாகச் சென்றால் நித்யகல்யாணி அம்மனை தரிசிக்கலாம். கோயில்
பிராகாரத்தைச் சுற்றி வந்தால், வைத்திய நாதகணபதியும் முருகப் பெருமானும்
அருள்கின்றனர். மேலும், அதிகார நந்தி, சந்திர-சூரியன் சிலைகளைக் காணலாம்.
தொடர்ந்து நடந்தால் கன்னி விநாயகரை தரிசிக்கலாம். தட்சிணாமூர்த்தி தெற்கு
நோக்கி அமர்ந்துள்ளார். காசி விஸ்வநாதர்-விசாலாட்சி, வள்ளி-தெய்வானை சமேத
சுப்பிரமணியர், சரஸ்வதி, லட்சுமி, அன்னபூரணி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், சனி
பகவான் என அடுத்தடுத்து வணங்கியபடியே தரணி பீடத்தினை அடையலாம். இந்த தரணி
பீடம், சக்தியின் 15 கலைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் அபூர்வ பீடம். இந்த
பீடத்தை தரிசித்து வேண்டிக் கொண்டால் கேட்டது கிடைக்கிறது; நினைத்தது
நடக்கிறது.

அர்த்த மண்டபத்திற்குள் நடராஜர் சந்நதி தெற்கு நோக்கி
உள்ளது. உள்ளே நந்தி, பிள்ளையார், முருகன் ஆகியோரை வணங்கிவிட்டு, கர்ப்ப
கிரகத்தில் வில்வவனநாதரை தரிசிக்கலாம். அடுத்து தெற்கு நோக்கி
அருள்பாலிக்கும் நித்யகல்யாணியை வணங்கலாம். இத்தல தெப்பக் குளத்தில்
நீராடினால் தீராத பாவமெல்லாம் தீரும் என்கிறார்கள். திருநெல்வேலியிலிருந்து
50 கி.மீ. தொலைவிலும் தென்காசியில் இருந்து 20 கி.மீ. தூரத்திலும் கடையம்
உள்ளது. கடையம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ள
கோயிலுக்கு ஆட்டோ வசதி உண்டு.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum