தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வேண்டும் வரமெலாம் வழங்குவான் வரதன்

Go down

வேண்டும் வரமெலாம் வழங்குவான் வரதன் Empty வேண்டும் வரமெலாம் வழங்குவான் வரதன்

Post  amma Fri Jan 11, 2013 1:40 pm

தன்னை மதியாமல் பிரம்மன் செய்யும் யாகத்தை துவம்சம் செய்ய புறப்பட்டாள்,
சரஸ்வதி. கலை பிறக்கும் இடத்தில் கோபம் பிறந்தால் நல்லதா? கோபத்தில்
நியாயம் இருந்தாலும் வெளிப்படுத்துவதில் ஒரு தர்மம் இருக்க வேண்டுமல்லவா?
கணவன் மீதுள்ள கோபத்தால் நதியாக மாறி, யாக சாலையை அழிக்க நினைப்பது தவறான
முன்மாதிரி அல்லவா? அன்னத்தில் அமர்ந்து அருளும் அணங்கு, ஆறாய் மாறி போர்
புரிந்தால் புராணம், காலத்திற்கும் கலைமகளை தூற்றுமே! மருமகளை தடுத்து,
சினம் தணித்து அருளப் புறப்பட்ட மாயவன், வேகமாய் வந்த வேகவதியை, குறுக்கே ப
டுத்து நிதானப்படுத்திய தலம் காஞ்சி. வணங்கியவருக்கெல்லாம் அருள நிலை
கொண்டார், பிரம்மன் வழிபட்ட வரதராஜ பெருமாள்.

வேண்டும் வரங் களை
எல்லாம் தட்டாமல் வாரி வழங்குபவர் என்பதாலேயே இவர் வரதராஜன். இப்படி
காஞ்சியின் புராணப் பெருமையைக் கேட்டு மகிழ்ந்த முசுகுந்த மகாராஜாவுக்கு
தன் ஆளுகைக்கு உட்பட்ட இடத்தில் வரதனுக்கு வானுயர் கோயில் கட்ட வேண்டும்
என்கிற ஆவல் பூத்தது. விதூமம் என்கிற கந்தர்வனே முசுகுந்தனாய் பிறந்தான்.
முசு என்றால் குரங்கு. இவனே அறியாமல் செய்த வில்வ அர்ச்சனையால் குளிர்ந்த
ஈசன், முசுகுந்தனுக்கு அவனது பிறப்பின் நோக்கத்தை உணரச் செய்தார். இதை
தொடர்ந்து இந்திரனிடமிருந்து லிங்கங்களைப் பெற்று, திருவாரூர், திரும
றைக்காடு, நாகப்பட்டினம், திருநள்ளாறு, திருக்காரவாசல், திருவாய்மூர்,
திருக்குவளை ஆகிய இடங்களில் பிரதிஷ்டை செய்தார்.

வேட்டைக்குச்
சென்று வந்தபோது இவனது குதிரை, ஒரு வேதியனை மிதித்துக் கொன்றுவிட அந்த
தோஷத்தை சிவபூஜை செய்து போக்கிக் கொண்டான் என்கிறது புராணம். அது
மட்டுமல்ல தேவர்களுக்கு போரில் உதவியதால் மகிழ்ந்த தேவர்கள்
முசுகுந்தனுக்கு என்ன வரம் வேண்டும் எனக் கேட்க, தாம் யோக நித்திரை யில் ஆழ
வேண்டும்; அதற்கு எந்தத் தொந்தரவும் நேரக்கூடாத வரம் வேண்டும் என்று
முசுகுந்தன் கேட்டான். ‘‘உன் யோகநித்திரையை கலைப்பவர் கள் எரிந்து
சாம்பலாவார்கள்’’ என்கிற வரத்தை தேவர்கள் முசுகுந்தனுக்கு வழங்கினார்கள்.
முசுகுந்தன் ஒரு குகைக்குள் புகுந்து யோக நித்திரையில் ஆழ, கிருஷ்ண
லீலையால் முசுகுந்தனின் நித்திரையைக் கலைத்து சாம்பலானான், காலயவனன். அதன்
பிறகு பரமாத்மா தரிசனத்தால் மனம் கனிந்து, பதரிகாசிரமத்தில் தவமியற்றி
கண்ணன் திருவடி நிழலையடைந்தான் என நீள்கிறது முசுகுந்தனின் கதை.

இந்த
முசுகுந்தன்தான், தான் ஞானத்தால் கண்ட மகாவிஷ்ணுவின் திவ்ய ரூபத்தை
நிரந்தமாக பூமியில் நிறுவ பல ஆலயங்களை எழுப்பினான். அதி லொன்று கோமுகி
நதித் தீரத்தில் உள்ள வரதராஜர் கோயில். கள்ளக்குறிச்சிவரை வெப்பமாய் வறட்சி
காட்டும் பூமகள், கள்ளக்குறிச்சியத் தாண்டும் போதே பசுமை போர்த்தி
சிரிக்கிறாள். கோமுகி அணையும் சுற் றிலும் மலையுமாய் அமைந்த
கச்சிராப்பாளையத்தில் அழகாய் ஒரு குன்று. அதன் மேல் இருக்கிறது வரதராஜர்
கோயில். கல்லும் மரங்களும் பிணைந்து நிற்கும் மலைக் கோயில் தரிசனம் காணச்
செல்லும் நம்மை உயர்ந்த கல் கருட கம்பம் வரவேற்கிறது. நான்கு முகங்களைக்
கொண்ட இந்த கருட கம்பத்தில் சங்கு-சக்கரமும் அனுமனும் கருடனும்
அருள்கிறார்கள்.

இதைக் கடந்து சென்றால் குன்றின் அடிவாரத்தில் ஒரு
கோயில் இருக்கிறது. இது பஜனை மடமாக இருந்து, பிறகு கோயிலானது
என்கிறார்கள். வெளிச்சம் இருக்கும்போதே மலைக்கோயிலை தரிசித்துவிட்டு,
இங்கு பிறகு வரலாம் எனப் படியேறத் தொடங்குகிறோம். பெயர் தெரியாத தாவரங்கள்,
‘படிகட்டுகள் எனக்கு தான் சொந்தம்’ என வளைக்க, மரவட்டைகளும் எறும்புகளும்
‘இது எங்கள் இடம்’ என போட்டி போட, ‘இன்னும் நாங்கள் வெளியே வரவில்லை’
என்பதால் சில ஊர்வன தாவரங்களினூடே நகர்வதை புரிந்துகொண்டு எச்சரிக்கையாய்
படி ஏறுகி றோம். ஐந்து நிமிடம் ஒழுங்கற்ற அந்த கல் படிகளைக் கடந்து, இரண்டு
பகுதியாய் பிரியும் மலைப்படிகளின் சந்திப்பை அடைகிறோம். இதில் வலது
பக்கமாய் மேலே ஏற, வரதராஜர் கோயில்.

சிதிலமடைந்திருந்தாலும்
கம்பீரமாய் நிற்கும் முன்மண்டபத்தை அடைகிறோம். இதை தர்பார் மண்டபம்
என்கிறார்கள். ஒவ்வொரு தூணிலும் அழகிய சிற்பங்கள். ராமன், பசுபதீஸ்வரர் என
பலப்பல! இங்கிருந்து இன்னும் சில படிகள் கடந்தால் ஆலய உள் மண்டபத்தை
அடையலாம். அதை ஒட்டி மடப்பள்ளி. இதன் விதானம் முழுக்க காட்டு பல்லிகள்
நீக்கமற நிறைந்திருக்கின்றன. இங்கு அக்கினி மூட்டப் பட்டு எத்தனை ஆண்டானதோ!
அதைக் கடந்து செல்ல சிறிய உள்பாதை. தாயாரின் சந்நதியையும் வரதராஜரின்
சந்நதியையும் தனித்தனியே வலம் வரும் வகையில் அமைந்திருக்கிறது.

கடுமையான
இருட்டு, வௌவால் படபடக்கும் சப்தம். அதன் எச்சம் படிந்த தரையின் வீச்சம்
மூச்சு முட்டுகிறது. நான்கு வாசல்களோடு அமைந்த கோயிலில், கிழக்குச்
சூரியன், மூலவர் வரதராஜரை தினமும் வணங்கத்தக்க வகையில் சாளரம்
அமைத்திருக்கிறார்கள். வரதராஜரின் கருவறை முன் வாயில் காப்போரான
ஜெயன்-விஜயர்களின் உயரம் ஆச்சர்யமூட்டுகிறது. ஆனால் கருவறைக்குள் கடவுள்கள்
இல்லை. சுவர் முழுக்க இருக்கும் எழுத் துருக்கள் இந்த ஆலயத்தின் வரலாற்றை
அழியாமல் காத்து நிற்கின்றன. இவற்றையும் பாதுகாக்கத்தான் யாருமில்லை என்ற
வேதனை நெஞ்சை கனக்க வைக்கிறது. வெளியே வந்தால், மலையை ஒட்டி இருக்கும்
நீர்ச்சுனையைக் காணலாம். திருமஞ்சனத்திற்கும் மடப்பள்ளிக்கும் நீர் தந்த
வற்றாத சுனை, ‘எப்போது என்னிடமிருந்து நீர் கொண்டு சென்று மீண்டும்
அபிஷேகம் செய்வீர்கள்?’ என்று கேட்டு அழுவதுபோல இருகிறது.

மீண்டும்
தர்பார் மண்டபம் வந்து குன்றின் இன்னொரு பகுதிக்குச் சென்றால், அங்கு
வள்ளலாரின் பக்தரும் சித்தருமான தில்லை அருள் ஜோதிலிங்க சுவாமிகள் வாழ்ந்த
பகுதியை அடையலாம். இந்த சித்தர் மூலிகையால் தங்கம் உருவாக்க வல்லவர்.
சித்துகள் சிவனை நெருங்க விடாது என்பதை உணர்ந்து, அதை மக்களின் நன்மைக்கு
மாத்திரம் பயன்படுத்தி விட்டு, மெல்ல வடலூர் வந்து, சிவனோடு கலந்தவர்.
இங்கு வாழ்ந்த காலம் வரை குன்றின் மேல் குடிலமைத்து அங்கிருந்த கிணற்றில்
நீராடி இறை தியானத்தில் லயித்தவர். இவர் நினைவாக இன்றும் குன்றில் ஒரு
விளக்கு மேடை அமைத்து ஜோதி ஏற்றி வழிபடுகிறார்கள். பௌர்ணமியன்று
கிரிவலமும் உண்டு. இவர் வாழ்ந்த இடமும் இவர் பயன்படுத்திய கிணறும் மௌனமாய்
சோகக்கதை சொல்கின்றன. அங்கிருந்து மற்றொரு புறமாக கீழிறங்கி, அடிவாரக்
கோயிலை அடைகிறோம்.

மலைமேலிருக்கும் கோயிலின் துயரக் காட்சிகளால்
துவண்டுபோன மனம், இந்தக் கோயிலில் சற்று ஆறுதலடைகிறது. பிராகாரத்தில்
சக்கரத்தாழ்வார் அருள்கிறார். அவருக்கு நேரே பெருந்தேவித் தாயார். இவர்
மேலிருந்து கீழே வந்தவர். இவரோடு இருந்த ஏராளமான சிலைகள் சமூக விரோதிகளால்
சிதிலமாகிப் போயின. நந்தவனத்தில் லட்சுமி அருள, உள்ளே துர்க்கையும் மலைக்
கோயிலிருந்து கொண்டு வரப்பட்ட மூலவர் விக்ரகமான வரதராஜ ரும்
ஸ்ரீதேவி-பூதேவியோடு அருள்கிறார்கள். அடிவாரக் கோயில் கருவறையில்
ஸ்ரீதேவி-பூதேவியோடு காட்சிதரும் பெருமாளை அழகர் பெருமாள் என அழைத்து
கொண்டாடுகிறார்கள். இவர் அரு கிலேயே உற்சவமூர்த்திகளையும் காணமுடிகிறது.

இந்த
அழகர் பெருமாளிடம், ‘‘மலை வாசனுக்கும் இடம் கொடுத்து உன் அருகிலேயே
வைத்திருக்கிறாய்; ஆனால் அவர் இருந்த கோயில் மீண்டும் பொலிவு பெற்று பழைய
சிறப்பு எப்போது காணும்?’’ என நாம் வாய்விட்டே கேட்கிறோம். சுடரொளியில்,
‘அந்த வரத்தையும் தந்தேன்’ என்பதாய் சிரிக்கிறார், அழகன்.
விழுப்புரம்-சேலம்
பாதையில், கள்ளக்குறிச்சி அமைந்திருக்கிறது. இங்கிருந்து 12 கி.மீ.
தொலைவிலுள்ளது கச்சிராப்பாளையம். அடிவாரக் கோயிலுக்குச் செல்ல ஆட்டோ வசதி
உண்டு. ஆலயத் தொடர்புக்கு: 9443074436.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum