பாபாவுடன் ஒரு நாள்......
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
பாபாவுடன் ஒரு நாள்......
பாபாவுக்கு என்று தனியான கொள்கை ஒன்று இருந்தது. தனக்கென்று உணவைத் தனியாகச் சமைக்க கூடாது என்று அவர் பிடிவாதமாக இருந்தார். அதே சமயத்தில் யாராவது அவரை அழைத்து தங்கள் வீட்டில் உணவு உண்ண வேண்டும் என்று கூறினால் அவர் கண்டிப்பாக அதை ஏற்றுக் கொண்டதே இல்லை.
தான் ஒரு சன்னியாசி என்றும், இல்லறத்தார் வீட்டில் இல்லறத் தான் போல விருந்து சாப்பிடுவதில் தமக்குப் பிரியமில்லை என்று கூறி விடுவார். ஒவ்வொரு நாளும் 5 வீடுகளில் பிச்சை எடுப்பதைத் தம்முடைய கொள்கையாக அவர் வைத்திருந்தார்.
பாபா பிச்சை ஏற்கும் விதம்........
பாபா, ஏதாவது 5 வீட்டுக்கு சென்று `அம்மா, தயவு செய்து எனக்கு ஒரே ஒரு ரொட்டித் துண்டு தா' என்று கேட்பார். அவர்கள் பிச்சை இடுவதற்கு வசதியாகத் தன்னுடைய தோளில் நீண்ட துண்டை ஒன்றை மடித்துப் போட்டுக் கொள்வார். அது பையைப் போல காணப்படும். கையில் ஒரு தகரக் குவளையை ஏந்தி இருப்பார். பிச்சையிட வருபவர்கள் திட உணவுப் பொருட்களான ரெட்டி, சாதம் போன்றவற்றை இட்டால் அதைத் துணியில் வாங்கிக் கொள்வார். வேறு குழம்பு, பால், மோர் போன்ற திரவ உணவு வந்தது என்றால் அதைத் தகரக் குவளையில் வாங்கிக் கொள்வார். 5 வீட்டில் வாங்கியவுடன் மசூதிக்குத் திரும்பி விடுவார்.
உணவைச் செலவழிக்கும் முறை........
வாங்கி வந்த உணவை உடனடியாகச் சாப்பிட்டு விட மாட்டார். அதிலிருந்து சிறிதளவு உணவை எடுத்துத் துணி ஒன்றில் முடிந்து அந்த உணவுப் பொட்டலத்தை எரியும் ஹோம குண்டத்தில் போடுவார். அதன் பிறகு அங்கு கூடி இருக்கும் மற்றவர்களுடன் சேர்ந்து எல்லாவற்றையும் ஒன்று கலந்து பகிர்ந்து கொள்வார். இதிலும் மீதியாகக் கூடிய உணவு வகைகளை மண்பானை ஒன்றிலே போட்டு விடுவார்.
அதை மசூதியிலே அனைவரும் பார்க்கக் கூடிய இடத்திலே வைத்து விடுவார். இதை மூட மாட்டார். தேவைப்படுவோர் அதில் இருந்து உணவு எடுத்து உண்ணலாம். அங்கிருக்கும் வேலைக்காரர்களோ, அங்கே வரக்கூடிய பிச்சைக்காரர்களோ அதை எடுத்துக் கொள்வார்கள். சில சமயங்களில் அங்கு இருக்கக் கூடிய பூனை, நாய் போன்ற பிராணிகளும் அந்த உணவைச் சாப்பிடுவதுண்டு.
எல்லாவற்றையும் பாபா பார்த்துக் கொண்டிருப்பார். ஆனால், எவரையும் பாபா கடிந்து விலக்க மாட்டார், துரத்த மாட்டார். பக்தர்கள் எவராவது காணிக்கையாக உணவுப் பொருட்களைக் கொண்டு வந்தால் அவர் அதை ஏற்று அங்கு குழுமியிருக்கும் ஏனைய பக்தர்களுக்குப் பகிர்ந்து தந்துவிடுவார். பாபாவின் செய்கைகளும், நடத்தைகளும் மற்றவர்களுக்கு புரியாத புதிராக இருந்தன.
பாபாவாவின் சாவடிப் பிரவேச ஏற்பாடுகள்.........
பாபாவுக்கு அந்தரங்க தொண்டர்கள் இருந்தனர். அவர்களில் அப்துல் என்பவர் முக்கியமானவர். அவருடன் ராதா கிருஷ்ணமாயி என்ற பக்தையும் பாபாவுக்குப் பிரியமானவராக விளங்கினார். இவர்கள் இருவரும் சாவடிக்கும் லெண்டி என்ற தோட்டத்துக்கும் இடையே இருக்கக் கூடிய பாதையை நன்றாகச் சுத்தமாகப் பெருக்குவார்கள்.
எந்த விதத் தூசியும் இல்லாமல் சுத்தமாக்கி வைத்து விடுவார்கள். மசூதியில் இருந்து சாவடி வரையில் உள்ள சாலை முழுவதும் சுத்திகரிக்கப்பட்டு அதில் தண்ணீரைத் தெளிப்பார்கள். அதன் பின் கோலங்கள் போடுவார்கள். பாபா, மசூதியிலிருந்து சாவடிக்கு எழுத தருளக் கூடிய பாதையிலே சுத்தமான துணி விரிக்கப்படும். இவ்வாறு ஏற்பாடுகள் முடிந்தவுடன் பாபா சாவடிக்கு எழுந்தருளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்.
பாபாவின் ஊர்வலம்..........
பாபாவின் நெருங்கிய பக்தர்களில் ஒருவரான, தத்யா படீல் என்பவர் பாபாவை சாவடிக்கு எழுந்தருள அழைத்தார். இதுபின்னாளில் ஒரு பழக்கமாகவே மேற் கொள்ளப்பட்டது. அப்போது பாபாவின் மற்றொரு நெருங்கிய பக்தரான பிலாஜி குரோவ் என்பவர் தம்முடைய ஷெனாய் என்ற வாத்தியத்தை இசைப்பார்.
சூழ்ந்து நிற்கக் கூடிய பக்தர்கள் அனைவரும் பஜனைப் பாடல்களைப் பாட துவங்குவர். கம்பீரமான குதிரை ஒன்று ஊர்வலத்துக்கு முன்னால் நடத்திச் செல்லப்படும். இந்த குதிரையை இந்துக்கள் ஷியாம்மகர்ணா என்ற பெயரில் அழைத்தனர். முஸ்லிம்கள் ஷம்ஸுதீன் என்று அழைத்தனர். இந்த ஆரவாரத்துப் பின்னால் பாபாவின் பல்லக்கு வரும். இவ்வாறான ஊர்வலம் பாபா, எப்போதெல்லாம் மசூதியிலிருந்து சாவடிக்கு எழுந்தருளுகின்றாரோ அப்போதெல்லாம் நடைபெறும் பழக்கமாகி விட்டது.
பல்லக்கில் ஏறாத பாபா.......
பாபா பல்லக்கில் ஏறி வரவேண்டும் என்று பக்தர்கள் பெருமளவில் வற்புறுத்தி வந்தனர். பாபாவுக்கென்றே பக்தர்களால் அலங்காரப் பல்லக்கு செய்யப்பட்டிருந்தது. பாபா அதில் வர ஒரு போதும் சம்மதித்ததே இல்லை. பக்தர்களின் இடைவிடாத வேண்டுகோளின் பலனாக அவர்கள் வற்புறுத்தல் தாங்காமல் பாபா தன்னுடைய காலணிகளை அதில் வைத்து கொண்டு வர உத்தரவளித்தார். பக்தர்கள் அந்த பாக்கியமாவது தங்களுக்கு கிடைத்ததே என்று மகிழ்வு கொண்டு, அன்றைய தினத்திலிருந்து பாபாவின் பாதுகைகளைத் தாங்கிச் செல்ல தொடங்கினார்கள்.
பாபாவுக்குச் செய்யப்பட்ட உபசாரம்........
பாபா பக்தர்களின் குழுவினரோடு குழுவினராக நடந்தே வருவார். அப்போது பாபாவின் தலைக்கு நேரே பக்தர்கள் குடைபிடிப்பார்கள். அவ்வாறு செய்வதை மிகப் பெரிய மரியாதை என்றே அவர்கள் கருதினர். பாபா பக்தர்கள் செய்வதை ஏற்று மவுனமாக வழி நடந்து வருவார். இவ்வாறான நிகழ்ச்சிகள் மசூதியில் இருந்து பாபா ஒன்று விட்டு ஒரு நாள் எழுந்தருளும் போதெல்லாம் மகிழ்ச்சியுடன் நடை பெற்றது.
ஆஞ்சநேயரும்-பாபாவும்........ மசூதியை விட்டு சாவடிக்குச் செல்லும் வழியில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்று இருந்தது. இந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு அருகில் பாபா வந்தவுடன் எவருக்கும் விளங்கிக் கொள்ள முடியாத சில சமிக்ஞைகளை ஆஞ்சநேயரின் உருவத்தை நோக்கிச் செய்வார். அவை காண்போருக்கு பெரும் மர்மத்தை உள்ளடக்கிய சமிக்ஞையாக இருந்தன.
காலை சிற்றுண்டிக்குப் பிறகு பாபாவின் நடவடிக்கைகள் காலைச் சிற்றுண்டி முடிந்தவுடனே, பாபா தான் தங்கி இருக்கும் இடத்தை விட்டு வெளியேறிச் செல்வார். அவர் செல்லக்கூடிய இடம் ஒரு தோட்டமாக இருந்தது. அதன் பெயர் லெண்டி என்பதாகும். பாபா லெண்டித் தோட்டத்துக்கு கிளம்பிச் செல்லுகிறார் என்றால், அவரது பக்தர்களும் அவரைப் பின்பற்றிச் செல்லுவார்கள்.
பாபாவுக்குப் பிரியமான தொண்டர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் அப்துல் பாபா என்பதாகும். அவரும் பாபாவுடன் செல்வார். லெண்டித் தோட்டத்துக்கு வந்ததுமே பாபாவும், அப்துல் பாபாவும் மட்டுமே உள்ளே செல்லுவர். வேறு யாரும் அதனுள் போக அனுமதி மறுக்கப்பட்டது.
அணையா விளக்கு......
அந்த லெண்டித் தோட்டத்திற்குள் அணையா விளக்கு ஒன்று இருந்தது. இந்த விளக்கின் அமைப்பு வித்தியாசமான முறையில் இருந்தது. இரண்டடி ஆழமுள்ள ஒரு பெரிய பள்ளம் அங்கே இருக்கும். அந்தப் பள்ளத்திற்குள் ஒரு விளக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த விளக்கு எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் வகையில், துத்த நாகத் தகட்டினால் செய்யப்பட்டிருக்கும் ஒரு பந்தல் காணப்படும்.
இந்தப் பந்தலைச் சுற்றி 20 திரைகள் கட்டப்பட்டிருந்தன. இதைப் பார்க்கும் போது ஒரு கூடாரத்தை நினைவுபடுத்தும். அந்த தோட்டத்தை செழிப்பாகப் பண்படுத்தும் பணி அப்துல் பாபாவுக்கு தரப்பட்டிருந்தது. அத்துடன் அந்த அணையா விளக்கையும் பாதுகாக்க வேண்டிய கடமை அப்துல்பாபாவுக்கு இருந்தது. எனவே இடைவிடாத கண்காணிப்புடன் திகழ்வார் அப்துல்பாபா.
பாபாவின் விசித்திர செயல்.......
பாபா அணையா விளக்கு இருக்கும் கூடாரத்தினுள் நுழைந்தவுடன் அங்கே தயாராக வைக்கப்பட்டிருக்கக் கூடிய நீர் நிரம்பிய வாளியில் இருந்து சிறிதளவு நீரை கைகளிலே எடுத்து கொள்வார். அந்த நீரை விளக்கை சுற்றிலும் நன்றாகத் தெளிப்பார். அதன் பின்னர் ஒவ்வொரு திசையிலும் சிறிதளவு தூரம் நடப்பார். அந்த திசைகளை உற்றுப் பார்த்துக் கொண்டே இருப்பார்.
பின்னர் திரும்பி அணையா விளக்கு இருக்கும் இடத்துக்கு அருகில் வருவார். இவ்வாறு தோட்டத்திலேயே காலை 10 மணி வரை தங்கி விடுவார். அதன் பிறகு துவாரகா மாயீக்குத் திரும்பி விடுவார். மசூதி திரும்பியவுடன் அங்கு அவரை தரிசிக்க வந்திருக்கும் அன்பர்களுடன் கலந்துரையாடிக் கொண்டு இரண்டு இரண்டரை மணி நேரம் கழித்து விடுவார்.
இரண்டாவது தடவையாகப் பிச்சை........
பகல் வேளை ஆனவுடனேயே பாபா 2-வது தடவையாக பிச்சைக்குப் புறப்படுவார். தமக்குத் தோன்றிய வீடுகளில் நின்று பிச்சை கேட்பார். அதுவும் சரியாக 5 வீடுகளில் தான் அந்தப் பிச்சையையும் எடுப்பார். அதன் பிறகு மசூதிக்கு திரும்பி விடுவார்கள். பாபா பிச்சையிலிருந்து திரும்பியவுடன் மசூதியில் குழுமியிருக்கும் பக்தர்கள், அவருக்கு கற்பூர ஹாரத்தி செய்வார்கள்.
பக்தர்கள் தங்கள் இல்லங்களில் இருந்து பாபா அருந்துவதற்கென்று பல்வேறு உணவு பொருட்களை கொண்டு வந்திருப்பார். பாபா பிச்சை பொருட்களுடன், பக்தர்கள் அனைவரும் கொண்டு வந்த உணவு வகைகளையும் ஒன்றாக போட்டு கலந்து அங்கிருக்கும் அனைவருக்கும் பிரசாதமாக தருவார். அவற்றுடன் விபூதியும் பிரசாதமாக வழங்கப்பட்டது. அனைவரும் சமய வித்தியாசம் பாராமல் அதை நெற்றிக்கு இட்டு கொண்டு பாபாவின் பிரசாதங்களை அருந்தி மகிழ்வர். அனைவரும் உண்டவுடன் மசூதியில் திரை போடப்பட்டு விடும்.
திரைக்குப் பின்னால்........
மசூதியில் திரை போடப்பட்ட பிறகு எந்த பக்தருக்கும் உள்ளே நுழைய அனுமதியில்லை. பாபாவின் அன்பைப் பெற்ற இரு தொண்டர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் பெயர் பேட் பாபா. இன்னொருவர் பெயர் ஷாமா. அவர்கள் பாபாவுக்கு உணவு பரிமாறுவர் பாபாவுடன் சேர்ந்து அவர்களும் உண்பர்.
பாபா உணவு உண்டு முடியும் வரையில் அவரின் மற்றொரு தொண்டரான சகுண்மேரு நாயர் என்பவர் காத்திருப்பார். பாபா உணவை முடித்தவுடன் தயாராக வைத்திருக்கக் கூடிய பீடாவை அவருக்கு தருவார். பாபா பீடாவை ஏற்றுக் கொண்டு பின்னால், அவர்கள் உண்ட இடத்தை சகுண்மேரு நாயர் சுத்தப்படுத்த ஆரம்பிப்பார்.
உணவுக்குப் பின் பாபாவின் நடவடிக்கை........
பாபா மதிய உணவை உண்ட பின் மசூதியின் ஒரு மூலைப் பகுதிக்குச் சென்று விடுவார். ஒரு சிறிய பையை எடுத்து அதனுள் கையை விட்டு சில நாணயங்களை வெளியே எடுப்பார். அநேகமாக அது அரையணா, நாலணா, எட்டணாவாக இருக்கும். கிட்டத்தட்ட 10, 15 நாணயங்களை அவர் வைத்திருப்பார். பின்னர் அந்த நாணயங்களின் மேற்பரப்பினை நோக்கித் தேய்க்க ஆரம்பிப்பார்.
இவ்வாறு அவர் அந் நாணயங்களைத் தேய்த்துக் தேய்த்தே அவை வழவாப்பாகி விட்டன. பக்தர்களுடன் சந்திப்பு....... பிற்பகல் 2 மணி அளவில் பாபா மசூதியின் திரைக்கு அப்பாலிருந்து வெளியே வருவார். அப்போது அவரை காண்பதற்காகப் பக்தர்கள் கூட்டம் கூடியிருக்கும். அவர்கள் பாபாவைக் கண்டவுடன் தொழுது வணங்கி தங்கள் பிரச்சினைகளை கூறுவார்கள். பாபா அவற்றை கவனத்துடன் காது கொடுத்து கேட்பார்.
மாலை நேரத்தில் பாபா.......
மாலை நேரம் வரை இவ்வாறு பக்தர்களுடன் பாபா கழித்து விட்டு அதன் பின்னர் எழுந்து மசூதியின் முன்புற முற்றத்தில் சிறிது நேரம் உலவுவார். சிலசமயங்களில் வெளி சுவரில் சிறிது நேரம் சாய்ந்து நிற்பார். அந்த நேரத்தில் சாலையில் போவோர் வருவோரி டம் சிறிது நேரம் உரையாடுவார். மணி 5 ஆனவுடன் மசூதியை விட்டு கிளம்பி லெண்டித் தோட்டத்துக்குச் செல்வார்.
அங்கே சென்று சிறிது நேரம் உலாவுவார். பக்தர்கள் மாலை நேர ஹாரத்திக்காக மசூதியில் காத்திருப்பார்கள். எனவே 6 மணிக்குள் மீண்டும் மசூதிக்கு திரும்பி விடுவார். பக்தர்கள் கற்பூர ஆரத்தி செய்து அவரை வரவேற்பார். பிறகு பக்தர்களுடன் கலந்து அவர் உரையாடி கொண்டிருப்பார். பாபாவை காண வருபவர்கள் பலரும் தட்சனை தருவது வழக்கம். கொடுக்க.. மனமில்லாத பக்தர்களிடம் தட்சணை கொடு என்று கேட்டே வாங்கிவிடுவார் பாபா.
இரவு நேர நடவடிக்கைகள்........
இரவு 8 மணி ஆனவுடன் எவ்வளவு வசூலாகி இருக்கிறது என்று கணக்கு கேட்டுத் தெரிந்து கொள்வார். அந்தப் பணத்தை எடுத்து தமக்குத் தோன்றிய எந்தப் பக்தர்களுக்காவது அல்லது பிச்சைக்காரர் களுக்கு கொடுத்து விடுவார். அந்தப் பணம் பாபா விரும்பும் பலருக்கும் பங்கிடப்பட்டு விடும். அதன் பிறகு தன்னை சூழ்ந்து இருப்பவர் அனைவருக்கும் விபூதி தருவார். வீட்டுக்கு செல்லும்படி விடை கொடுப்பார்.*
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» முதல் நாள் பிரியாணி :அடுத்த நாள் பட்டினி
» இந்த நாள் நல்ல நாள்
» இந்த நாள் இனிய நாள்
» ஒரு நாள் ஒரு நாள்
» நல்ல நாள்
» இந்த நாள் நல்ல நாள்
» இந்த நாள் இனிய நாள்
» ஒரு நாள் ஒரு நாள்
» நல்ல நாள்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum