தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நாகபுரியில்

Go down

நாகபுரியில் Empty நாகபுரியில்

Post  birundha Sat Mar 23, 2013 4:22 pm

காங்கிரஸின் கல்கத்தா விசேஷ மகாநாட்டில் நிறைவேறிய தீர்மானங்கள், நாகபுரி வருட மகாநாட்டில் ஊர்ஜிதம் செய்யப்பட வேண்டும். கல்கத்தாவைப் போலவே இங்கும் பிரதிநிதிகளும் வேடிக்கை பார்ப்போரும் ஏராளமாக வந்திருந்தார்கள். அப்பொழுதும் காங்கிரஸு க்கு வரும் பிரதிநிதிகளின் தொகை நிர்ணயிக்கப்படவில்லை. இதனால், அம்மகாநாட்டில் பிரதிநிதிகளின் தொகை பதினான்கு ஆயிரத்திற்கு வந்துவிட்டது என்பதே என் ஞாபகம். பள்ளிக்கூடப் பகிஷ்காரத்தைப் பற்றிய பகுதியில் சிறு திருத்தம் செய்ய வேண்டும் என்று லாலாஜி வற்புறுத்தினார். அதை நான் ஏற்றுக்கொண்டேன். அதைபோல் தேசபந்துவின் யோசனையின் பேரில் மற்றும் சில திருத்தங்களும் செய்யப்பட்டன. பிறகு ஒத்துழையாமைத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. காங்கிரஸ் அமைப்பு விதிகளின் மாற்றத்தைப் பற்றிய தீர்மானமும், காங்கிரஸின் இந்த மகாநாட்டிலேயே விவாதத்திற்கு வர இருந்தது.

உபகமிட்டி தயாரித்திருந்த நகல், கல்கத்தா விசேஷ மகாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆகையால், விஷயம் முழுதும் அறிவிக்கப்பட்டு விவாதிக்கப் பட்டிருந்தது. முடிவாகத் தீர்மானிப்பதற்காக அது நாகபுரி மகாநாட்டின் முன்பு வந்தது. அம்மகாநாட்டிற்கு ஸ்ரீ ஸி.விஜயராகவாச்சாரியார் தலைவர். ஒரே ஒரு முக்கியமான மாற்றத்துடன் விஷய ஆலோசனைக் கமிட்டி, நகலை நிறை வேற்றியது. பிரதிநிதிகளின் தொகை 1,500 ஆக இருப்பது என்று நகலில் இருந்தது என்று நினைக்கிறேன். அந்தத் தொகைக்குப் பதிலாக அந்த இடத்தில் 6,000 என்பதை விஷயாலோசனைக் கமிட்டி சேர்த்தது. இவ்விதம் இத்தொகையை அதிகரித்தது. அவசரப்பட்டு முடிவுக்கு வந்ததன் பலன் என்பது என் முடிவு. இத்தனை வருடங்களின் அனுபவமும் என்னுடைய அக்கருத்தையே ஊர்ஜிதம் செய்கிறது. காரியங்களைச் சரியாக நடத்துவதற்குப் பிரதிநிதிகளின் தொகை அதிகமாக இருப்பது எந்த வகையிலும் உதவியாக இருக்கும் என்றோ, ஜனநாயகக் கொள்கையை அது பாதிக்கிறது என்றோ நம்புவது வெறும் மயக்கம் என்பதே என் கருத்து.

எப்படியும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடும் ஆறாயிரம் பொறுப்பற்ற ஆசாமிகளை விட, மக்களின் நன்மையில் தீவிர ஆர்வம் கொண்ட, விசாலமான மனப்போக்குள்ள, உண்மையானவர்களான ஆயிரத்து ஐந்நூறு பிரதிநிதிகளே ஜனநாயகத்திற்கு என்றும் சிறந்த பாதுகாப்பாவார்கள். ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், மக்கள் தீவிரமான சுதந்திர உணர்ச்சியும், சுயமதிப்பும், ஒற்றுமை உணர்ச்சியும் உள்ளவர்களாக இருக்க வேண்டும். நல்லவர்களாகவும், உண்மையானவர்களாகவும் இருப்பவர்களையே தங்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்த வேண்டும். பிரதிநிதிகளின் தொகை விஷயத்தில் விஷயாலோசனைக் கமிட்டி ஏதோ மனக்கிலேசம் அடைந்திருந்ததால், ஆறாயிரம் என்ற எண்ணுக்கு மேலேயும் போக அது விரும்பியிருக்கக் கூடும். ஆகையால், ஆறாயிரம் என்ற எல்லை சமரசத்தின் பேரில் திட்டம் செய்யப்பட்டது. காங்கிரஸின் லட்சியத்தைப் பற்றிய விஷயத்தில் பலமான விவாதம் நடந்தது.

நான் சமர்ப்பித்திருந்த அமைப்பு விதிகளில் சாத்தியமானால் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குள் அடங்கிய சுயராஜ்யத்தை அடைவது, அவசியமானால் அதற்குள் அடங்காத சுயராஜ்யத்தைப் பெறுவது என்பது காங்கிரஸின் லட்சியம் என்று இருந்தது. காங்கிரஸிலிருந்த ஒரு கோஷ்டியினர், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குள் சுதந்திரம் அடைவது என்பது மாத்திரம் என்று காங்கிரஸின் லட்சியத்தைக் கட்டுப் படுத்திவிட வேண்டும் என்று விரும்பினார்கள். இக்கட்சியினரின் கருத்தைப் பண்டித மாளவியாஜியும், ஸ்ரீ ஜின்னாவும் எடுத்துக் கூறினர். ஆனால்,தங்களுக்கு ஆதரவாக அதிக வாக்குகளைப் பெற அவர்களால் முடியவில்லை. அதோடு, சுதந்திரத்தை அடைய அனுசரிக்கும் முறை, சமாதானத்தோடு கூடியதாகவும், நியாயமானதாகவும் இருக்க வேண்டும் என்றும் அமைப்பு விதிகளின் நகல் கூறியது. இந்த நிபந்தனைக்கும் எதிர்ப்பு இருந்தது. அனுசரிக்கும் முறையைப் பற்றி எந்த விதமான தடையும் இருக்கக்கூடாது என்று எதிர்த்தவர்கள் கூறினார்கள். இதைக் குறித்துத் தெளிவாக மனம் விட்டு விவாதித்த பிறகு, அசல் நகலில் கூறியிருப்பதைக் காங்கிரஸ் அங்கீகரித்தது.

இந்த அமைப்பு விதிகளை மக்கள் யோக்கியமாகவும், புத்திசாலித்தனத்தோடும், உணர்ச்சியோடும் நிறைவேற்றியிருந்தால், பொதுமக்கள் அறிவைப் பெறுவதற்கு அதுவே சக்தி வாய்ந்த ஆயுதமாக இருந்திருக்கும் என்பது என் அபிப்பிராயம். அதோடு, அதை நிறைவேற்றி வைப்பதற்குச் செய்யும் காரியங்களே நமக்குச் சுயராஜ்யத்தையும் கொண்டு வந்திருக்கும். ஆனால் இந்தக் கருத்தைக் குறித்து இங்கே விவாதிப்பது பொருத்தமற்றதாகும். இந்த காங்கிரஸ் மகாநாட்டில் ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, கதர் ஆகியவைகளைப் பற்றிய தீர்மானங்களும் நிறைவேறின. அது முதற்கொண்டு காங்கிரஸின் ஹிந்து உறுப்பினர்கள், ஹிந்து மதத்திலிருந்த தீண்டாமை என்னும் சாபக்கேட்டை ஒழித்துக் கட்டும் பொறுப்பை மேற்கொண்டிருக்கின்றனர். கதரின் மூலம், இந்தியாவிலிருக்கும் எலும்புக் கூடுகளான ஏழை மக்களுடன் உயிரான உறவுப் பந்தத்தையும் காங்கிரஸ் கொண்டுவிட்டது. கிலாபத்திற்காக ஒத்துழையாமைப் போராட்டத்தைக் காங்கிரஸ் மேற்கொண்டது. ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகக் காங்கிரஸ் அதனளவில் செய்த பெரிய பிரத்தியட்ச முயற்சியாகும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum