தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காங்கிரஸில்

Go down

காங்கிரஸில் Empty காங்கிரஸில்

Post  birundha Sat Mar 23, 2013 2:44 pm

கடைசியாகக் காங்கிரஸ் மகாநாடு நடந்தது. பிரம்மாண்டமான பந்தலும், தொண்டர்கள் கம்பீரமாக அணிவகுத்து நின்றதும், மேடைமீது தலைவர் வீற்றிருந்ததும் என்னைப் பிரமிக்கச் செய்தன. இந்தப் பிரம்மாண்டமான மகாசபையின் முன்பு நான் எம்மாத்திரம் என்று எண்ணி வியப்புற்றேன். தலைவரின் பிரசங்கம் ஒரு தனிப் புத்தகமாகவே இருந்தது. அதை ஆரம்பம் முதல் கடைசி வரையில் படிப்பது என்பது முடியாத காரியம். ஆகையால், அதிலிருந்து சில பகுதிகள் மாத்திரமே படிக்கப்பட்டன. அதன் பிறகு விஷயாலோசனைக் கமிட்டித் தேர்தல். கமிட்டிக் கூட்டங்களுக்குக் கோகலே என்னை அழைத்துப் போனார்.

என் தீர்மானத்தை அனுமதிப்பதாக ஸர் பிரோஸ்ஷா ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால் விஷயாலோசனைக் கமிட்டி முன்பு அதை யார், எப்பொழுது கொண்டு வருவார்கள் என்று திகைத்துக் கொண்டிருந்தேன். ஏனெனில், ஒவ்வொரு தீர்மானத்தின் பேரிலும் நீண்ட சொற்பொழிவுகள் நடந்தன. எல்லாம் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில்தான். ஒவ்வொரு தீர்மானத்தையும் யாராவது ஒரு பிரபலமான தலைவர் ஆதரித்து வந்தார். முக்கியஸ்தர்களின் பேரிகை முழக்கத்தின் நடுவே என் குரல் ஈனக்குரலாக இருந்தது. இரவும் நெருங்கவே என் நெஞ்சு படபடத்துக் கொண்டிருந்தது. கடைசியாக ஆலோசனைக்கு வந்த தீர்மானங்களை, மின்னல் வேகத்தில் முடிவு செய்துகொண்டு போனார்கள் என்றே எனக்கு ஞாபகம். வெளியே போவதற்கு ஒவ்வொருவரும் அவசரப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது இரவு 11 மணி எழுந்து பேச எனக்குத் துணிவு இல்லை. முன்னாலேயே கோகலேயைப் பார்த்தேன். என் தீர்மானத்தை அவர் பார்த்தும் இருக்கிறார். அவர் உட்கார்ந்திருந்த இடத்திற்கு அருகே போய், தயவு செய்து எனக்கு ஏதாவது செய்யுங்கள் என்று குசுகுசுவென்று சொன்னேன். உங்கள் தீர்மானத்தை நான் மறந்துவிடவில்லை. தீர்மானங்களை எவ்வளவு வேகத்தில் அடித்துக் கொண்டு போகிறார்கள் என்பதைப் பாருங்கள். ஆனால் அவர்கள் உங்கள் தீர்மானத்தை விட்டுவிட்டு அப்பால் போய்விடாமல் நான் பார்த்துக் கொள்ளுகிறேன் என்றார், கோகலே.

ஆகவே, எல்லாவற்றையும் முடித்துவிட்டோமல்லவா ? என்றார் ஸர் பிரோஸ்ஷா மேத்தா. இல்லை, இல்லை, தென்னாப்பிரிக்கா பற்றிய தீர்மானம் பாக்கியாக இருக்கிறது. ஸ்ரீ காந்தி நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருக்கிறார் என்று உரக்கக் கூறினார், கோகலே. நீங்கள் தீர்மானத்தைப் பார்த்தீர்களா? என்று கேட்டார் ஸர் பிரோஸ்ஷா. பார்த்தேன். அது உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? மிக நன்றாகவே இருக்கிறது. அப்படியானால், அதை எடுத்துக் கொள்ளுவோம். காந்தி அதைப் படியும். நான் நடுங்கிக்கொண்டே அதைப் படித்தேன். கோகலே அதை ஆமோதித்தார். ஏகமனதாக நிறைவேறியது என்று எல்லோரும் கூறினார்கள். காந்தி, இத் தீர்மானத்தின்மீது நீர் ஐந்து நிமிட நேரம் பேசலாம் என்றார், ஸ்ரீ வாச்சா. இந்த நடைமுறை எனக்குக் கொஞ்சம் திருப்தியளிக்கவே இல்லை. தீர்மானத்தைப் புரிந்துகொள்ள யாருமே கவலைப்படவில்லை. ஒவ்வொருவரும் போவதற்கு அவசரப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இத் தீர்மானத்தைக் கோகலே பார்த்து விட்டார் என்பதனால் மற்றவர்கள் அதைப் பார்க்க வேண்டியதோ, புரிந்துகொள்ள வேண்டியதோ அவசியம் என்று எண்ணவில்லை!

காங்கிரஸில் நான் செய்ய வேண்டிய பிரசங்கத்தைப் பற்றியோ காலையில் கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன். ஐந்து நிமிடங்களில் நான் எதைச் சொல்லுவது ? ஓரளவுக்கு நன்றாகவே நான் தயார் செய்து கொண்டிருந்தேன். ஆனால் சமயத்தில் சொற்கள் தான் நினைவிலிருந்தே பேசுவது என்று முடிவு செய்துகொண்டிருந்தேன். பேசுவதற்குத் தென்னாப்பிரிக்காவில் நான் பெற்றிருந்த ஆற்றல் அச்சமயம் என்னைவிட்டுப் போய்விட்டதென்றே தோன்றியது. என் தீர்மானம் வந்ததும் ஸ்ரீ வாச்சா, என் பெரைச் சொல்லி அழைத்தார். நான் எழுந்து நின்றேன். எனக்கு தலை சுற்றியது. எப்படியோ தீர்மானத்தைப் படித்து விட்டேன். வெளிநாடுகளுக்குப் போய் குடியேறுவதைப் புகழ்ந்து ஒருவர் கவி பாடி, அதை அச்சிட்டுப் பிரதிநிதிகளுக்கு விநியோகம் செய்திருந்தார். அப்பாட்டை வாசித்துவிட்டுத் தென்னாப்பிரிக்காவில் குடியேறி இருப்பவர்களின் குறைகளைப் பற்றிக் குறிப்பிட்டேன். அந்தச் சமயத்தில் ஸ்ரீ வாச்சா மணியை அடித்தார்.

நான் ஐந்து நிமிட நேரம் பேசிவிடவில்லை என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும் இன்னும் இரண்டு நிமிடங்களே பாக்கி இருக்கின்றன. அதற்குள் நான் பேச்சை முடித்துவிட வேண்டும் என்று என்னை எச்சரிக்கை செய்வதற்காகவே மணி அடிக்கப்பட்டது என்பது எனக்குத் தெரியாது. மற்றவர்கள் அரை மணி, முக்கால் மணி நேரம் பேசியும் மணியடிக்கப்பட்டதில்லை என்பதையும் அறிவேன். ஆகவே, நான் அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தேன். மணியடித்ததுமே உட்கார்ந்துவிட்டேன். ஆனால், ஸர் பிரோஸ்ஷாவுக்குச் சரியான பதில் அப்பாடலில் அடங்கியிருக்கிறது என்று குழந்தை போன்ற என் புத்தி எண்ணியது. தீர்மானம் நிறைவேறிவிட்டது என்பதைக் குறித்துச் சொல்லவேண்டியதில்லை. அந்த நாட்களில் காங்கிரஸ் மகாநாட்டிற்கு வேடிக்கை பார்க்க வருவோருக்கும் பிரதிநிதிகளுக்கும் அதிக வித்தியாசம் எதுவும் இல்லை ஒவ்வொருவரும் கையைத் தூக்குவார்கள். எல்லாத் தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேறும். என் தீர்;மான விஷயத்திலும் இதே தான் நடந்ததாகையால் அதன், முக்கியத்துவம் போய்விட்டதாகவே நான் கருதினேன். என்றாலும், காங்கிரஸில் அது நிறைவேறியது என்பது மாத்திரமே என் மனத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கப் போதமானதாக இருந்தது. காங்கிரஸ், முத்திரை வைத்துவிட்டதென்றால், அதை நாடு முழுவதும் அங்கீகரித்து விட்டது என்று ஆகுமாகையால் எவருக்கும் மகிழ்ச்சியளிக்க அதுவே போதும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum