தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நல்வழி அருளும் ரமணர் ‘‘நடப்பது நடக்காமல் இருக்காது..’’

Go down

நல்வழி அருளும் ரமணர் ‘‘நடப்பது நடக்காமல் இருக்காது..’’  Empty நல்வழி அருளும் ரமணர் ‘‘நடப்பது நடக்காமல் இருக்காது..’’

Post  amma Fri Jan 11, 2013 12:43 pm

பாரத நாடு புண்ணிய பூமி. இந்த பூமியில் காலம் காலமாக யோகிகள், முனிவர்கள்,
ரிஷிகள், மகாத்மாக்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். இதில் பல்வேறு
அவதார புருஷர்களும் அடக்கம். இந்த வகையில் தன் அவதார மகிமையை
வெளிக்காட்டாமல் மவுன மொழி மூலம் நம்மை ஆட்கொண்டவர் பகவான் ரமணர். அவரது
அவதாரம் நடந்ததுகூட ஒரு அற்புதம்தான். இந்த அதிசயம் சுமார் 133
ஆண்டுகளுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் திருச்சுழி என்ற ஊரில்
நிகழ்ந்தது. ஆருத்ரா தரிசன விழா முடிந்து சிவபெருமான் திருவீதி உலா
முடிந்து கோயில் திரும்புகிற நேரத்தில், மார்கழி புனர்பூச நட்சத்திரத்தில்
(1879-ம் ஆண்டு டிசம்பர் 30) ஞானப் பிழம்பான வேங்கடராமன் என்ற ஸ்ரீ
ரமணபகவான் அவதரித்தார்.

அவருக்கு பிரசவம் பார்த்த மூதாட்டிக்கு கண்
பார்வை கிடையாது. பகவான் அவதார புருஷர் என்பதை உலகுக்கு உணர்த்தும்
பொருட்டு அந்த மூதாட்டிக்கு 2 கண்களும் பிரகாசமாக தெரிந்ததாம்! தன் அவதார
நோக்கத்தை நிறைவேற்ற 1896-ல் வீட்டை விட்டு வெளியேறினார் ரமணர். ‘நான் என்
தகப்பனாரை தேடிக் கொண்டு, அவருடைய உத்தரவின்படி இவ்விடத்தை விட்டு
கிளம்பிவிட்டேன்’ என்று எழுதி வைத்துவிட்டு புறப்பட்டார். பல இடங்கள்,
ஊர்கள் என அலைந்து திரிந்து செப்டம்பர் 1-ம் தேதியன்று திருவண்ணாமலை
வந்தடைந்தார். அங்கு ஆயிரம்கால் மண்டபத்தின் உள்ளே பாதாள இருட்டு குகையில்
தவக்கோலத்தில் அமர்ந்து சமாதி நிலை அடைந்தார்.

இதை கேள்விப்பட்ட
பக்தர்கள் அவரை வெளிக் கொண்டு வந்து அவருக்கு பல வகையான உபசாரங்களை
செய்தனர். ஆனால் அவை எதையும் ஏற்றுக்கொள்ளாமல் மவுனமாக இருந்தார் ரமணர்.
அவரது மவுனத்தை கலைக்க பக்தர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப்
போயின. இதற்கிடையில், பிள்ளையை காணாமல் பல இடங்கள் தேடி அலைந்த அவரது
அன்னை அழகம்மாள் திருவண்ணாமலைக்கு வந்தார். தன்னுடன் ஊர் திரும்ப வேண்டும்
என்று மன்றாடினார். அதற்கும் மவுனத்தையே பதிலாக தந்தார் ரமணர்.
கூப்பிட்டும் மகன் வர மறுத்ததால் கதறினார் அந்த தாய். சுற்றியிருந்தவர்கள்
பதறினார்கள். ‘சுவாமி! மவுனத்தைக்கூட கலைக்க வேண்டாம்.

உங்கள்
பதிலை எழுதியாவது காட்டுங்கள்’ என்றனர். அதற்கு பகவான் தன் தாய்க்கு
சொல்வதாக இந்த உலகுக்கே மிகப்பெரிய உபதேசத்தை செய்தருளினார். அவர் எழுதிக்
காட்டியது இதைத்தான்: ‘அவரவரது பிராப்த பிரகாரம், அதற்கானவன்
ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான். என்றும் நடவாதது என்ன முயற்சிக்கினும்
நடவாது. நடப்பதை என்ன தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆதலின்
மவுனமாய் இருத்தல் நன்று’. நடப்பது நடந்தே தீரும் என்பதை பகவான் பலமுறை
உறுதியாய் மொழிந்துள்ளார். நிகழ்வுகள் யாவும் நிச்சயிக்கப்பட்டவையே என்பதை
பல வகையில் உணர்த்தியுள்ளார்.

பகவான் ரமணரின் உபதேச விளக்கம்

வாழ்க்கையின்
ஒவ்வொரு கணமும் சுகத்தை, இன்பத்தை, சந்தோஷத்தை, பொன், பொருளை, சொத்துகளை
தேடி நாம் முயன்றுகொண்டே இருக்கிறோம். ஆனால் பூரண சாஸ்வத இன்பமான மன அமைதி
தரும் சந்தோஷத்தை தேடுவதில்லை. நாடுவதில்லை. ஆணவம், அகங்காரம், போட்டி,
பொறாமை போன்றவற்றால் பீடிக்கப்பட்டு துன்பம் அடைகிறோம். நாம் எவற்றால்
துன்பம் அடைகிறோம்? வேண்டியது கிடைக்காவிட்டால், நினைத்தது நடக்காவிட்டால்
துன்பம் அடைகிறோம். வேண்டியது நமக்கு கிடைக்காமல் வேறொருவனுக்கு
கிடைக்கும்போது இன்னும் அதிக மன உளைச்சல், துன்பம் அடைகிறோம்.

இப்படி
எல்லாவற்றிலும் அடுத்தவருடன் ஒப்பிட்டுப் பார்ப்பதால் நமக்கு ஏற்படும் மன
உளைச்சல் பொருமலாக ஆரம்பித்து, பொறாமையாக உருவெடுத்து,
குரோதமாக
வெடிக்கிறது. விளைவு உடல்நலம் பாதிப்பு. மனநலம் பாதிப்பு. இதனால் ஏற்படுவது
நாசம் மட்டுமே. ஒப்பிட்டுப் பார்த்தல் என்பது எல்லோருடனும் நிகழ்வதில்லை.
நமக்கு மிகவும் தெரிந்தவர்கள், அருகில் இருப்பவர்கள், குடும்ப நண்பர்கள்,
உற்றார் உறவினர், ரத்த சொந்தங்கள் என நாம் அறிந்தவர்களோடு மட்டுமே இந்த
ஒப்பிட்டு பார்த்தல் நிகழ்கிறது. ‘நான்’ எனும் ஆணவ அகங்கார மமதையே இதற்கு
முக்கிய காரணம். அது மட்டுமின்றி, விடை தெரியாத சில கேள்விகளும் காரணமாக
இருக்கிறது.

மனதை குழப்பும் கேள்விகள்

*
தவறே செய்யாதவன் தண்டிக்கப்படுகிறான். தவறு செய்தவன் தண்டனையில் இருந்து
தப்பிவிடுகிறான். தர்ம நியாயப்படி நடப்பவன் பல துன்பங்களுக்கு ஆளாகிறான்.
பாவம் செய்பவர்கள் சுகமாக இருக்கின்றனர். எந்த தீய பழக்கமும் இல்லாதவன்
கொடிய நோய் தாக்கி மரணமடைகிறான். எல்லா தீய பழக்கங்கள் உள்ள ஒருவன்
நிம்மதியாக சாகிறான். இது ஏன்?

* பணம் இருந்தும் அமைதி இல்லை. பணம்
இல்லாதவன் நிம்மதியாக இருக்கிறான். பணக்காரன் சாப்பிட முடிவதில்லை. ஏழைக்கு
சாப்பாடு இல்லை. ஒருவனுக்கு சொத்து ஏராளம். மற்றொருவன் ஒதுங்கக்கூட
இடமில்லை. குழந்தை இல்லையே என ஏங்குவோர் ஒருபுறம். இந்தக் குழந்தைகள் ஏன்
பிறந்தன என வாடுவோர் மறுபுறம். ஏன் இந்த வித்தியாசம்?

* இறைவனை
தரிசிக்க செல்பவர்களும் சுப விசேஷங்களுக்கு செல்கிறவர்களும்
விபத்துக்குள்ளாகி மரணமடைகின்றனர். இது ஏன்? இத்தனை விஷயங்களுக்கும் நம்
வினைப்பயனே காரணம். சுக துக்கங்கள் பூர்வ கர்மங்களின் விளைவுகளேயன்றி.
இப்போது செய்யும் செயல்களால் அல்ல. கடந்துபோன பல்வேறு பிறவிகளின்
பயன்களாலேயே ஒருவனுக்கு எல்லாம் கிடைக்கிறது. அதேபோல பற்பல பிறவிகளில்
செய்த பாவ கர்மங்களால் ஊழ்வினை காரணமாக துன்பப்படுகிறான். ஆகையால்,
‘அவனுக்கு இது கிடைக்கிறதே..

இவனுக்கு அது கிடைக்கிறதே’ என்று
எண்ணி பொறாமை, பொருமல் அடையாமல் ‘நம் பிராப்தம் இதுதான்’ என்று நினைத்து
பக்தி மார்க்கத்தில் மனதை திருப்புவதே சிறந்த உபாயம். ஆணவம், அகங்காரம்,
‘நான் செய்தேன்’ என்ற ஆணவ பேச்சு ஆகியவற்றை விட்டுவிட்டு, ‘என் செயல் ஆவது
ஏதுமில்லை’ என்று பகவானை சரணாகதி அடைந்தால் நம் வாழ்வில் நல்ல மாற்றங்கள்
உறுதி என்கிறார் பகவான் ரமணர். அவர் காட்டிய வழியில் பக்தி செலுத்தி,
மனப்பக்குவம் அடைந்து நல்வாழ்வு பெறுவோம்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum