தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பெரியோரை மதிப்போம்

Go down

பெரியோரை மதிப்போம் Empty பெரியோரை மதிப்போம்

Post  amma Tue Jan 15, 2013 7:12 pm

பெரியவர்களை, "தாத்தா' "ஐயா' என்று மரியாதையுடன் அழைத்த காலமெல்லாம் போய், "யோவ் பெரிசு' "அட கிழவா' என்று அழைக்கிற காலம் வந்திருக் கிறது. பெற்றவர்களைக் கூட பாரமாக நினைத்து, அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்க்கின்றனர் பிள்ளைகள். பெரியவர்களுக்கு மரியாதை தர தவறினால், நிலைமை என்னாகும் தெரியுமா? புரட்டாசி சனியன்று, பெருமாள் கோவிலுக்கு போகிறவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது.

இந்திரத்துய்மன் என்ற மன்னன் அகத்தியரை தன் குருவாகக் கொண்டவன். பெருமாள் பக்தன். ஒருமுறை, அகத்தியர் அவனது அவைக்கு வந்தார். அப்போது மன்னன் கேளிக்கை விளையாட்டுகளில் மூழ்கியிருந்தான். குரு வந்திருப்பதாக அவனுக்குத் தெரிந்தும், விளையாட்டு மும்முரத்தில் அவருக்கு மரியாதை செலுத்த செல்லவில்லை. இதுகண்டு குமுறிய அகத்தியர், தன்னை மதிக்காத மன்னனை, யானையாக மாற சாபம் விடுத்தார். மன்னன் மன்னிப்பு கேட்டபோது, வனத்தில் பல காலம் சுற்றித் திரிந்து, பெருமாளின் அருளால் மோட்சம் பெறுவாய் என சபித்தார். இந்திரத் துய்மனும் யானையானான். அதற்கு, கஜேந்திரன் எனப் பெயர்.

இதேபோல, கபில முனிவர் ஒருமுறை, ஆற்றில் நீராடச் சென்றார். கந்தர்வன் ஒருவனும் நீராடி கொண்டிருந்தான். அவன், தண்ணீருக்குள் மூழ்கிச் சென்று, முனிவரின் காலைப் பிடித்து இழுத்து சில்மிஷம் செய்தான். கோபம் கொண்ட முனிவர், "தண்ணீரில் மறைவாக வந்து காலைப் பிடித்து இழுத்த நீ, முதலையாக பிறப்பாய்....' என சாபமிட்டார். அவனும் சாப விமோசனம் கேட்ட போது, "பிற்காலத்தில் விஷ்ணுவின் கரத்தால் மோட்சம் பெறுவாய்' என்றார். அந்த முதலை, "கூஹு' என்ற பெயருடன் ஆற்றில் கிடந்தது.

ஒரு சமயம், கஜேந்திர யானை, தன் கூட்டத்துடன் தண்ணீர் குடிக்க வந்தது. உள்ளே கிடந்த முதலை, அதன் காலைக் கவ்வியது. இரு விலங்குகளுக்கும் கடும் போராட்டம் நடந்தது. உடன் வந்த யானைகளோ, உதவி ஏதும் செய்யாமல், உயிருக்குப் பயந்து கரையேறி விட்டன. பெரியவர்களுக்கு மரியாதை தராதவர்களுக்கு மறுபிறப்பில், உறவுகளின் ஒத்துழைப்பு கிடைக்காது என்பது இதன் மூலம் உணர்த்தப்படும் தத்துவம்.

இந்நேரத்தில், கஜேந்திர யானைக்கு சாப விமோசன நேரம் வந்தது. தன் உயிர் போகும் நேரத்திற்குள் பெருமாளை வணங்க எண்ணி, ஆற்றில் இருந்த தாமரை மலரைப் பறித்தது; "ஆதிமூலமே' எனக் கதறியது.
இந்த சப்தம், வைகுண்டத்தில் லட்சுமியுடன் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்த பெருமாளின் காதில் கேட்டது. இருவரில் யார் தோற்றாலும் எழுந்து ஓடிவிடக் கூடாது என்பதற்காக, பெருமாளின் வஸ்திரமும், தாயாரின் புடவையும் இணைத்துக் கட்டப்பட்டிருந்தது. அதைக் கூட பொருட்படுத்தாமல் பெருமாள் வேகமாக எழுந்தார். கருடன் விரைந்து வந்தார். கருடன் மீதேறி, தாயாரும், பெருமாளும் ஆற்றிற்கு வந்தனர். சக்கரத்தை வீசி முதலையை அழித்தார் பெருமாள். சக்கரத்தின் மகிமையால் முதலை மோட்சம் அடைந்தது. கஜேந்திரன் விடுபட்டது.

யானையைப் பிடித்ததாவது ஒரே ஒரு முதலை தான்! ஆனால், மனிதர்களாகிய நம்மை, கண், காது, மூக்கு, வாய், உடல் எனும் ஐந்து முதலைகள் பிடித்துக் கொண்டிருக்கின்றன. பணம், வீடு, வாசல், பெண் போன்ற பல சுகங்கள் வேண்டுமென இந்த முதலைகள், இளைஞர்களை பாவச் சேற்றில் தள்ளி விடுகின்றன. இதன் விளைவு, பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மறைந்து விட்டது.
பெருமாள் சீனிவாசனாக பூமிக்கு வந்தது புரட்டாசி மாதம், திருவோண நட்சத்திரம், சனிக்கிழமை என்று சொல்வது மரபு. இதனால் புரட்டாசி சனி அன்று, நாம் பெருமாளை வணங்குகிறோம். அன்று, கோவிலுக்கு போனால் மட்டும், அவரது அருள் கிடைத்து விடாது. நம் வீட்டுப் பெரியவர்களையும் பெருமாளாக எண்ணி, அவர்களுக்கு மரியாதை தர வேண்டும். "பெருமாள்' என்ற சொல்லுக்கே, "பெரிய ஆள்' என்று தான் பொருள். இனியேனும், நம் இல்லங்களில் பொக்கை வாய்கள் சிரிக்கட்டும்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum