தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஓரினச்சேர்க்கை-ஆய்வு: க.அருள்மொழி

Go down

ஓரினச்சேர்க்கை-ஆய்வு: க.அருள்மொழி Empty ஓரினச்சேர்க்கை-ஆய்வு: க.அருள்மொழி

Post  amma Fri Apr 05, 2013 12:24 pm

உலகிலுள்ள மனிதர்கள் எல்லோரும் ஓர்குலம் என்ற மனிதநேய முழக்கம் ஒருபக்கம், எல்லோரும் ஒரே இனமாக இருக்கமுடியாது என்ற கருத்தால் குண்டுவெடிக்கும் போர் முழக்கம் ஒருபுறம்.

மனித இனஇயல் (Anthropology) கொள்கையின்படியோ அல்லது மதம், நாடு, மொழி ஆகிய காரணங்களால் பிரிந்துள்ள எல்லோருமே ஒரே குரலில் கூறுவது என்னவென்றால், ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேரக்கூடாது! அதாவது, ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் உடல்புணர்ச்சி செய்யக்கூடாது என்பதுதான்.

மனித இனம் பல குழுக்களாகப் பிரிந்திருந்தாலும் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது என்பதில் கருத்து மாறுபாடு வரவில்லை. ஏனென்றால், இனப்பெருக்கம் நடைபெற ஆண் பெண் இணைவது அவசியமாகிறது. ஆண் பெண் புணர்ச்சியில் இன்பமடைவது மனிதஇனம் மட்டும்தான். மற்ற உயிரினங்களுக்கு அது ஒரு உந்துதல் மட்டும்தான் சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதுபோல்!

மனிதர்கள் தங்கள் இனத்தைப் பெருக்கவும், மற்ற உயிரினங்களைவிட ஆதிக்கமுள்ள இனமாக ஆக்கிக் கொள்ளவும் தினமும் உடலுறவுகொண்டு வேகமாகத் தன்இனத்தை மறுஉற்பத்தி செய்தார்கள். அதனால், தேவை மற்றும் பழக்கம் காரணமாக மனிதர்களின் அன்றாடத் தேவைகளில் பாலுறவும் ஒன்றாகிவிட்டது.

மனிதர்களின் சமுதாயத் தேவைகள் குறைவாக இருந்த காலத்தில், உணவு உடை, இருப்பிடம் மூன்றும் இருந்துவிட்டாலே (அதுவும் எளிமையான வசதிகள் கொண்டதாக இருந்தாலே) போதும் என்ற நிலையில் ஆணும் பெண்ணும் பருவ உணர்ச்சிகள் தோன்றிய உடனே திருமணம் செய்து கொண்டார்கள். அல்லது செய்து வைக்கப்பட்டார்கள். அப்போது அந்தத்தேவையும் உடனடியாக நிறைவேற்றப்பட்டுவிட்டது.

இதுபோன்று இளம்வயதிலேயே உடலுறவு கொண்டதால் பெண்கள் கருவுற்று, பேறு-காலத்தில் மரணமடைவது பெரிய அளவில் இருந்தது. மருத்துவ அறிவியல் வளர்ந்துள்ள இக்காலத்திலேயே இளவயதுக் கருவுருதல் பாதுகாப்பற்றது எனும்போது, ஆதிகாலப் பெண்களின் நிலை எப்படி இருந்திருக்கும்? இந்தியச் சமுதாயத்தில் இளவயதுத் திருமணத்தைத் (பால்ய விவாகம்) தடைசெய்வதற்கு மேலும் ஒரு காரணம் உண்டு. அதுதான் குழந்தைகளுக்கும் விதவைக்கோலம் என்ற அலங்கோலம்.

பெண்கள் பூப்படையும் காலம் சராசரியாக பன்னிரெண்டு முதல் பதினான்கு வயதுவரை (இடம், இனம், சூழல்மாறுபாடுகளுக்கு உட்பட்டது). ஆண்கள் பாலுணர்வுத் தூண்டுதலை உணரும் வயது சராசரியாக பதினைந்தாகும்.

இந்த வயதிலிருந்து ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் கவர்ச்சிப் பொருளாகத் தெரிவார்கள். இதனால், பாலுணர்வு தூண்டப்பட்டு உடலுறவுக்குத் தயாராகிறார்கள். ஆனால், இந்த வயதில் உடல்தகுதி மட்டுமல்லாமல் கல்வி, பணம், அந்தஸ்து ஆகியவை போதிய அளவுக்குப் பெறமுடியாததால் அவர்களுக்குத் திருமணம் செய்து பாலுணர்வுத் தேவையைத் தீர்த்துக்கொள்ள வழி ஏற்படுத்த முடிவதில்லை.

இந்தக் காலகட்டத்தில் எதிர்பாலினரின் துணை கிடைக்காததால் பாலுணர்ச்சியைத் தணிக்கும் வழியில்லாமல் திண்டாடுவார்கள். இதற்கு, பாலுறுப்புகளின் வேலையில்லாத் திண்டாட்டம் (Sexual organs unemployment) என்று பெயர்.
சுய இன்பம்
பெண் துணையில்லாமல் ஆணும், ஆண் துணையில்லாமல் பெண்ணும் தனக்குத்தானே பாலுணர்ச்சியைத் தணித்துக்கொள்ளும் முறைதான் தன் இன்பம் (சுயஇன்பம், மைதூனம்) எனப்படுவது. பொதுவாக எல்லா ஆணும் பெண்ணும் துணை கிடைக்காத நிலையில் மேற்கொள்ளும் முறை இதுதான். இந்த முறை எல்லா வகையிலும் பாதுகாப்பானது என்பதால், மருத்துவர்களும் இதைத் தவறில்லை என்கிறார்கள். ஆனாலும், மக்கள் இதைப்பற்றி வெளிப்படையாகப் பேசுவதில் தயக்கம் காட்டுகிறார்கள்.

ஓரினச்சேர்க்கை

சுயஇன்பம் கொள்வதையே வெட்ககரமானது என்று நினைக்கும் சமூகம் ஓரினச் சேர்க்கையை ஏற்றுக்கொள்ளும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? சுயஇன்பத்தைப் போலவே எதிர்பாலினரின் துணைகிடைக்காத நிலையில்தான் பெரும்பாலான ஓரினச்சேர்க்கைகள் நடைபெறுகின்றன.

சமூகக் கட்டுப்பாடுகள் இறுக்கமாக உள்ள இடங்களிலும், கருவுரும் அபாயம் காரணமாகவும் ஆணுடன் உடலுறவைத் தவிர்க்கும் பெண்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள்.

இராணுவ வீரர்களில் சிலர் பெண்களுடன் தொடர்புகொள்ள முடியாத காரணத்தால் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள். இதேபோல் திருமணம் செய்து கொள்ளத் தடை செய்யப்பட்ட மத நிறுவனத் தலைவர்கள், ஊழியர்கள் சிலர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள்.

இதுதவிர விரும்பியே ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் உண்டு. வித்தியாசமான அனு-பவத்திற்காக இதில் ஈடுபடுகிறார்கள். ஓரினச் சேர்க்கையாளர்களில் மாற்றுப்பாலினருடன் இயல்பாக உடலுறவு கொள்பவர்களும் உண்டு, முற்றிலும் தவிர்ப்பவர்களும் உண்டு.

இந்துமதமும் ஓரினச் சேர்க்கையும்
ஓரினச் சேர்க்கை விருப்பம்பற்றி இலக்கியங்களிலும், கலைகளிலும் மத்தியகால இந்துத்துவத்திலும், இந்திய இஸ்லாத்திலும் இருப்பதைப்பற்றி சலீம் கித்வாய் மற்றும் ரூத்வனிதா என்பவர்கள் Same Sex in India: Reading from Literature and History என்ற நூலில் எழுதியிருக்கிறார்கள்.

பழங்கால இந்துச் சட்டத்தில் முதல் நூற்றாண்டிலிருந்தே அயோனி (Non-Vaginal sex) அசுத்தமானது என்று கூறப்படுகிறது. ஆனால், விரதம் இருப்பவர்கள் முறையற்ற காமம் கொள்ளல், வன்கலவி செய்தல் போன்றவற்றைவிட ஓரினச்சேர்க்கை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை.

மாடுகள் பூட்டிய வண்டி முதலிய ஊர்திகளிலும், நீரிலும், பகலிலும் மனைவியுடன் சேர்ந்தால் கட்டிய உடையுடன் தலைமுழுக வேண்டும். ஆணுடன் ஆண் கட்டியணைத்து ஒழுக்கு ஏற்பட்டாலும் இதேபோல்தான்
_ மனுதர்ம சாஸ்திரம் 11.174
அர்த்த சாஸ்திரமும் சிறிய தண்டத் தொகையை மட்டுமே புறவழி உறவு (ayoni sex) கொண்டதற்குத் தண்டனையாகச் சொல்கிறது.

புனித நூல்களாகக் கருதப்படும் இதிகாசங்-களும், புராணங்களும் பல கடவுள்கள், தேவதைகள், கதாநாயகர்கள் புறவழி உறவு மூலமாகப் பிறந்ததாகக் கூறுகின்றன. மாறாக, ஓரின உறவுக்காக யாரும் தண்டிக்கப்பட்டதாகக் கூறவில்லை.

அய்யப்பன் என்கின்ற கடவுள் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளை என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.

பதினான்காம் நூற்றாண்டின் சமஸ்கிருத, பெங்காலி இலக்கியங்கள் (இன்றளவும் மிகப்பிரபலமான கீர்த்திவாச ராமாயணம் உட்பட) பாகிரத மன்னன் (கங்கை நதியைச் சொர்க்கத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வந்தவன்) இரண்டு விதவைப்பெண்களுக்குப் பிறந்ததாகக் கூறுகிறது. பாகிரதன் என்ற பெயரே இரண்டு பெண்ணுறுப்புகளுக்குப் பிறந்தவன் என்ற பொருளைத் தருகிறது. (Bhaga – Vulva) இந்து மருத்துவ நூல்களும் முதல் நூற்றாண்டிலிருந்தே பால், பால்வேறுபாடு, ஓரினச்சேர்க்கை விருப்பம் ஆகிய அறிவியல் ரீதியான பாகுபாடுகளை விளக்குகின்றன.

காமசூத்ரா நூலும் ஓரினச்சேர்க்கையை மூன்றாம் இயற்கை என்று வருணிக்கிறது.

கணிதமேதை சகுந்தலா தேவி எழுதிய ‘The world of Homosexuals’ (1977) நூலில், திருவரங்கம் கோயில் தலைமை அர்ச்சகர் சீனிவாச ராகவாச்சாரியார் அளித்த பேட்டியில், ஓரினக் காதலர்கள் முன்ஜென்மத்தில் மாற்றினக் காதலர்களாகத் தான் இருந்திருப்பார்கள். இப்பிறவியில் பால் மாறியிருந்தாலும், அவர்களுடைய ஆன்மாவின் ஈர்ப்பு அப்படியே இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

திருமணம் என்பது ஆன்மாவின் கலப்பு, இதில் ஆண் பெண் வேறுபாடு இல்லை. இரண்டு பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்த சைவ அர்ச்சகரின் கருத்து இது.

ஓரினச் சேர்க்கைப்பற்றிய அறிவியல் விளக்கங்கள்:

ஓரினச் சேர்க்கையைத் தூண்டுவது, அந்தப் பழக்கமுள்ளவர்களின் தூண்டுதல் (சிகரெட், மதுப் பழக்கங்களைத் தொடங்குவது போல்) மற்றும் பரம்பரைக் காரணம் இரண்டுமே

- P. Santtila et. al. Dept of Psychology, Abo Akkademi University.
பரம்பரைக் கூறு ஆய்வுகள் உறுதி செய்வது, ஆண் பெண் உறவைத் தீர்மானிப்பது பரம்பரைக் காரணிகள்தான்.

- Q. Rahman, School of Psychology, University of East London.
ஜீன்கள்தான் பாலுறவு கொள்ளும் விருப்பத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.

- B.S. Mustanski, et.al. Dept of Psychology. Indiana University.
பரம்பரைக் கூறுகள்தான் மனிதப் பாலுறவு நாட்டத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

- Pillard & Bailey, Dept of Psychology, Boston University. School of Medicine
பரம்பரைக் கூறுகளின் தாக்கத்தை, சட்டத்தாலோ, சமூகத்தின் கண்டனத்தாலோ மாற்றுவது என்பது இயலுமா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

ஆண், பெண் உடலுறவு கொள்வதால் தான் மனித இனம் நிலைத்து வாழமுடிகிறது என்பது உண்மைதான். அதே சமயம் இனப்பெருக்-கத்திற்காக உடலுறவு கொள்ளுதல் மட்டுமே ஒவ்வொரு ஆண் பெண்ணின் முடிவான செயலல்லவே! அப்படிப் பார்த்தால் குழந்தைப்பேறு தேவையில்லை எனும்போது உடலுறவு கொள்ளவே கூடாதல்லவா? குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதே மகப்பேறுபற்றிய கவலையில்லாமல் உடலுறவு கொள்வதற்காகத்தானே!

ஆண், ஆண், பெண், பெண் உறவில் மறுஉற்பத்தி ஏற்படாது என்பது உண்மைதான். ஆனால், புதியமுறை அன்பு பிறக்கிறது என்பது உண்மை.
ஆண்களால் நோகடிக்கப்பட்ட பெண்களும், பெண்களால் வெறுத்தொதுக்கப்பட்ட ஆண்களும்-கூட ஓரின உறவில் ஈடுபடுகிறார்கள். ஹார்மோன்கள் செய்யும் கோளாறுகள் ஓரினச் சேர்க்கைக்கு முதல் காரணமாக அமைகின்றன.

இரண்டாவதாக, அதிகமாகப் பெண்களுடனேயே பழகி வாழவேண்டிய சூழ்நிலையிலுள்ள ஆண், பெண்தன்மை அடைவதால் ஆணின் மீது கவர்ச்சி கொள்கிறான்.

தன்பாலினருடனே (Same Sex) வாழும் சூழல் அதிகமாகும்போதும் ஓரின உறவு கொள்வதற்கான மூன்றாம் காரணம் உண்டாகிறது.

மனிதர்கள் வெவ்வேறு நிறத்தில் பிறக்கிறார்-கள். சிவப்பு, வெள்ளை, கறுப்பு, மஞ்சள் நிற மனிதர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை, ஆசை, விருப்பம், வெறுப்பு என மாறுபட்ட குணங்கள் உண்டு. என்றாலும், ஒருவரை ஒருவர் வெறுக்கக் கூடாது என்று சொல்கிறோம். ஆனால், ஒரே நிறத்திலிருக்கும் ஒரே இனத்திலிருக்கும் (race) ஓரின உறவுப் பழக்கமுள்ளவர்களை வேறு இனமாக வெறுப்புடன் பார்க்க வேண்டிய அவசியம் என்ன?

சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு அசைவ உணவு பிடிப்பதில்லை. ஆனால், அசைவ உணவுக்காரர்களுடன் பொருந்தி வாழ்கிறோமே!

அசைவ உணவு சாப்பிடுபவர்கள்கூட பாம்பு, பல்லி போன்றவற்றைச் சாப்பிடுபவர்களைப் பார்த்து முகம் சுழிக்கிறோம்தான். ஆனால், வெறுத்து ஒதுக்குவதில்லையே!

பிரம்மச்சரியம் கடைப்பிடிப்பவர்களுக்கு ஆண், பெண் உறவும் வெறுப்பு! ஆனால், சாதாரணமாக சமூகத்தில் பழகி வாழ்வதில்லையா?

ஆண் , பெண் விரும்பி திருமண உறவு கொள்வதைப்பற்றி எந்தக் கேள்வியும் கேட்காதது போலவே ஓரின உறவில் ஈடுபடுபவர்களையும் எந்த விமர்சனத்திற்கும் உள்ளாக்க வேண்டியதில்லை.

நம்முடைய படுக்கை அறையை யாரும் எட்டிப்பார்த்துவிடக் கூடாது என்று நினைக்கும் நாம், அடுத்தவர்களின் படுக்கையறைக் கதவில் சாவி துவாரத்தைத் தேடுவது ஏன்? ஆண் பெண் சேர்ந்து வாழ்வதற்கே திருமணம் என்ற சடங்கு தேவையில்லை எனும்போது, ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் எந்தச் சடங்கும் தேவைப்படாது.

சட்டப்படி தகுதியுடைய வயதிலுள்ளவர்கள் ஆண் பெண் யாராகினும் அவர்களுடைய விருப்பப்படி எதிர்பாலினருடனோ, ஒரே பாலினருடனோ கூட்டாளியின் விருப்பத்துடன் உறவு கொள்வதும் இணைந்து வாழ்வதும் சட்டப்படி மட்டுமல்லாமல் சமுதாய விதிகளின்படியும் மனிதர்கள் திறந்த மனத்துடனும் ஏற்றுக் கொள்வதில் என்ன தவறு இருக்கமுடியும் என்கிறார்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள்.

ஓரின உறவை விரும்புபவர்கள் மிகமிகச் சிலரே. அதனால், மனித இனப்பெருக்கத்திற்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடாது.

பூக்களில் அயல் மகரந்தச் சேர்க்கை செய்பவையும் உண்டு. தன்மகரந்தச் சேர்க்கை செய்பவையும் உண்டு. எல்லாமே பூக்கள்தானே.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum