தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாவங்களை போக்கும் பிரதோஷ வழிபாடு

Go down

பாவங்களை போக்கும் பிரதோஷ வழிபாடு Empty பாவங்களை போக்கும் பிரதோஷ வழிபாடு

Post  meenu Fri Jan 18, 2013 2:20 pm

பிரதோச வழிபாடு சிவ வழிபாட்டிற்குரிய மிகச் சிறப்பான மிக முக்கியமான வழிபாடாகும். தோசம் என்ற வடமொழிச் சொல்லிற்கு குற்றம் என்று பொருள். பிரதோசம் என்றால் குற்றமற்றது என்று பொருள். குற்றமற்ற இந்தப் பொழுதில் ஈசனை வழிபட்டால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். பிரதோச காலமென்பது மாலை 4 மணி முதல் 6 மணி வரையான காலமாகும்.

திங்கட்கிழமை பிரதோசம் சோமா வாரப் பிரதோசம் என்றும் சனிக்கிழமை பிரதோசம் சனிப்பிரதோசம் என்றும் அழைக்கப்படும் என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையை சேர்ந்த விஜய்சுவாமிஜி. அவர் மேலும் கூறியதாவது:-

பிரதோச காலம் தோன்றிய கதை என்ன என்பதை பார்ப்போம். அமிர்தத்தைப் பெறவேண்டி திருபாற்கடலை தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து கடைந்த போது ஆல கால விஷம் அதிலிருந்து வெளிப்பட்டது. பாற்கடலை கடையத் தொடங்கியது தசமித் திதியாகும். ஆலகால விஷம் வெளிப்பட்ட நாள் ஏகாதசி திதியாகும்.

ஆலகால விஷத்தின் கடுமை தாங்க முடியாமல் தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் முறையிட்டு வேண்ட சிவனும் அந்த விஷத்தை அப்படியே எடுத்து உண்டார். விஷம் முழுமையாக இறைவனின் வயிற்றில் இறங்கினால் எங்கே இறைவனிற்கு ஏதாவது தீங்கு நேர்ந்து விடுமோ என அஞ்சிய அன்னை பார்வதிதேவி இறைவனின் கண்டத்தை அழுத்த விஷமானது கழுத்திலேயே தங்கி விட்டது.

அன்று முதல் இறைவனும் திருநீலகண்டர் என்று ஒரு திருநாமமும் பெற்று அழைக்கப்படலானார். அதன் பின்பு சிவனின் கட்டளைப்படி தொடர்ந்து திருப்பாற்கடலை கடைந்த போது துவாதசி அன்று அமிர்தம் தோன்றியது. அமிர்தத்தை உண்ட தேவர்கள் அந்த சந்தோசத்தில் இறைவனை மறந்து இறைவனை வழிபடாமல் ஆடிப்பாடி மகிழ்ந்திருந்தனர்.

மறுநாள் திரயோதசி அன்று தங்கள் தவறினை உணர்ந்து சிவபெருமானிடம் தங்களை மன்னிக்கும்படி மன முருகி வேண்டினார்கள். பரம கருணா மூர்த்தியான சிவ பெருமானும் மனம் இரங்கி, மனம் மகிழ்ந்து தம்முன் இருந்த ரிசபதேவரின் கொம்புகளிற்கிடையில் நின்று அன்னை பார்வதி தேவி காண திருநடனம் புரிந்தார். இது பிரதோச வேளையாகும்.

அன்று முதல் திரயோதசி திதியன்று மாலை 4-6 மணி பிரதோச காலம் என வழங்கலாயிற்று. அமாவாசையிலிருந்து 13-ம் நாளும், பவுர்ணமியில் இருந்து 13-ம் நாளும் திரயோதசி திதியாகும். மாதத்தில் இரண்டு பிரதோசமாகும்.

10 வகை பிரதோசம்:

1. நித்திய பிரதோசம்:

தினமும் 4 மணி முதல் 6 மணி வரையிலான நேரம்.

2. நட்சத்திர பிரதோசம்:

திரயோதசி திதி எந்த நட்சத்திரத்தில் எந்த நட்சத்திரம் வருகிறதோ அந்த நட்சத்திர உருவமாக சிவனை வழிபடுவது.

3. பட்சபிரதோசம்:

சுக்ல பட்ச அதாவது வளர்பிறையில் வரும் திரயோதசி திதியில் பட்சலிங்க வழிபாடு செய்வது.

4. மாதப் பிரதோசம்:

கிருஷ்ணபட்ச அதாவது தேய்பிறையில் வரும் திரயோதசி திதியில் சந்திர கலையில் நின்று சிவனை வழிபடுவது.

5. பூர்ண பிரதோசம்:

திரயோதசி திதியும் சதுர்த்தி திதியும் பின்னப்படாமல் இருக்கும் போது சிவனை வழிபாடு செய்வது, சுயம்பு லிங்க வழிபாடு சிறப்பான பலனை தரும்.

6. திவ்யபிரதோசம்:

துவாதசியும், திரயோதசியும் அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் ஆக இரட்டை திதிகள் சேர்ந்து வருவது. மரகத லிங்க வழிபாடு சிறப்பான பலனைத் தரும்.

7. அபய பிரதோசம்:

ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வரும் திரயோதசி திதியில் சப்தரிசி மண்டலத்தை வழிபடுவது.

8. தீபப் பிரதோசம்:

திரயோதசி திதியில் தீபத் தானங்கள் செய்து வழிபடுவது சிவாலயங்களில் தீப அலங்காரங்கள் செய்வது பட்சாட்சர தீப ஆராதனை முறைப்படி செய்து சிவனை வழிபடுவது.

9. சப்த பிரதோசம்:

திரயோதசி திதியில் ஒளன நடனங்கள் காட்டி சாகா கலையை விளங்குவது. இது யோகிகளிற்குரிய முறையாகும்.

10. மகா பிரதோசம்:

ஈசன் விஷமுண்டது கார்த்திகை மாதம் திரயோதசி திதி சனிக்கிழமை ஆகும். சனிக்கிழமை திர யோதசி திதி வரும் பிரதோச வழிபாடே மகா பிரதோச வழிபாடாகும்.

மகாசிவராத்திரி:

மாதந்தோறும் அமாவாசை நாளில் இருந்து வரும் 1வது திதியன்று சிவராத்திரி அல்லது பிரதோஷ நாட்களாக வழிபடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண பக்ஷ தினத்தை இந்த தினமாகக் கடைபிடிக்கிறோம். இந்நாளில் சிவன் கோவில்களுக்கு சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம், தீய சக்திகள் வேரோடு அகலுதல் போன்ற நன்மைகள் நமக்கு உண்டாகும்.

மாசி அல்லது மகா மாதத்தில் அமாவாசையில் இருந்து 1வது சதுர்த்தசியன்று வருவது மகா சிவராத்திரியாகும். இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், சுந்தர புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மகா சிவராத்திரி நாளில் விரதம் இருப்போருக்கு கிடைக்கும் மகத்துவங்கள் என்ன என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரக தோஷங்கள் நீங்கும்:

தேய்பிறை பிரதோசம் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் போது ராகு காலமும் பிரதோச வேளையும் கூடிவரும் 4.30-6 மணி வரையிலான காலத்தில் மேலே குறிப்பிட்ட வழிமுறையில் பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபித்தபடி சிவனை வழிபடுபவருக்கு முனிவர் சாபம், முன்னோர் சாபம், கிரக தோசங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஆன்றோர் வாக்கு.

13 பிரதோசங்கள் தொடர்ந்து முறைப்படி பிரதோச வழிபாடு செய்பவர்களுக்கு வாழ்வில் சகல நலமும், வளமும் கிடைக்கும். 108 பிரதோச பூஜை செய்து அவர்கள் செய்த சகல பாவங்களும் நீங்கி சிவனின் திருவடியில் வசிக்கும் பலன் கிட்டும். சகல பாவங்களையும் போக்கும் பிரதோச வழிபாட்டினைக் கடைபிடித்து வாழ்வில் சகல நலனும் பெறுவோம் என்கிறார் விஜய் சுவாமிஜி.

நந்திதேவர் வழிபட்ட பாதையும், திரிசூலமும்:

சகல நன்மைகளையும் தரும் பிரதோச வழிபாட்டின் பெருமையை முதலில் அறிமுகப்படுத்தியவர் சிவகணங்களின் முதல்வரும், அன்னை அப்பரின் வாகனமுமான நந்திதேவர் தான். தட்சனின் சாபத்தினால் தேய்ந்து கொண்டிருந்த சந்திரன் சாப விமோசனத்திற்காக சிவனை வேண்ட சிவனும் சந்திரனிற்கு சாப விமோசனம் அருளினார்.

ஆனால் அந்த சாபம் சிவனை வந்தடைந்து சிவன் தேய ஆரம்பித்தார். இது கண்டு மனம் வருந்திய நந்தி தேவர் அன்னை சக்தியை சிவலிங்க பீடத்தில் அமரச் செய்து முறைப்படி பிரதோச பூஜை செய்தார். இதன் பலனாக சிவனும் சாபவிமோசனம் பெற்றார்.

நந்திதேவர் செய்த பூசையானது கொடி மரத்தையும், பலி பீடத்தையும் இடது புறமாக கடந்து நந்திக்கு முதற் பூசை செய்து பின் பிரதட்சணமாக தட்சிணாமூர்த்தி வரை சென்று பின் அப்பிரதட்சணமாக நந்திக்கு பின்புறமாக சண்டிகேசவர்வரை சென்று பின் மீண்டும் பிரதட்சணமாக நந்திதேவர் வரை வந்து நந்தி தேவருக்கு வலதுபுறம் நின்று கொம்புகளிற்கிடையில் பார்வையை மட்டும் செலுத்தி `ஓம்ஸ்ரீம்ஹரீம் ஐம்க்லீம் சௌம் நமோ பகவதே' என்ற சக்தித் தாயின் வசிய மந்திரத்தை ஜெபித்து பூஜை செய்தார். நந்தி தேவர் வழிபட்ட பாதையை கவனித்தோமானால் ஒரு திரிசூலம் அமையும்.

சிவலிங்க தத்துவம்:

கண்களால் காணக்கூடிய உருவம், காணமுடியாத அருவம் என்ற இரு நிலைகளுக்கும் இடைப்பட்ட அருவுருவத்தன்மையையே சிவலிங்கத் தோற்றம் உணர்த்துகிறது. பரம்பொருளானவர் ஜோதி வடிவில் நிர்குண நிராகாரமாகவும், சகுணமாய், ரூபத்துடனும் உள்ளார் என்பதையே சிவலிங்க வடிவம் உணர்த்துகிறது.

லிங்கம் என்பதற்கு அடையாளம் என்று பொருள் உண்டு. அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்வதாலும் லிங்கம் என்ற பெயர் ஏற்பட்டதாக அறியப்படுகிறது. பேரூழிக் காலத்தில் உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் சிவலிங்கத்திற் குள்ளேயே ஒடுங்குகின்றன. சிருஷ்டி தொடங்கும் போது சிவலிங்கத்தில் இருந்தே அனைத்தும் வெளிப்படுகின்றன.

தவிர பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள் என்பதையும் உருவம் உணர்த்துகிறது. லிங்க உருவில் பாகமாக ஆதாரமும் விஷ்ணு பாகமாக ஆவுடையாரும், ருத்ர பாகமாக பாணமும் விளங்குகின்றன.

இதன் மூலம் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மனிதகுல நம்பிக்கைக்குரிய மூன்று செயல்களையும் மேற்கொள்ளக்கூடிய கடவுள்களின் உருவமும் அடங்கியிருப்பதை உணர்கிறோம். இந்தப் பிரமாண்டமே லிங்க வடிவமாக உள்ளது ருத்ரம்.

சிவனடியார்கள், பக்தர்களின் விழிகளுக்கு பரமேஸ்வரனின் தோற்றம் பரபிரும்ம வடிவமாய், பிரம்மாண்டத்தின் அடையாளமாய், அனைத்தையும் ஒடுக்கிக் கொள்ளும் ஆதாரமாய், அன்பே வடிவான சிவமாய் தெரிகிறது. எனவே சிவலிங்க உருவத்தை பற்றி சொல்வோர் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். அவரவர் இயல்புக்குத் தக்கபடி அனுமானிக்கட்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum