தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நலம் தரும் நவ திருப்பதிகள்

Go down

நலம் தரும் நவ திருப்பதிகள் Empty நலம் தரும் நவ திருப்பதிகள்

Post  meenu Fri Jan 18, 2013 12:37 pm

ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயமும், ஸ்ரீராமானுஜரும், பன்னிரு ஆழ்வார்களும் மஹாவிஷ்ணு, பல்வேறு திரு நாமங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் மழை புரிகின்ற திருத்தலங்களில் பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட வைணவர்களின் 108 திவ்ய தேசம் முக்கியமான தாகும். இவற்றில் பாண்டிய நாட்டில் அமைத்துள்ள திவ்ய தேசங்களில், தாமிரபரணி நதியின் இருபுறமாக அமைந்துள்ள 9 திருத்தலங்களே நவதிருப்பதிகள் ஆகும்.

1.ஸ்ரீவைகுண்டம் (சூரியன்)

2.திருவரகுணமங்கை (நத்தம்) (சந்திரன்)

3.திருப்புளியங்குடி (புதன்)

4.துரைவில்லி மங்கலம் என்னும் இரட்டை திருப்பதி(ராகு,கேது)

5. பெருங்குளம் (சனி)

6.தென்திருப்பேரை (சுக்கிரன்)

7.திருக்கோளூர் (செவ்வாய்)

8.ஆழ்வார் திருநகரி (வியாழன்)

ஸ்ரீவைகுண்டம் (சூரியன்):

இத்தலம் திருநெல்வேலி, திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து 28 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் வடகரையில் உள்ளது.

தலவரலாறு:-

சத்ய லோகத்தில் ஒரு சமயம் பிரளயம் ஏற்பட்டு எங்கும் நீர் சூழ்ந்து கொண்டு இருந்த காலத்தில் சோமுகாசுரன் என்ற அசுரன் பிரம்ம தேவன் வைத்திருந்த படைப்பு தொழில் பற்றிய ரகசிய ஏடுகளை எடுத்து ஒளித்துக் வைத்து கொண்டான்.

தன் நிலை வருந்திய பிரம்மா, அதனை அவனிடமிருந்து மீட்கும் பொருட்டு விஷ்னுவை நோக்கி தவம் செய்ய எண்ணிதன் கையில் உள்ள பிரம்ம தண்டத்தை பெண்ணாக்கி தவம் செய்யும் இடத்தை அறிந்து வர சொல்ல, அதுவும் தாமிரபரணி ஆற்றங்கரையில் சோலைகள் நிறைந்த இடத்தை தேர்வுசெய்து கூற பிரம்மன் அங்கு வந்து கடுந்தவம் செய்தார்.

திருமால் நேரில் வந்து பிரம்மனை வாழ்த்தி இழந்த ரகசிய ஏடுகளை மீட்டுக் கொடுத்தார். திருமாலிடம் பிரம்மன் தனக்கு காட்சி தந்த கோலத்திலேயே அனைவருக்கும் காட்சி அளிக்கவேண்டும் என்று வேண்ட அவரும் சம்மதித்தார்.

மூல விக்ரகத்தை பிரம்மனே பிரதிஷ்டை செய்து தன் கமண்டலத்திலேயே நீர் எடுத்து திருமஞ்சனம் செய்து கலசத்தை நதிக்கரையில் பிரதிஷ்டை செய்ததால் இத்தல தீர்த்தம் கலசதீர்த்தம் எனப்படுகிறது. கால தூஷகன் என்ற திருடன் இப்பெருமாளை வழிபட்டு திருடச் செல்வான். திருடிய செல்வத்தில் பாதியை பெருமாளுக்கும் காணிக்கை தருவான்.

இவன் கூட்டத்தினர் அரண்மனையில் திருடுகையில் பிடிபட்டனர். அப்பொழுது வைகுண்ட நாதனிடம் சரண் அடைந்து தன்னை காக்குமாறு வேண்ட, பெருமாளே காலதூஷகன் வேடத்தில் வந்து மன்னனுக்கு தன் சுயரூபத்தை காட்டியருள மன்னன் பகவானை அடிபணிந்து தன்னிடம் கொள்ளையடித்து செல்வதன் காரணம் கேட்டான்.

தர்மம் காக்காத உன்னை தர்மத்தில் ஈடுபடச் செய்யவே நான் வந்தேன் என்று பகவான் கூறினார். அரசனும் தனக்கு கிடைத்த பெரும் பாக்கியம் மக்களுக்கும் கிடைக்க உற்சவ மூர்த்தியை "கள்ளபிரான்'' என்று கூறி வழிபடலானார்.

திருவரகுணமங்கை (நத்தம்) (சந்திரன்):

ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 3 கி.மீ. தூரம் கிழக்கே வந்தால் இத்தலத்தை அடையலாம். தேவபிரசன்னத்தில் கோவில் அருகிலேயே புஷ்கரணி இருப்பதை கண்டு புதைந்திருந்த புஷ்கரணியை தோண்டி சீர் செய்துள்ளனர்.

தலவரலாறு:-


முன்னொரு காலத்தில் ரேவா நதிக்கரையில் புண்ணிய கோஷம் என்ற அக்ரகாரத்தில் `வேதவி' என்பவர் தன் மாதா, பிதா, குரு மூவருக்குரிய கடமைகளை முடித்து திருமாலை நோக்கி "ஆஸனதை'' என்ற மந்திரத்தை ஜெபித்து தவமிருந்தார்.

அவரிடம் திருமால் கிழபிராமணர் வேடத்தில் வந்து ஆஸனதை எனும் மந்திரம் ஜெபிக்க வரகுண மங்கை தான் சிறந்தது என்று கூற அவர் இங்கு வந்து கடுந்தவம் செய்து திருமாலின் அருள் பெற்று பரமபதம் அடைந்தார். ஆஸ்னமந்திரம் ஜெபித்து இறைவன் காட்சியளித்த இடமானதால் `விஜயாசனர்' என்னும் திருநாமம் இறைவனுக்கு உண்டானது.

பிரம்மாவின் கர்வத்தை அழித்த ரோமச மகரிஷிக்கும் சத்யத்தால் கணவனை மீட்ட பஞ்ச கன்னிகைகளில் ஒருத்தியான சாவித்ரிக்கும் அதர்மத்தையும் அக்ரமத்தையும் சுட்டு பொசுக்கும் அக்னி தேவனுக்கும் காட்சியளித்த இடம்.

திருப்புளியங்குடி (புதன்):


திருவரகுண மங்கையிலிருந்து அதே சாலையில் கிழக்கே 1 கி.மீ. தூரத்தில் உள்ளது இத்திருத்தலம். இங்கு பெருமாளின் திரு உத்தியிலிருந்து பிரம்மா சேவை சாதிக்கிறார்.

தலவரலாறு:-

ஒரு சமயம் திருமால் லட்சுமி தேவியுடன் இந்நதிகரையில் தனித்திருந்த போது பூவுலக்கு வந்தும் தன்னை ஒதுக்குகின்றாரே என பூமாதேவி சினம் கொண்டு பாதாள லோகம் செல்ல பூமி இருண்டு வறண்டது.

தேவர்களெல்லாம் திருமாலை வழிப்பட அவரும் லட்சுமி தேவியுடன் பாதாள லோகம் சென்று பூமாதேவியை சமாதானம் செய்து இருவரும் சமமே என்று கூறி நட்புண்டாக்கி இருதேவிமார்களுடன் இத்தலத்தில் காட்சியளிக்கின்றார்.

இங்கே பெருமாள் ஆதிசேஷன் மீது 12 அடியில் பள்ளி கொண்டுள்ளார். சயனப்பெருமாளின் திருப்பாதத்தை மூலஸ்தானத்தை சுற்றி வரும்போது ஜன்னல் வழியே தரிசிக்கலாம். பெருமாள் நாபியில் இருந்து ஒரு தாமரைக்கொடி சுவரில் பிரம்மன் வீற்றிருக்கும் தாமரையுடன் சேர்கிறது.


பெருமாளின் திருமேனிக்கு எண்ணெய் காப்பு மட்டும்தான் லட்சுமியும், பூமிதேவியும் பெரிய உருவங்களாக பெருமாளின் திருப்பாதத்தின் அருகே வீற்றிருக்கின்றனர். இங்கு குழந்தை பேறுக்காக பக்தர்கள் பிரார்த்தனை செய்தால் பகவானின் அருளால் அது உடனே நிறைவேறுகிறது.

பெருங்குளம் (சனி):

திருப்புளியங்குடியில் இருந்து அதே சாலையில் கிழக்கே 5 கி.மீ.தூரத்தில் இத்தலம் உள்ளது. கருடன் ஏக ஆசனத்தில் உற்சவருடன் எழுந்தருளியுள்ளார். வாசத்தடம் என்ற திருக்குளம் தேவப் பிரசன்னம் மூலம் அறியப்பட்டு சீர் செய்யப்பட்டது. கோவிலின் தென்புறத்தில் கழுநீர் தொட்டியான் சன்னதியுள்ளது. திருமடப் பள்ளியிலிருந்து வரும் பிரசாத, கழிவு நீர் இவர் பாதம் வழியாக செல்கிறது.

தலவரலாறு:

பெருங்குளத்தில், வசித்து வந்த வேதசாரன் குமுதவல்லி தம்பதியினரின் தவப்புதல்வியான கமலாவதி மானிடர் யாரையும் மணக்க மாட்டேன். இந்த பெருமாளையே மணப்பேன் என்று கடும் தவம் மேற்கொண்டாள். பெருமாளும் அவர் முன்தோன்றி அவளின் ஆசைப்படி தன் பக்தையை மார்பில் ஏற்றுக் கொண்டார்.

இன்றும் இப் பெருமாளின் மார்பில் கமலாவதியை காணலாம். இதனால் தான் பெரும் பாக்கியம் அடைந்ததாக நினைத்த வேதசாரன் வேங்கடவனுக்கு, நித்ய ஆராதனைகள் செய்து வந்தார். அவரது மனைவி குமுதவல்லி நீராடச் செல்லும் போது அச்மசாரன் என்னும் அரக்கன் அவளை கவர்ந்து சென்று இமயத்தில் சிறை வைத்தான்.

இதை அறிந்த வேதசாரன் பெருமானிடம், அருள் புரிய வேண்ட, பெருமாளும் குமுதவல்லியை இமயத்திலிருந்து தனது கருட வாகனத்தில் மீட்டு வந்தார். அச்மசாரன் இங்கு வந்து பெருமாளுடன் போர்புரிய, பெருமாள் அவன் மீது நர்த்தனம் செய்து அவனை வதம் செய்தார்.

இதனால் பெருமாளுக்கு ஸோர நாட்டியன் தமிழில் மாயக் கூத்தன் என்ற திருநாமம் ஏற்பட்டது. தனக்கு உதவி புரிந்த கருடனுக்கும் உஸ்தவ மூர்த்தியுடன் ஏக ஆசனம் அளித்தார்.

திருத்தொலை வில்வி மங்கலம்(இரட்டை திருப்பதி):

பெருங்குளத்தில் இருந்து கிழக்கே கி.மீ. தொலைவில் உள்ள மங்கலக் குறிச்சி என்ற ஊர் வந்து வடகால் என்ற வாய்கால் கரை வழியாக, மேற்கு நோக்கிய பாதையில் 4 கி.மீ. வந்தால் இத் தலத்தை அடையலாம். காட்டுக் கோவில், வீடுகள் கிடையாது.

கோவிலில் அர்ச்சகர்கள் தங்குவதற்கும், பணியாட்களுக்கும், ஜிஸ் சார்பில் இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இரு கோவில்களும் அருகருகே அமைந்துள்ள இத் திருத்தலம் வடக்கு கோவில் எனப்படுகிறது. இத் திருத்தலங்களுக்கு மேற்கே ஒன்றரை கி.மீ. தூரத்தில் நம்மாழ்வார் அவதரித்த அப்பன் கோவில் எனும் திருத்தலம் உள்ளது.

தெற்கு கோவில் (ராகு) தல வரலாறு:

ஆத்ரேய சுப்ரபர் என்ற ரிஷியாகம் செய்வதற்காக இத் தலத்திற்கு வந்து யாகம் செய்யும் இடத்தை சுத்தம் செய்யும் பொழுது பூமியில் புதையுண்ட மிக ஒளிமயமான ஒரு வில்லும், தராசையும், கண்டார். அவைகளை கையில் எடுத்தவுடன் வில் ஆணாகவும், தராசு பெண்ணாகவும் மாறியது.

இருவரும் குபேர சாபத்தால் வில்லாகவும், தராசாகவும், மாறி இத்தல மண்ணில் புதையுண்டு கிடந்டோம் எனக்கூறி பரமபத முக்தி அடைந்தனர். எனவே இத் தலம் தொலைவில்லி மங்கலம் அழைக்கப்படுகின்றது. பக்தர்களின் தொல்லைகளை போக்கி மங்களங்களை உண்டாக்கும் பெருமாள்.

சுப்ரபர்:

யாகத்தை வெகு விமர்சையாக நடத்தி அதில் திரண்டு வந்த பலனை அவிர் பாகமாக தேவர்களுக்கும் கொடுத்தார். அவிர் பாகம் கிடைத்த மகிழ்ச்சியில் தேவர்களும் சுப்ரருடன் திருமாலை பிரார்த்தினை செய்ய திருமால் அங்கு காட்சியளித்தார்.

அதனால் மூலவர் "தேவர்பிரான்'' என அழைக்கப்படுகிறார்.
பூமிக்கு அதிபதியாகிய இந்திரனுக்கும், நீருக்கு அதிபதியான வருண னுக்கும், வாயு பகவானுக்கும் திருமால் காட்சியளித்த தலம். இத் திருத்தலத்தில் பெருமாள் மட்டும் தான். தாயார் சன்னதி இங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வடக்கு கோவில் (கேது):

தலவரலாறு:

தேவர் பிரான் சன்னதியில் யாகம் முடித்து சுப்ரபர் தினந்தோறும் வடக்குப் பக்கத்தில் இருந்த தடாகத்தில் இருந்து தாமரை மலர்களை கொண்டு வந்து தேவர் பிரானை வழிபட்டு வந்தார். தினமும் இத்தகைய அழகு தாமரை மலர்களை எங்கிருந்து எடுத்து வருகின்றார் என்று பார்க்க விரும்பிய பெருமாள் தன் சன்னதிக்கு வடக்கே நின்று பார்த்தார்.

மலர்களுடன் வந்த சுப்ரபர் பெருமாளை பார்த்துத் தன்னை கவனித்து கொண்டிருப்பதன் காரணம் கேட்ட பொழுது, உம்முடைய செந்தாமரை புஷ்ப பூஜைக்கு மயங்கியே இங்கே இருந்தோம். எனக்கும், தேவ பிரானோடு, அபிஷேகம், அர்ச்சனை செய்யுமாறு கூறினார்.

சுப்ரபர் பெருமாளின் வேண்டு கோளுக்கிணங்க பெருமாளை பிரதிஷ்டை செய்து இரு கோவில்களுக்கும் நாள் தோறும் பூஜை செய்து வந்தார். தனக்கு தாமரைப் பூவினால் அர்ச்சனை செய்பவர்க்கு சகல பாவங்களையும் நீக்கி அருள் தருவேன். என பெருமாள் அருள் பாவித்தார். அஸ்வினி தேவர்கள் தங்களுக்கு அவிர் பாகம் வேண்டியும், பூமியில் வைத்ய சாஸ்திரங்கள் பின்பற்றாததையும், பிரம்மாவிடம் முறையிட, பிரம்மா இத்தல பெருமாளை தாமரை மலர் கொண்டு வழிபடுமாறு அறிவுரை கூறினார்.

அஸ்வினி தேவர்கள் அவ்வாறே செய்ய பெருமாளும் கையில் தாமரை மலர் கொண்டு காட்சியளித்து அஸ்வினி தேவர்கள் குறை நீக்கினார். அஸ்வினி தேவர்கள் மருத்துவத்தின் தலைவர்கள், கங்கை கரையில் வாழ்ந்த விபீதகன் என்றவன் இத் தீர்த்தத்தில் நீராட அவனது குஷ்ட நோய் நீங்கியது.

அதனால் அவன் நெடுங்காலம் இங்கு தங்கி இரு பெருமாளுக்கும் தொண்டு செய்ததாக ஸ்தலவரலாறு கூறுகிறது. இத்தலத்தில் தான் பெருமாளோடு தாயாரையும் நம்மாழ்வார் மங்களாஸாசனம் செய்துள்ளார்.

தென்திருப்பேரை (சுக்ரன்):

தாமிபரணிக் கரையின் தென்கரையில் திருநெல்வேலியிலிருந்து 35 கி.மீ. தூரத்தில் இத் தலம் உள்ளது

தலவராறு:-

ஸ்ரீமத் நாராயணன் திருமகளை விடுத்து பூமா தேவியிடம் அதிக ஈடுபாடு கொண்டதாக நம்பிய திருமகள் துர்வாச முனிவரிடம் பூமாதேவியை போல் தான் அழகு இல்லாத காரணத்தால் ஸ்ரீமந் நாராயணனே தன்னை வெறுப்பதாகவும், அதனால் அவளை போன்றே தனக்கும் அழகும், திறமும் வேண்டும் எனக் கேட்டார்.

துர்வாசரும், பூமி தேவியை காண வந்த பொழுது பூமிதேவி திருமாலின் மடியில் அமர்ந்து துர்வாசரை மதியாமல் இருக்க கோபத்தில் துர்வாசர் பூமாதேவியை நீ லட்சுமியின் உருவத்தை பெறுவாய் என சாபமிட்டார்.

எனவே சாப விமோசனம் பெற பூமிதேவி இத்தலம் வந்து ஆற்றின் நீரை தன் இரு கைகளாளும் அள்ள எடுத்து "ஓம் நமோ நாராயணாய'' என்ற மந்திரத்தை ஜபம் செய்து நீரை அள்ளி எடுக்கும் போது இரண்டு கர குண்டலங்கள் (மீன் வடிவான காதில் அணியும் ஓர் அணிகலன்) கிடைக்க அப்பொழுது திருமால் காட்சியளிக்க, குண்டலங்களை பெருமாளுக்கே அளித்து மகிழ்ந்தார்.

தேவர்கள் பூமாரி பொழிய பெருமாளுக்கே அணிவித்து மகிழ்ந்தார். தேவர்கள் பூமாரி பொழிய பூமா தேவியின் மேனி அழகானது. லட்சுமியின் உடலுடன் பூமாதேவி தவமிருந்ததால் `நீ பேரை' (லட்சுமியின் உடலை பெற்றவர்) என்றானது. பெருமாள் இங்கு மகர குண்டலங்களுடன் காட்சியளிப்பதால் அவரை `மகர நெடுங்குழை காதன்'' என்று அழைக்கின்றனர்.

வருணன் அசுரர்களிடம் போரிட்டு தன் `பாசம்' என்ற ஆயுதத்தை இழந்து இத் தலம் வந்து தவம் செய்து, ஆயுதத்தை திரும்பப் பெற்றதால், இங்கு மழை வேண்டி செய்யப்படும் பிரார்த்தனைகள் பொய்ப்பது இல்லை. சுக்கிரனும் இங்கு வந்து தவமிருந்து பெருமாள் அருள் பெற்ற ஸ்தலம் இங்கு பங்குனி பிரம்மோஸ்த்சவத்தில் 5-ந் திருநாள் கருட சேவையில் பிரதான வாயிலிருந்து வெளி மண்டபத்திற்கு எளுகின்ற சமயத்தில் பெருமாளை சேவிக்கும் நாத்திகனும் ஆத்திகன் ஆவான்.

"கூடுபுலை துறையும் குழைக் காதன் திருமாலையும் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்'' என்பது இவ்வூரின் பழமொழியாகும்.

திருக்கோளூர் ( செவ்வாய்):

தென் திருப்பேரையிலிருந்து ஆழ்வார் திருநகரி வரும் வழியில் 3 கி.மீ. வந்து தெற்கே போகும் ஒரு கிளைப் பாதையில் 2.கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம். மதுர கவி ஆழ்வார் அவதாரதலம்.

தல வரலாறு:

குபேரன் ஒரு முறை சிவனை வழிபட கைலாயம் சென்றான். அங்கே உமையவள் சிவனுடன் இருக்க இவனது கண்கள் கெட்ட நோக்கத்தோடு உமையவளை பார்க்க இதனால் கோபம் கொண்ட பார்வதி குபேரனை சபித்தாள். அதனால் அவனிடம் இருந்த நவநிதிகளும் அகன்று உருவம் விகாரமானது நவநிதிகளும்.

தவமிருந்து இவ்வூர் பெருமானை அடைக்கலம் கொண்டதால் வைத்தமாநிதி பெருமாள் என்று அழைக்கப்படுகின்றார். குபேரன் தன் தவறை உணர்ந்து சிவனை வணங்க அவர் பார்வதியிடம் மன்னிப்பு கோருமாறு கூற, குபேரன் பார்வதி அடிபணிய அவள் இனி உனக்கு ஒரு கண் தெரியாது. உடல் விகாரம் மாறாது.

இழந்த நிதிகளை அவை தஞ்சம் அடைந்துள்ள வைத்த மாநிதி பெருமாளிடம் தவம் செய்து பெற்று கொள் என்று கூறினார். குபேரனும் இவ்வூர் பெருமாளை நோக்கி கருந்தவம் செய்து பாதிநிதியை பெற்றான். திரும்ப பெற்ற செல்வங்களை ஓரிடத்தில் நிலையாக இல்லாமல் ஒடிக் கொண்டே இருக்கும் தன்மையுடன் லட்சுமி தேவிக்கு கொடுத்தான்.

நிலையான செல்வம் இருக்கும் இடத்தில் அதர்மம் ஆட்சி புரியும் . தர்மம் இருக்காது. ஆகவே செல்வம் ஒருவரிடம் நிலையாக நில்லாமல் சுழன்று கொண்டே இருக்க வேண்டும். என்பது பெருமாள் கிருபை. தர்மம் நிரந்தர மாகவே இங்கேதங்கி பெரு மாளை வழிபட்டு வருகின்றதாம். இப்பெருமாள் மரக்கால் சயனத்தில் உள்ளார்.

இடது கையை உயர்த்தி இன்னும் வேறு எங்கு செல்வம் உள்ளது என தன்கையில் எனயிட்டு பார்க்கிறார். இப்பெருமாளை வேண்டி வழிபட்டால் இழந்த செல்வங்கள் திரும்ப கிடைக்கும் என்று பிரம்மாண்ட புராணம் கூறுகிறது.

ஆழ்வார் திருநகரி (வியாழன்):

ஆழ்வார் திருநகரி திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் உள்ளது. நம்மாழ்வார் அவதரித்த தலம் நம்மாழ்வாருக்கு தனி சன்னதி உள்ளது. இங்குள்ள புளியமரத்திற்கு உறங்காபுளி என்று பெயர். இதுவே இத்தலவிருட்சம். இம்மரத்தின் இலைகள் இரவில் மூடிக்கொள்வதில்லை.

தலவரலாறு:-

ஒரு சமயம் திருமாலிடம் பிரம்மாதான் தவமிருக்க இடம் கூறுமாறு வேண்ட திருமால் உன்னை படைப்பதற்கு முன்பே தாமிரபரணி நதிக்கரையில் யாம் எழுந்தருளியுள்ளோம் என்று கூறினார். ஆதியிலே தோன்றிய நாதன் என்பதால் `ஆதிநாதன்' `ஆதிபிரான்' என்று திருநாமம் கொண்டார்.

திருமாலே பிரம்மனுக்கு குருவாக காட்டியதால் இவ்வூர் குருகூர் எனப்படுகிறது. ஆற்றில் வந்த சங்கு இப்பொருமானை வழிபட்டு மோட்சம் பெற்றதால் (சங்கின் வேறு பெயர் குருகு) குருகு ஊர் குருகூர் என்றும் கொள்ளலாம்.

தாந்தன் என்பவர் கீழ் சாதியில் பிறந்து ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிய ஒருவருக்கு பெருமான் அவன் இருப்பிடம் சென்று தாயார்களுடன் காட்சி கொடுத்து அவனை தன்னோடு இணைத்துக் கொண்டார். இதனால் இவ்வூர் தாந்த ஷேத்ரம் எனப்படுகிறது.

இங்குள்ள புளிய மரம் லக்குமணன் எனப்படுகிறது. ஆதிசேஷனாக லக்குமணன் இருப்பதால் சேஷஷேத்திரம் எனவும் வராஹ அவதாரம் காண முனிவர்கள் தவமிருந்ததால் அவர்களுக்கு பிராட்டியுடன் `வராஹ நாராயணன்' காட்சியளித்ததால் வராஹ ஷேத்திரம் எனவும் நாய்க்கும் மோட்சம் அளித்த தீர்த்தகரை என்பதால் தீர்த்த க்ஷத்திரம் என்றும், `பஞ்ச மஹா க்ஷத்திரம்' எனவும் இவ்வூர் அழைக்கப்படுகின்றது.

இங்குள்ள ஆதிபிரான் சுயம்பு உருவம், கால்கள், பூமிக்கு இருப்பதாக ஐதீகம். நம்மாழ்வார் மூல வடிவம் தாமிரபரணி நீரை பாய்ச்சி அதில் மதுரகவி தன்னுடைய சக்திகளை பிரயோகித்து உருவாக்கிய சிற்பம். கைபடாத சிற்பம் என்று கூறப்படுகிறது. நம்மாழ்வார் குழந்தையாக தவழ்ந்த புளியமரத்தில் இன்றும் குழந்தையின் உருவம் உள்ளது.

ஆழ்வார் திருநகரியில் வைகாசி மாதம் நம்மாழ்வார் திருநட்சத்திரமான விசாகத்தை ஒட்டி ஆண்டு தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருநாளில் ஐந்தாம் திருநாளன்று நவதிருப்பதி பெருமாளும் ஆழ்வார் திருநகரி எழுந்தருளி நம்மாழ்வரால் மங்களாஸாசனம் செய்கின்றார்.

அன்று இரவு ஒன்பது பெருமாளும் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்னவாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் பறங்கி நாற்காலியிலும் எழுந்தருளி ஒன்று சேர்ந்து திருவீதி உலா செய்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது கண்கொள்ளா காட்சியாகும். இந்நாளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து இங்கு வந்து பெருமாளின் திருவருளை இன்றும் பெற்று செல்கின்றனர்.

போக்குவரத்து வசதி :

சென்னையிலிருந்து செல்பவர்கள் திருநெல்வேலி சென்று அங்கிருந்து, 35 கி.மீ. தொலைவில் உள்ள `ஸ்ரீவைகுண்டம்' என்ற ஊருக்கு பேரூந்திலோ, காரிலோ, சென்றடைந்து நவதிருப்பதிகளையும், காலை 9.00 மணி முதல் மதியத்திற்குள் தரிசனம் செய்து, ஊர் திரும்பலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum