தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தீராத பாவமும் தீர்ப்பார் திருக்காமீஸ்வரர்

Go down

 தீராத பாவமும் தீர்ப்பார் திருக்காமீஸ்வரர் Empty தீராத பாவமும் தீர்ப்பார் திருக்காமீஸ்வரர்

Post  ishwarya Sat Feb 16, 2013 4:52 pm

எந்த பிரம்மம் அகிலத்தையே ஆட்சி செய்கிறதோ அதுவே ஆங்காங்கே லிங்கத் திருமேனி கொண்டு ஆலயங்களில் எழுந்தருளியுள்ளார். இவரை வழி பட்டாலே போதுமானதாகும். அதுவே நம்மை அவன் பொன்னடிகளில் சேர்ப்பிக்கும்! அவ்வாறு மகேசன் உறையும் சிறப்புமிக்க பகுதிகளில் ஒன்றுதான் பொன்னூர்.
பொன்னன் என்பது பிரம்மனைக் குறிக்கும். பிரம்மன் இங்கு வழிபட்டதன் காரணமாக இவ்வூர் பொன்னூர் ஆனதென்பர். அக்காலத்தில் ஐம்பொன் னால் சிற்பங்களை வடிப்பர். அந்த ஐம்பொன்களின் பெயர்களைக் கொண்டு இத்தலத்தைச் சுற்றியுள்ள சில ஊர்களின் பெயர்கள் உள்ளன. பொன் -பொன்னூர், வெள்ளி- கீழ் வெள்ளியூர், ஈயம்-பாதிரி, செம்பு - செம்பூர், இரும்பு - இரும்பேடு ஆகியவை பொன்னூரின் 20 கி.மீ சுற்றளவில் உள்ளன. மேலும், பொன்னை உருக்கிட பயன்படும் ‘வங்காரம்’ என்ற பெயரிலும் பொன்னூரிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் ஒரு ஊர் உள்ளது.

பொன்னூரைச் சுற்றிலும் ஏரி, காடு, மலை என இயற்கை கைகோர்த்து எழிலூட்டுகிறது. ஊரின் வடகிழக்கு திசையில், ஒரே வளாகத்தில், சிவன் கோயில் வளாகத்திலேயே பெருமாள் கோயிலும் அமைந்துள்ளது. இது சைவ-வைணவ ஒற்றுமையினை மேலோங்கச் செய்கின்றது. சுந்தரமூர்த்தி சுவா மிகள், தொண்டை மண்டல வைப்புத் தலமாகப் போற்றிய சிறப்புடையது பொன்னூர் திருத்தலம். தொண்டை மண்டலத்தில் 24 கோட்டங்களும் 79 நாடுகளும் அடங்கும். அவற்றுள் ஜெயங்கொண்ட சோழ மண்டலம், வெண்குன்றம் கோட்டத்தின் ஒரு பகுதியாக பொன்னூர் நாடு இருந்துள்ளது. பொன்னூர் தலைமையிடமாக விளங்கியதால் பொன்னூர் நாட்டு பொன்னூர் என்று வழங்கப்பட்டது.

79 நாடுகளில் ஒன்றாக, பல ஊர்களை உள்ளடக்கியது பொன்னூர் நாடு. இதை சுந்தரரின் பாடல் வரியிலும், ஆலயக் கல்வெட்டிலும் காணப் பெறலாம்.
ஆதி நாளிலேயே இவ்வூர் இறைவனை பராசர முனிவரும் பிரம்மனும் வழிபட்டுள்ளனர். எனவே இது தொன்மையான திருத்தலம் என்பதில் துளியும் ஐயமில்லை. இந்த ஆலயம் பல்லவர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பின்னர் சோழ மன்னர்கள் காலத்திலும் திருப்பணி கண்டுள்ளது. விஜயநகர மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் சபா மண்டபம் கட்டப்பட்டு கோயில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஒரு திருச்சுற்றுடைய இவ்வாலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. இங்கு ஓர் விசேஷம் உண்டு. சிவன் சந்நதியும் அம்பிகை சந்நதியும் ஒரே சபா மண்டபத்தைக் கொண்டவாறு அமைந்துள்ளதால், ஒரே இடத்தில் நின்றவாறு சுவாமியையும், அம்பாளையும் தரிசனம் செய்யலாம். அதாவது, இறைவன் சந்நதி கிழக்கு முகமாகவும் அம்பாள் சந்நதி தென்முகமாகவும் ஒரே சபா மண்டபத்தில் அமைந்திருப்பதால், மேற்கண்ட அரிய விசேஷ தரிசனம் நமக்குக் கிடைக்கின்றது.
சபா மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை ஆகியவற்றைக் கொண்டு விளங்குகிறது சுவாமியின் சந்நதி. அம்பாள் சந்நதி சபா மண் டபம், மகா மண்டபம், அந்தராளம், மூலஸ்தானம் ஆகிய அமைப்புகளைக் கொண்டுள்ளது. இங்கு இறைவனாக ‘திருக்காமீஸ்வரர்’ அருள்பாலிக்கின்றார்.

பராசர முனிவர் வழிபட்டதால் பராசரேஸ்வரர் என்றும், பிரம்மன் பூஜித்தமையால் பிரம்மேஸ்வரர் என்றும் இவருக்குத் திருநாமங்கள் உள்ளன. கிழக்கு பார்த்தபடி தேஜோமயமாக அருட்காட்சி அளிக்கும் இறைவன், ‘பொன்னார் மேனியனாக’ பிரகாசிக்கின்றார். பொன்னொளி வீசும் இந்த லிங்க மூர்த்திக்கு அர்ச்சகர் ஆரத்தி காட்டும்போது, கற்பூர ஒளி லிங்கத்தின் மீது பட்டு எதிரொளிக்கிறது. இறைவி சாந்தநாயகி, சாந்தமே உருவாக அருளை வாரி வழங்குகின்றாள். இத்தல தீர்த்தமாக ஆலயத்தின் தென்கிழக்கு மூலையில் 80 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்ட திருக்குளம் அமைந் துள்ளது. பிரம்மா ஏற்படுத்தியதால் இது ‘பிரம்ம தீர்த்தம்’ என்று போற்றப்படுகிறது. தற்போது இந்த தீர்த்தக் குளம் பழுதடைந்து, படிகள் சரிந்து, பயனின்றி கிடக்கின்றன.

இத்தலத்தின் விருட்சமாக, ‘சரக்கொன்றை’ திகழ்கிறது. விநாயகர் முதலான இவ்வாலய கோஷ்ட தெய்வங்கள் யாவும் சுற்று முறையில் இன்றி, ஒரு வரிசையில் மகா மண்டபத்தில் காணப்படுகின்றன. ஒருகால பூஜை மட்டும் நடக்கும் இவ்வாலயத்தில் பிரதோஷத்தைத் தவிர வேறெந்த விசேஷமும் நடைபெறுவதில்லை. நெடுநாளைய பாவங்கள் தீர்ந் திட, சரக்கொன்றை மலரால் திருக்காமீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து, பலனடையலாம். பராசர கோத்திரமுடையவர்கள் அவசியம் வழிபட வேண்டிய திருத்தலம் இது. பல்லவர்கள் ஆட்சிக் காலத்திலேயே இவ்வாலய வளாகத்துள் உள்ள பெருமாள் சந்நதியும் கட்டப்பெற்றுள்ளது. இச்செய்தியினை பல்லவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டின் மூலம் அறியலாம்.

மீண்டும், வென்றுமண் கொண்ட சம்புவராயரின் 14வது ஆட்சிக்காலத்தில், அதாவது கி.பி.1336ல் விஷ்ணு சந்நதி புதுப்பிக்கப்பட்டுள்ளது. அப்போது ஸ்ரீவிண்ணகர் என்று அழைக்கப்பெற்ற இப்பெருமாள் ஆலயம் தற்போது அழகப் பெருமாள் கோயில் என்றழைக்கப்படுகிறது. சிவன் சந்நதிக்கு வடப்புறம் 7 அடி உயர மகாவிஷ்ணு சிலை ஒன்று உள்ளது. இச்சிலையே பழைய பெருமாள் சிலையாகும். மேற்கு நோக்கியிருக் கும் இத்திருமால் ஆலயம், ஒரு சுற்று கொண்டது. மூலவர் சிலை அத்தி மரத்தால் மிகவும் நேர்த்தியாகச் செய்யப்பட்டுள்ளது. இவருக்கு தைலக் காப்பு மட்டுமே உண்டு; அபிஷேகம் கிடையாது. அரசர் காலத்தில் ஸ்ரீகரண விண்ணகர எம்பெருமாள் என்று அழைக்கப்பட்ட இப்பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார்.

இவரின் கீழே சௌந்தர்ய வரதராஜப் பெருமாளின் கற்சிலை சிறிய அளவில் உள்ளது. இப்பெருமானுக்கு அபிஷேகம் உண்டு. பல்லவர், சோழர், பாண்டியர், சாளுக்கியர், ராஷ்டிரகூடர், விஜயநகர மன்னர்கள், சம்புவராயர்கள் ஆகியோரின் காலத்துக் கல்வெட்டுகள் சிவாலயத்தி லும் பெருமாள் ஆலயத்திலும் பற்பல இடங்களில் காணப்படுகின்றன. அவற்றில் இவ்வாலயத்திற்கு அழகிய கொடை மற்றும் மானியங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளன. கடந்த நூறு ஆண்டுகளாக கவனிப்பாரற்று, புதர் மண்டிப் போயுள்ளது இவ்வாலயம். செடிகளும் கொடிகளுமாய் புதர்க் கூட்டம். ஆங்காங்கே மண் சரிந்து, சந்நதியின் கருங்கற்கள் பல வீழ்ந்து பாம்பும் தேளும் குடிகொண்டு பார்க்கவே வருத்தமளிப்பதாய் உள்ளது.

உள்ளூர் சிவனடியார்கள் ஒன்று திரண்டால் உலகத்துச் சிவனடியார்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள் என்றுதான் தோன்றுகிறது. அதுவரை என்று ஒளி பெறுமோ இந்த பொன் ஊர்? எ ன்ற கேள்வி மனதை நெருடிக் கொண்டுதான் இருக்கும். ஆலயத் தொடர்புக்கு: 9962805037. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியிலிருந்து 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது பொன்னூர். வந்தவாசியிலிருந்து கீழ்புத்தூர், வங்காரம் செல்லும் பேருந்துகளில் பொன்னூரை அடையலாம். வந்தாசியிலிருந்து நேரடிப் பேருந்துகளும் உள்ளன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum