தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரம்மன் ஆணவத்தை அழித்த பைரவர்

Go down

 பிரம்மன் ஆணவத்தை அழித்த பைரவர்  Empty பிரம்மன் ஆணவத்தை அழித்த பைரவர்

Post  amma Sun Jan 13, 2013 1:41 pm

பிரம்மனுக்கு ஆரம்பத்தில் ஐந்து தலைகள் இருந்தன. உலக உயிர்களையெல்லாம் நாம் தானே படைக்கிறோம் என்ற ஆணவம் தலைக்கேறி சிவபெருமானையே கேலி செய்தான். இதனையறிந்த சிவன் பிரம்மனின் ஆணவத்தை அடக்கி உலக மக்களுக்காக தன் அங்கமான சர்வசக்தி படைத்த பைரவரை உண்டாக்கினார்.

பிறகு சிவபெருமானின் அம்சமாகத் தோன்றிய பைரவ மூர்த்தி பிரம்மனின் ஒருதலையைக் கிள்ளி எடுத்தார். இப்படி பிரம்மனின் ஆணவத்தை அழித்த இந்த செய்தி அகந்தை கொண்டவர்கள், தவறு செய்பவர்கள் யாராக இருப்பினும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதையும், தீய எண்ணத்துடன் பிறர் செய்யும் இடையூறுகளிலிருந்தும் நல்லவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்பதையும் உணர்த்தும் மிகப்பெரும் தத்துவமாகும்.

பிரம்மனின் தலையைத் துண்டித்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க அருளுமாறு சிவனை பைரவர் வேண்டினார். சிவன் பைரவரை பூலோகத்தில் தோஷம் நீங்க பிட்க்ஷைஎடுத்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்றும் கூறினார். அவ்வாறு பூலோகம் சென்று பிட்க்ஷைபெற்று வருகையில் குடந்தை அருகிலுள்ள திருவலஞ்சுழியில் பைரவருக்கு பிரம்மஹத்தி தோஷம நீங்கிற்று.

பின்பு அங்குள்ள ஸ்வேத விநாயகரை வழிபட்டவுடன் விநாயகர் தோன்றி, "உம் கையில் உள்ள சூலாயுதத்தை கிழக்கு நோக்கி வீசு. அது எங்கு சென்று சேர்ந்திருக்கிறதோ அந்த இடத்தில் கோவில் கொண்டிருப்பாயாக'' என அருளினார். பைரவர் அவ்வாறே கிழக்கு நோக்கி சூலாயுதத்தை வீச, அது தற்போதுள்ள சேத்திரபாலபுரம் இடத்தில் விழுந்தது.

அந்த இடத்தில் இருந்த ஸ்வேத விநாயகரை வழிபட்டு அவ்விடத்திலேயே கோவில் கொண்டார். சூலம் விழுந்த இடம் தீர்த்தமாயிற்று. கால பைரவருக்கு சேத்திர பாலகர் என்று பெயர். அவர் பெயரே அந்த ஊருக்கு அமைந்து சேத்திர பாலபுரம் என்று வழங்கலாயிற்று. இந்த சேத்திர பாலபுரம் மயிலாடுதுறை தாலுகா, குற்றாலம் அருகிலுள்ளது.

இவ்வாறு கோவில்களில் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆபத்து ஏதாவது நேரும்போது சிவனின் அம்சமாக இருந்து ஆபத்துக்களிலிருந்து விடுபட வைத்துக் காப்பாற்றுபவர் பைரவ மூர்த்தியாவார். இதைத் தவிர எல்லைக் காவல் தெய்வமாகவும் இருந்து அருள் பாலிக்கிறார்.

கால பைரவர்:பைரவ உருவங்களில் பல உண்டு என்றாலும் பிரதானமானவராகக் கருதப்படுபவர் கால பைரவர். காசி கோவிலில் பைரவர்தான் பிரதானமாக வணங்கப்படுகிறார். எண்ணற்ற மக்கள் கால பைரவரின் புனித ரட்சையை (காசிக்கயிறு) அணிந்து கொண்டு எவ்வித அச்சமும் இல்லாதவர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.

சனீஸ்வர பகவானுக்கு குருவாக விளங்குபவர் பைரவர். சூரியன் மகனான யமதர்மனால் அலட்சியப்படுத்தப்பட்டு கவுரவக் குறைவை அடைந்தார். சனி அவருடைய தாய் சாயாதேவியின் அறிவுரைப்படி பைரவரை வழிபட்டு அவருடைய அருளால் நவக்கிரகங்களில் ஒருவராக கிரகப் பதவி கிடைக்கப் பெற்றார். ஆகையால் பைரவர் சனீஸ்வரருக்கு குருவாக விளங்கியும் அருள் பாலிக்கிறார்.

அஷ்ட பைரவர்: பைரவர் தன் அம்சமாக அஷ்ட பைரவர்களைப் படைத்தார். ஒரே பைரவர் எட்டு வகைப் பலன்களைச் செய்யும் பொழுது அஷ்ட பைரவர்களாகத் தோன்றுகின்றனர். எட்டு திசைகளிலும் அஷ்ட பைரவர்கள் காவல் புரிகிறார்கள். திருவண்ணாமலை ஆலயத்தில் உள்ள கால பைரவர் ஆலய முக மண்டபத்தில் எட்டு பைரவர்களின் கதைச் சிற்பங்களை தரிசிக்கலாம்.

சீர்காழி சட்டநாதர் ஆலய தெற்கு பிராகார வலம்புரி மண்டபத்தில் அஷ்ட பைரவர் உள்ளார்கள். அஷ்ட பைரவர்களும் வழிபட்ட எட்டு லிங்கங்கள் கொண்ட கோவில் காஞ்சீபுரம் அருகிலுள்ள பிள்ளையார் பாளையத்தில் உள்ளது. விழுப்புரம்-பாண்டிச்சேரி சாலையில் உள்ள `வடுவூர்' சிவன் கோவிலில் எட்டு வடிவங்களில் பைரவர்களைக் காணலாம்.

ஸ்ரீயோக பைரவர்: (திருப்பத்தூர்-சிவகங்கை மாவட்டம்) காலச் சக்கரத்தின் சுழற்சிக் கேற்ப நவகிகரங்கள் நமக்கு இன்பத்தையும், துன்பத்தையும் தருகின்றன. அந்தக் காலச் சக்கரத்தினை இயக்கி, நவகிரகங்களை ஆட்சி செய்பவர் `ஸ்ரீயோக பைரவரே'. ஸ்ரீயோக பைரவர் இட்ட கட்டளைகளை நிறைவேற்றும் சேவர்களே நவகிரகங்கள்.

அஷ்ட பைரவர்கள் இங்குள்ள யோக பைரவரிடமிருந்து தோன்றியவை எனக் கூறுகின்றனர். ஸ்ரீ யோக பைரவரை ஜோதிட நூல்கள் காலமே உருவாய்க் கொண்ட கால புருஷனாகக் கொள்கின்றன. பன்னிரண்டு ராசிகளும் அவரது உருவின் பகுதியாகின்றன.

மேஷம்-சிரசு, ரிஷபம்-வாய், மிதுனம்-இரு கரங்கள், கடகம்-மார்பு, சிம்மம்-வயிறு, கன்னி-இடை, துலாம்-புட்டங்கள், விருச்சிகம்-லிங்கம், தனுசு-தொடைகள், மகரம்-முழந்தாள், கும்பம்-கால்களின் கீழப்பகுதி, மீனம்-அடித்தளங்கள். இப்படி 12 ராசிகளின் அதிபதிகளான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனீஸ்வரர் மற்றும் ராகு, கேது ஆகிய கிரகங்களும் அவருள் அடக்கம்.

ஆலய பீடத்தில் பைரவர்களும் உறைந்த உள்ளனர். இந்திரன் மகன் சயந்தன் இவரை வழிபட்டுச் சிறப்புற்றான். இப்பைரவருக்கு நாள் தோறும் அர்த்த ஜாமத்தில் புனுகு சாற்றி, வடைமாலை நைவேத்தியம் நிவேதிக்கப்படும் வேறு ஸ்தலங்களுக்கு பரிகாரத்திற்குச் செல்லாதவர்கள் இந்த ஸ்தலத்திற்கு வந்து வழிபாடு செய்தால் நவகிரக தோஷங்கள் நீங்கும். தினமும் நடைபெறும் உச்சிகால பூஜை (பகல் 12 மணி) சிறப்பு.

ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர்: ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் சிவனின் பிரதிபிம்பம் என்று புராணம் கூறும். ஸ்வர்ணாகர்ஷண என்றால் எளிதில் கவரக்கூடிய என்று பொருள். இவர் செந்நிற மேனியையும் அல்லது மலர்ந்த தாமரை மலர் முகம், பொன்னிற சடை, முடியில் பிறைச் சந்திரன், கரங்களில் தாமரை, அமுத கும்பம், மணிகள் பொதிந்த சங்கம், அபயம், வரதத்தோடு பொன் சொரி குடம் ஒரு கரத்தால் தாங்கி, மறு கரத்தால் தம்மை தழுவும் ஆதி சக்தியை ஒரு புறத்துத் தழுவியவர் என ஆகமம் கூறுகிறது.

ஸ்வர்ணாகர்ஷண பைரவ மூர்த்தி அம்பாளுடன் சேர்ந்து அருள் பாலிப்பார். பக்தர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் அருளும் அம்பிகை மகா ஸ்வர்ண பைரவி. பொன் சொரியும் குடம் ஏந்தியவள். அபயம் தரும் முத்திரை கொண்டு ஸ்வர்ண பைரவருடன் இணைந்து அருள் பாலிக்கிறார்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum