தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராஜயோகம்/தோஷம்

Go down

ராஜயோகம்/தோஷம்  Empty ராஜயோகம்/தோஷம்

Post  meenu Mon Feb 04, 2013 5:31 pm


நீசபங்க ராஜயோகம்
ஒருவர் வளமான வாழ்க்கை வாழ்வதற்கும், பல அதிர்ஷ்டங்களை அடைவதற்கும், ஜெனன ஜாதகத்தின் கிரக நிலைகள் பலமாக இருப்பது அவசியம். அதுவே கிரகங்கள் பலமிழந்து இருப்பது நல்லதல்ல. ஒரு கிரகம் தனது பலவீன ஸ்தானமான நீச ஸ்தானத்தில் இருப்பது, அந்தக் கிரகத்தின் காரகத்துவத்தையும், அந்தக் கிரகம் எந்த வீட்டின் அதிபதியாக இருக்கிறதோ அந்த வீட்டின் பலனையும் பாதிக்கும் என்றாலும், நீசபங்கம் பெற்று நீசபங்க ராஜயோகம் உண்டாகி இருந்தால் முதலில் கெடுபலன்களை ஏற்படுத்தினாலும் அதன் பிறகு பெரிய அளவில் அதிர்ஷ்டமும் யோகமும் உண்டாகும்.
ஒரு கிரகம் நீசம் பெற்றாலும் அந்தக் கிரகம் நின்ற வீட்டதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ, கேந்திர ஸ்தானங்களான 1,4,7,10ல் அமைந்திருந்தாலும் நீசம் பெற்ற கிரகத்துடன் ஒரு உச்ச கிரகம் இருந்தாலும், நீசம் பெற்ற கிரகம் ராசி சக்கரத்தில் பரிவர்த்தனை பெற்றோ, அம்ச சக்கரத்தில் ஆட்சி உச்சம் பெற்றோ இருந்தால் நீசபங்க ராஜயோகம் உண்டாகிறது.

உதாரணமாக, தந்தை காரகனான சூரியன் நீசம் பெற்றிருந்தால், அந்த குழந்தை பிறக்கின்ற போதே தந்தைக்கு பாதிப்புகள் ஏற்படும். அதுவே நீசபங்க ராஜயோகம் உண்டாகி இருந்தால் பாதிப்புகள் விலகி பின்பு நல்லது நடக்கும்.
ஒருவரின் ஜாதகத்தில் திருமணத்தைக் குறிக்கக்கூடிய ஸ்தானம் 7ம் வீடாகும். 7ம் அதிபதி நீசம் பெற்று பங்கம் அடைந்திருந்தால், அந்த ஜாதகருக்கு திருமண வாழ்க்கை அமையும் போது சில பாதிப்புகள் ஏற்பட்டாலும் பாதிப்புகள் விலகி பின்பு நல்லது நடக்கும்.
அது போல ஒருவர் ஜாதகத்தில் 5ம் அதிபதியோ, குருவோ நீசபங்கம் பெற்றிருந்தால் முதலில் ஒரு கருசிதைவு ஏற்பட்டு அதன் பின்பு குழந்தை யோகம் உண்டாகும்.

********************************

ஜனன ஜாதகமும் தன யோகமும்

ஜென்ம லக்னத்திற்கு 2ம் வீடு தனஸ்தானமாகும். 9ம் வீடு பாக்கிய ஸ்தானமாகும் 10ம் வீடு ஜீவன ஸ்தானமாகும். 11ம் வீடு லாப ஸ்தானமாகும். பொதுவாக வீடு வாகன யோகத்தையும் அசையா சொத்து யோகத்தையும் உண்டாக்குவதற்கு வழி வகுக்கக் கூடிய ஸ்தானமாக 4ம் வீடு அமைகிறது. அதுபோல 5ம் வீடு பலம் பெற்றிருந்தால் பூர்வ புண்ணிய வகையில் பொருளாதார ரீதியாக யோகத்தினை அடைய முடியும். நவகிரகங்களில் தன காரகன் என வர்ணிக்கப்படக் கூடியவர் குரு பகவானாவார். குரு ஒருவர் ஜாதகத்தில் பலமாக அமையப் பெற்றால் பொருளாதார மேன்மைகள் எளிதில் உண்டாகும். ஒருவர் ஜாதகத்தில் மேற்கூறியவாறு 2, 9, 10, 11 ஆகிய பாங்கள் பலம் பெறுவது முக்கியம். அதுமட்டுமின்றி இவர்கள் 6, 8, 12ல் மறையாமல் இருப்பது மிகவும் முக்கியமாகும்.

2, 9, 10, 11க்கு அதிபதிகள் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை பெற்றிருப்பதும், ஆட்சி பெற்று பலமாக அமைவதும் வலிமையான தன யோகத்தை உண்டாக்கும். குறிப்பாக 4, 7, 10 ஆகிய ஸ்தானங்கள் கேந்திர ஸ்தானங்கள் ஆகும். 1, 5, 9 ஆகிய ஸ்தானங்கள் திரிகோண ஸ்தானங்களாகும். ஒருவர் ஜாதகத்தில் கேந்திர திரிகோணாதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும், இணைந்து பலமாக அமையப் பெற்றிருந்தாலும் எதிர்பாராத வகையில் பொருளாதார ரீதியான ஏற்றத்தினை அடைய முடியும்.


பொதுவாக ஒருவர் ஜாதகத்தில் 3 கிரகங்கள் ஆட்சியோ, உச்சமோ பெற்றிருந்தால் அந்த ஜாதகர் எவ்வளவு ஏழ்மையான நிலையில் இருந்தாலும் சமுதாயத்தில் சொல்லக் கூடிய அளவிற்கு ஏற்றம் உயர்வினை என்றாவது ஒருநாள் கண்டிப்பாக அடைவார்கள். 4ம் அதிபதி பலமாக அமையப் பெற்றால் கிடைத்த பணத்தை வைத்து சொத்துக்கள் வாங்கக் கூடிய யோகம் உண்டாகும்.

அதுபோல ஒருவர் ஜாதகத்தில் எந்த பாவம் பலம் பெறுகிறதோ அந்த பாவத்தின் வழியில் தாராளமான பணத்தினை அடைய நேரிடும். உதாரணமாக ஒருவர் ஜாதகத்தில் 9ம் பாவம் பலம் பெற்றிருந்தால் தந்தை மூலமாகவும் 7ம் பாவம் பலம் பெற்றால் மனைவி மற்றும் கூட்டுத் தொழில் மூலமாகவும், 4ம் பாவம் பலம் பெற்றால் தாய் வழியிலும் 3, 11ம் பாவங்களும் செவ்வாயும் பலம் பெற்றால் உடன்பிறந்தவர்கள் மூலமும், எதிர்பாராத தன வரவுகளையும் பொருளாதார மேன்மைகளையும் அடைய முடியும்.

கோட்சாரமும் தன யோகம்

கோட்சார ரீதியாக ஜென்ம ராசிக்கு ஆண்டு கோள் என வர்ணிக்கப்படக் கூடிய குரு பகவான் 2, 5, 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சாரம் செய்யும் போது பண வரவு திருப்திகரமாக இருக்கும். அதுபோல ஒரு ராசியில் அதிககாலம் தங்கும் சனி பகவான் 3, 6, 11, ஆகிய பாவங்களில் சஞ்சாரம் செய்கின்ற போது பொருளாதார ரீதியாக மேன்மைகள் உண்டாகிறது.

தசா புக்தியும் தன யோகமும்
ஒருவர் சம்பாதித்து அத்தியாவசிய செலவுகள் செய்வதென்பது தனயோகமாக கருத முடியாது. சம்பாதிப்பென்பது அவர்களது அத்தியாவசிய செலவுகளுக்கு அப்பாற்பட்டு அபரிமிதமாக அதிகப்படியாக சேரும் பணமே தன யோகமாகும். அப்படிப்பட்ட சேர்க்கையானது தசா புக்தி மிகவும் சாதகமாக இருக்கின்ற காலத்தில் தான் ஏற்படுகிறது.

குறிப்பாக எதிர்பாராத விதத்தில் தன யோகத்தை அடைய வைக்க தசா புக்தி ரீதியாக சில கிரகங்கள் தான் மிகவும் உதவியாக இருக்கிறது. அதுவும் குறிப்பாக சுக்கிரன், புதன், சனி, ராகு ஆகிய திசைகள் தான் எதிர்பாராத யோகத்தினை உண்டாக்குகிறார்கள். குறிப்பாக சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, கேது ஆகிய திசைகள் நடக்கின்ற போது தன வருவாய் ஆனது ஒரு சீரான தாக இருக்கின்றது அதுமட்டுமின்றி நேர்மையான வழியிலும் நல்வழியிலும் பல பொது காரியங்கள் செய்வதற்கும் வழி வகுக்கும், திசையாகவே விளங்குகிறது. ஆனால், ஒருவருக்கு கேந்திர திரிகோண ஸ்தானங்களில் சுக்கிரன், புதன், சனி ராகு ஆகிய நான்கு கிரகங்கள் அமையப் பெற்று அந்த திசையானது நடைமுறையில் நடைபெற்றால் திடீர் செல்வந்தராகக் கூடிய அமைப்பினை உண்டாக்குகிறது. பொதுவாக 3வது திசை பெரிய யோகத்தினை ஏற்படுத்துவதில்லை.


உதாரணமாக சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி, ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு 4வது திசையாக சுக்கிர திசையாக வருவதால் சுக்கிரன் பலம் பெற்றுவிட்டால் எதிர்பாராத தன யோகத்தினை சுக்கிர திசையில் அடைய முடியும்.

அதுபோல புதனின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர திசை 3வது திசை என்பதால் பெரிய யோகத்தினை ஏற்படுத்த இடையூறுகள் உண்டாகும்.
சந்திரனின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு திசை 3வது திசையாக வருவதால் அனுகூலத்தை ஏற்படுத்துவதில்லை. அதுவே சனி பலம்பெற்றிருந்தால் காலம் கடந்து வர கூடிய சனி திசை பெரிய அளவில் யோகத்தினை உண்டாக்குகிறது.
*******************************************

வெளிநாடு யோகம்
மனிதனாக பிறக்கும் அனைவரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக பல்வேறு வகையில் போராடி வாழ்க்கையை நடத்துகின்றோம். சிலருக்கு இருக்கும் இடத்திலேயே ஒரு கௌரவமான நிலை பொருளாதார மேன்மை உண்டாகிறது. சிலருக்கோ வெளியூர் அமைப்பு, உண்டாகிறது. நமக்கு ஏற்படும் ஒவ்வொரு ஏற்றத் தாழ்வுகளுக்கும் நவகிரகங்கள் தான் முக்கிய காரணமாக அமைகிறது. பொதுவாக ஜனன ஜாதக அமைப்பு தான் நமக்கு உண்டாகும் பலா பலன்களை அறிந்து கொள்ள உதவுகிறது.
ஜென்ம லக்னத்திற்கு 12ம் அதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும் நட்புவீட்டில் அமையப் பெற்றிருந்தாலும் நட்பு கிரக சேர்க்கைப் பெற்றிருந்தாலும் பிறந்த ஊரில் பெயர், புகழுடன் வாழக் கூடிய அமைப்பு உண்டாகும். 12ம் வீட்டில் பாவ கிரகங்கள் அமையப் பெற்றிருந்தாலும் 12ல் கிரகங்கள் இல்லாமல் இருந்தாலும் பிறந்த ஊரை விட வெளியூர் செல்லக் கூடிய வாய்ப்பும், தன் மூலம் அனுகூலமும் உண்டாகும். 12ம் வீட்டில் ஒரு கிரகம் பலமாக அமையப் பெற்று அதன் தசா புக்தி நடைபெற்றால், அக்காலத்தில் வெளியூர் யோகம் வெளிநாடு யோகம் உண்டாகும். அதுபோலஜென்ம லக்னத்திற்கு 9ம் பாவம் வெளிநாடு யோகத்தை நிர்ணயம் செய்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. 9ம் வீடு சர ராசியாகவோ, நீர் ராசியாகவோ இருந்தால் வெளிநாடு செல்லக் கூடிய யோகம் உண்டாகும். 9ம் அதிபதி சர ராசி அல்லது ஜல ராசியில் அமையப் பெற்றால் அதன் தசா புக்தி காலத்தில் வெளிநாடு யோகம் உண்டாகும். அதுபோல 9ம் அதிபதி அமையப் பெற்ற நட்சத்திர அதிபதி ஜல ராசியாகவோ சர ராசியாகவோ அமையப் பெற்றால் வெளிநாடு செல்லக் கூடிய யோகம் உண்டாகும்.

ஜென்ம லக்னத்திற்கு 9ம் அதிபதி 10, 12க்கு திபதியுடன் இணைந்திருந்தாலும், பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் வெளியூர் வெளிநாடு செல்லக் கூடியயோகம் உண்டாகும்.

ஒருவர் ஜாதகத்தில் 3ம் அதிபதி குறுகிய பயணத்தை குறிக்கும் ஸ்தானமாகும். 3ம் அதிபதியோ 3ம் வீடோ 3ம் வீட்டதிபதி அமையப் பெற்ற நட்சத்திராதிபதியோ சர ராசியாகவோ ஜல ராசியாகவோ இருந்தால் அடிக்கடி பயணங்கள் உண்டாகும்.
அதுபோல 11ம் வீடோ, 11ம் அதிபதியோ 11ம் அதிபதி நின்ற நட்சத்திராதிபதியோ சர ராசி அல்லது ஜல ராசியாகவோ இருந்தால் அதன் தசா புக்தி காலத்தில் வெளிநாடு யோகம் உண்டாகும்.
அதுபோல 9, 12ம் பாவங்களில் ராகு பகவான் அமையப் பெற்று அதன் தசா புக்தி நடந்தால் வெளியூர் யோகம் வெளிநாடு யோகம் உண்டாகும்.

********************************
தாமத அதிர்ஷ்டத்தைத் தரும் கால சர்ப யோகம்
என்னதான் முழு முயற்சியுடன் பாடுபட்டு உழைத்தாலும் ஒரு சிலரால் முன்னேற்றமான நிலையினை அடையவே முடியாது. அப்படி கஷ்டப்படும் ஒருவர் 30 வயதுக்கு மேல் திடீரென உயர்வுகளை அடைவார். இளமைக் காலத்தில் கஷ்டங்களையே அனுபவித்து அனுபவித்து மனம் வெறுக்கக்கூடிய சூழ்நிலைக்கு ஆளான ஒருவர் வாழ்க்கையில் திடீரென்று உயர்வுகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார். எப்படி இருந்தவன் இப்படி உயர்ந்து விட்டானே என பலரும் ஆச்சர்யப்படும் அளவிற்கு உயர்வுகள் உண்டாகும்.
இளம் வயதில் ஏன் கஷ்டப்பட்டார், 30 வயதுக்கு மேல் எப்படி வாழ்க்கையில் உயர்ந்தார்? என தெரிந்து கொள்ள, அப்படி முன்னேற்றமடைந்த ஒருவரின் ஜாதகத்தை ஆராய்ந்தோமானால், அவளுக்கு கால சர்ப்ப தோஷம் உண்டாகி இருக்கும். கால சர்ப தோஷமானது 30 வயதுக்கு மேல் யோகமாக மாறி அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். ராகு கேது பிடிக்குள் அனைத்து கிரகங்களும் அமைந்திருப்பது கால சர்ப யோகமாகும். ராகு, கேது பிடிக்குள் அனைத்து கிரகங்களும் இல்லாமல் ஓரிரு கிரகங்கள் தனித்து வெளியே அமைந்தாலும் 80% அது காலசர்ப தோஷமாகவே கருதப்படுகிறது. ராகு, கேது பிடிக்குள் இல்லாமல் தனியே வெளியில் அமைந்திருக்கும் கிரகங்கள் ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயத்திலோ, கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலத்திலோ இருந்தாலும் இதுவும் காலசர்ப தோஷமே ஆகும்.
கால சர்ப தோஷம் அமையப் பெற்றவர்களுக்கு திருமண நடைபெற தடை, புத்திர பாக்கியம் அமைய தாமதம், கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு, உத்தியோக உயர்வுகளுக்குத் தடை, தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமற்ற நிலை, எதைத் தொட்டாலும் சிக்கல்கள் பிரச்சினைகள் போன்றவை 30 வயது வரை ஏற்பட்டு வாழ்வில் முன்னேற்றமடைய தடைகளைக் கொடுக்கும்.
முப்பது வயதுக்கு மேல் தோஷமானது யோகமாக மாறி வாழ்வில் எல்லையில்லா வளர்ச்சியைக் கொடுக்கும். எதிர்பாராத வகையில் உயர்வுகளும் உண்டாகும். வாழ்க்கை நிலையே மாறி, எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியும், செல்வம், செல்வாக்கு உயர்வும், சமுதாயத்தில் ஓர் கௌரவமான நிலையினையும் உண்டாக்கும். தொட்டதெல்லாம் துலங்கி வாழ்வில் யோகமும் அதிர்ஷ்டமும் உண்டாகி பெயர், புகழ் யாவும் உயரும்.
*****************************************
சொந்த வீடு யோகம்

சொந்த வீட்டில் வாழ்வதென்பதே ஒரு தனி மகிழ்ச்சிதான். எலி வலை என்றாலும் தனி வலை வேண்டும் என்பார்கள். அதுபோல நமக்கென ஒரு வீடு இருப்பதென்பது மனநிறைவை தரக்கூடியதுதானே. தற்போதுள்ள சூழ்நிலையில் சொந்த வீடு என்பது எட்டாக்கனியாக இருக்கின்றது. நீர்நிலைகளில் வீட்டை கட்டிக் கொண்டு, மழைக்காலத்தில் வீட்டுக்குள் தண்ணீர் வந்து விட்டது என புலம்புவது என்ன நியாயம்.

நம் முன்னோர்கள் நமக்காக எவ்வளவுதான் சேர்த்து வைத்திருந்தாலும் நம்முடைய சொந்த சம்பாத்தியத்தில் சொந்தமாக வீடு கட்டி தரையில் கை, கால் நீட்டி படுக்கும் சுகம் இருக்கிறதே அப்பப்பா வாழ்க்கையில் பெரிய அளவில் சாதித்து விட்ட பெருமையும், மன நிறைவும் பெரிய அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அப்படி வீடு கட்டி வாழ்வதற்கும் ஒரு யோகம் வேண்டுமல்லவா. அந்த யோகத்தை அடைய நாம் பிறக்கும் போதுள்ள கிரக நிலைகளானது சாதகமாக இருந்து விட்டால் போதும். சொந்த வீடு, மனை, பூமி யோகங்களானது சிறப்பாக அமையும்.

ஒருவரின் ஜனன ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 4ம் வீட்டைக் கொண்டு அவருக்கு உண்டாகக்கூடிய வீடு, மனை யோகத்தைப் பற்றி தெளிவாக அறியலாம். 4ம் வீட்டதிபதி ஆட்சியோ, உச்சமோ பெற்று கேந்திர திரிகோணங்களில் அமையப் பெற்றிருந்தாலும், கேந்திர திரிகோணாதிபதிகளின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் பூமி, மனை, வீடு, மனை காராகனாகவும், சுக காரகனாகவும் விளங்கும் சுக்கிரனும், பூமிகாரகனான செவ்வாயும் பலம் பெற்று அமைந்து 4ம் அதிபதியின் சம்மந்தமுடன் இருந்தால் வீடு, மனை வாங்கக்கூடிய யோகமும், அதிர்ஷ்டமும் உண்டாகும்.

அது போல பூர்வ புண்ணிய ஸ்தானங்களான 5,9 க்கு அதிபதிகளுடன் 4ம் அதிபதி சம்மந்தப்பட்டிருந்தாலும், சுப ஸ்தானங்களான 2,11 க்கு அதிபதிகளுடன் 4ம் அதிபதியின் சேர்க்கை இருந்தாலும் சொந்த வீடு, மனை, பூமி யோகங்களானது மிகவும் சிறப்பாக அமையும். 4ம் வீட்டில் எத்தனை சுபகிரகங்கள் அமைந்தாலும், 4ம் வீட்டை எத்தனை சுப கிரகங்கள் பார்வை செய்தாலும், 4ம் அதிபதியுடன் எத்தனை சுபகிரகங்களின் சேர்க்கை இருந்தாலும் அத்தனை வீடு, மனை வாங்கும் யோகங்களானது அமைந்து அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். 4ம் அதிபதியையும், 4ம் வீட்டையும் குரு பார்வை செய்தாலும் வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

*******************************

சகட யோகம்

குருவுக்கு 6,8,12,இல் சந்திரன் இருந்தால் அது சகட யோகம்.வாழ்க்கை ஒரு சக்கரம் போல் ஓடிக்கொண்டே இருக்கும் .பொருளாதார ரீதியில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும்.

கெஜகேசரி யோகம்,

சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு அமையப் பெறுவது. இதனால் பல யானைகளுக்கு மத்தியில் வாழும் ஒரு சிங்கம் போன்ற வலிமை உண்டாகும். புகழ், பெருமை, செல்வம், செல்வாக்கு போன்ற யாவும் உயரும்.

ஹம்ச யோகம்,

குரு ஆட்சியோ, உச்சமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானத்தில் அமையப் பெறுவது. இதனால் நீண்ட ஆயுள், சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை உயரும் அமைப்பு, செல்வம், செல்வாக்கு போன்ற யாவும் சிறப்பாக அமையும்.

குரு மங்கள யோகம்,

குரு செவ்வாய்க்கு கேந்திரத்தில் அமையப் பெறுவது. இதனால் பூமி, மனை சேர்க்கை அதிகரிக்கம்.

கோடீஸ்வர யோகம்,

குரு, கேது சேர்க்கை பெற்றாலும், கேதுவை பார்வை செய்தாலும் உண்டாவது. இதனால் பெரிய மனிதர்களின் நட்பு ஆன்மிக, தெய்வீக காரியத்தில் ஈடுபாடு, செல்வம், செல்வாக்க போன்றவை யாவும் சிறப்பாக அமையும்.

சண்டாள யோகம்,

குரு, ராகு சேர்க்கை பெற்றிருப்பது (அ) ராகுவை பார்வை செய்வது. இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.

சகடையோகம்,

சந்திரனுக்கு 6,8,12 ல் குரு இருந்தால் உண்டாவது. இதனால் வாழ்வில் ஏற்றத் தாழ்வுள்ள பலன்களே உண்டாகும. வாழ்க்கை வண்டி சக்கரம் போல சாண் ஏறினால் முழம் சறுக்கும்.
-----------------
விபரீத ராஜ யோகம் என்றால் என்ன?

யோகங்கள் என்பது பல வகைப்படும். அதாவது சந்திரனில் இருந்து குரு இந்த இடத்தில் இருந்தால் ஒரு யோகம், மற்றொரு இடத்தில் இருந்தால் அது ஒரு யோகம் என்று சொல்வார்கள்.
உதாரணத்திற்க சந்திரனுக்கு 4ல், 7ல், 10ல் குரு இருந்தால் அது கஜகேசரி யோகம் எனப்படும்.
6க்கு உரியவன் 8ல் இருந்தால், 8க்கு உரியவன் 12ல் இருந்தால் இதெல்லாம் விபரீத ராஜ யோகம். அதாவது “கெட்டவன் கெட்டிடின் கிட்டிடும் ராஜ யோகம்” என்று ஒரு வாக்கு உண்டு.
கெட்ட வீட்டிற்குரிய ஒரு கிரகம், மற்றொரு கெட்ட வீட்டில் போய் அமர்ந்தால் விபரீத ராஜ யோகத்தை உண்டாக்கும். அதாவது மைனஸ் x மைனஸ் = பிளஸ் என்பது போன்றது.
குறிப்பாக கன்னி, ரிஷபம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு எல்லாம் இந்த ராகு, கேது பெயர்ச்சியால் விபரீத ராஜ யோகம் ஏற்படும்.
ராஜ யோகம் என்றால் சொத்து, பதவி போன்றதா?
எதிர்பார்ப்பதை விட அதிகமான நன்மை கிடைப்பதுதான் ராஜ யோகம். நாம் அந்த அளவிற்கு எதிர்பார்த்திருக்கவே மாட்டோம். அது கிட்டினால் அதை ராஜ யோகம் என்று சொல்லலாம்.

யோகம் என்ற வார்த்தைக்கு அர்த்தம்?

அதாவது நமக்கு வாழ்க்கையில் கிட்டும் ஒரு நன்மையை யோகம் என்று சொல்கிறோம். அதாவது அதிர்ஷ்டம்.
யோகம் என்பது ஒரு வித நன்மைக்கான அறிகுறி. கிரகங்களின் மூலமாக மனிதர்கள் பெறக்கூடியது. யோகம் என்பதை ஆழ்ந்து பார்த்தால் யோகம் என்ற வார்த்தைக்கு முன்னால் வரும் வார்த்தையை வைத்துத்தான் அதனைக் கூற முடியும்.
யோகம் என்றாலே நன்மைதான் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. அதாவது தரித்தர யோகம் என்று கூட ஒன்று உள்ளது. ராஜ யோகம் என்று சொல்லும்போது பலர் வணங்கக் கூடிய மாமனிதனாவான் என்று சொல்வார்கள்.

ராஜ யோகம் என்பது எந்த கிரக அமைப்பைப் பொறுத்தது?

எல்லா லக்னத்திற்கும் இன்னன்ன கிரகங்கள் இன்னன்ன இடத்தில் சேர்ந்திருந்தால் விபரீத ராஜ யோகம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
உதாரணத்திற்கு, மிதுன லக்னத்தை எடுத்துக் கொண்டால் “சந்திரனும் புதனும் சேர்ந்தால் இந்திரனைப் போல வாழ்வான்” என்று சொல்வார்கள்.
துலாம் லக்னத்திற்கும் சந்திரனும், புதனும் சேர்ந்தால் இந்திரன் போல் வாழ்வான் என்று சொல்வார்கள்.துலாம் லக்னத்திற்கு புதன் பாக்யாதிபதி, சந்திரன் ஜீவனாதிபதி. பாக்யாதிபதியும், ஜீவனாதிபதியும் ஒன்று சேரும்போது இந்திர பாக்கியம் கிட்டும்.ஒவ்வொரு லக்னத்திற்கும் இன்னன்ன கிரகங்கள் பாவத்தைத் தரும், இன்னன்ன கிரகங்கள் யோகத்தைத் தரும்.

தரித்திர யோகம் என்பது என்ன?

இடையூறுகளைத் தரக்கூடியதுதான் இந்த தரித்திர யோகம்

1. லக்கினாதிபதி 1ஆம் வீட்டில் அதாவது லக்கினத்தில் இருந்தால்: ஜாதகன் சுதந்திர மனப்பான்மையுடன் தன்னிச்சையாக வாழ்பவனாக இருப்பான். யார் சொன்னாலும், அவர்கள் பேச்சைக் கேட்கமாட்டான் தன் எண்ணப்படி, நோக்கப்படி வாழ்பவனாக இருப்பான். ஜாதகன் தீர்க்க ஆயுளை உடையவனாக இருப்பான். சொத்துக்களை உடையவனாக இருப்பான். பெருமைகள், புகழை உடையவனாக வளர்வான். வாழ்க்கையில் ஜீவனம் நல்லமுறையில் நடைபெறும். மகிழ்ச்சி நிறைந்தவனாக இருப்பான். தெய்வ நம்பிக்கை, தெய்வ வழிபாடுகள் மிகுந்தவனாக இருப்பான். உறவினர்களுடன் பிரச்சினைகள் இன்றி ஒற்றுமையுடன் வாழ்வான். தனது ஊரில், அல்லது தனது மாவட்டத்தில் அல்லது தனது இனத்தில் அல்லது தனது நாட்டில் செல்வாக்கும், புகழும் பெற்றவனாகத் திகழ்வான். மேற்கூறிய பலன்கள் எல்லாம் லக்கினமும், லக்கினாதிபதியும் நன்றாக இருந்தால் மட்டுமே. இல்லையென்றால் அவற்றிற்கு நேர் மாறான பலன்களே நடைபெறும்
2. லக்கினாதிபதி 2ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்: ஜாதகன் உயர்ந்த பண்புகள் உள்ள குடும்பத்தில் பிறந்தவனாக இருப்பான். அவனுடைய குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாக்கு வன்மை நிறந்தவனாக இருப்பான். அவன் சொற்கள் எல்லா இடங்களிலும் எடுபடும். தனது குடும்பத்திற்காக பல தியாகங்களைச் செய்பவனாக இருப்பான் தன் குடும்பத்திற்கான தன்னுடைய கடமைகளை நிறைவேற்றுபவனாக இருப்பான். செல்வமும், செல்வாக்கும் மிகுந்தவனாக இருப்பான். மன அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்தவனாக இருப்பான்,
3. லக்கினாதிபதி 3ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்: ஜாதகன் அதீத துணிச்சல் உள்ளவனாக இருப்பான். அதிர்ஷ்டமுள்ளவனாக இருப்பான். எல்லா நலன்களும் அவனைத் தேடி வரும். மரியதைக்குரியவனாகவும், புத்திசாலியாகவும் இருப்பான் சிலருக்கு இரண்டு மனைவிகள் இருப்பார்கள் ஜாதகன் சகோதரர்கள், சகோதரிகளின் அன்பைப் பெற்றவனாக இருப்பான், அவர்களுடன் ஒற்றுமையாக வாழ்வான். நுண்கலைகளில் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்துடன் வாழ்பவனாக இருப்பான்.
4. லக்கினாதிபதி 4ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்: ஜாதகன் தன் பெற்றோர்களால் மிகுந்த மகிழ்ச்சிக்கு ஆளாகுவான் அனேக உடன் பிறப்புக்கள் இருக்கும். அழகான தோற்றத்தை உடையவனாகவும், நற்பண்புகளை உடையவனாகவும் ஜாதகன் இருப்பான் ஜாதகன் நிலபுன்கள், வீடு வாசல்களைப் பெற்றவனாக இருப்பான். நல்ல குடும்ப உறுப்பினர்களைப் பெற்றவனாக இருப்பான். ரோட்டி, கப்டா, மக்கான் என்னும் உண்ண உணவு, உடுக்க உடைகள், இருக்க இடம் என்னும் அடிப்படைத் தேவைகளுக்குக் குறைவில்லாத வாழ்க்கையைப் பெற்றவனாக இருப்பான். தாயின் அன்பையும், அரவணைப்பையும் பெற்றவனாக இருப்பான். தாய்வழி உறவினர்களின் அன்பைப் பெற்றவனாக இருப்பான். கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான் சுகவாசியாக இருப்பான். வண்டி, வாகனங்களை உடையவனாக இருப்பான். இத்துடன், ஜாதகத்தில் 4ஆம் வீட்டிற்கு உரிய கிரகமும் வலிமை பெற்றிருந்தால் மேற்கூரிய பலன்கள் இரட்டிப்பாகக் கிடைக்கும்.
5. லக்கினாதிபதி 5ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்: ஜாதகன் புத்திர பாக்கியங்களைப் பெற்றவனாக இருப்பான். அதாவது நிறைய மக்களைப் பெற்றவனாக இருப்பான். அதோடு தன்னுடைய குழந்தைகளின் அன்பையும், ஆதரவையும் பெற்றவனாக இருப்பான். ஜாதகன் பெருந்தன்மை உடையவனாகவும், சேவைமனப்பான்மை உடையவனாகவும் இருப்பான். மொத்தத்தில் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும் சிலருக்கு அரசியல் செல்வாக்கும், ஆட்சியாளர்களின் ஆதரவும் இருக்கும்
6. லக்கினாதிபதி 6ஆம் வீட்டில் வலிமையுடன் இருந்தால்: ******** ஜாதகன் நோய் நொடிகள் நிறைந்து அவதிப்படுபவனாக இருப்பான். எதிரிகள் நிறைந்தவனாக இருப்பான். பல அவதூறுகளுக்கு ஆளாக நேரிடும் பலவிதங்களில் கடன் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும். மொத்தத்தில் மன அமைதி இல்லாத வாழ்க்கை வாழ நேரிடும் லக்கினாதிபதியின் தசை அல்லது புத்திக் காலங்களில் கடன் மற்றும் நோய்களுக்குத் தீர்வு கிடைக்கும். லக்கினாதிபதி வலுவாக உள்ளவர்கள் ராணுவத்தில் பணிபுரிந்து சிறப்பைப் பெறுவார்கள் சிலர் மருத்துவத்துறையில் பணிபுரிந்து பெருமையடைவார்கள்
7. லக்கினாதிபதி ஏழாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்: சிலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் நடைபெறும். சிலர் வாழ்க்கையின் பின் பகுதியில் சந்நியாசியாகி விடுவார்கள். மற்ற கிரகங்களின் அமைப்பை வைத்து ஜாதகன் செல்வந்தனாக இருப்பான் அல்லது ஏழையாக இருப்பான். ஜாதகன் 'தான்' என்னும் குணமுடையவனாக இருப்பான். மனைவியால் சொத்துக்கள் கிடைக்கும். சிலருக்கு மனைவியின் வருமானத்தால் சொத்துக்கள் கிடைக்கும். சிலர் பெண்ணாசை மிகுந்தவர்களாக இருப்பார்கள். எப்போதும் பெண்களின் நினைவாகவே இருப்பார்கள் எந்தத் தொழிலிலும் அக்கறையில்லாமல் இருப்பார்கள். இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தால் ஜாதகன் வெளிநாடு சென்று, பெரும்பொருள் ஈட்டி மகிழ்வுடன் வாழ்வான்.
8. லக்கினாதிபதி எட்டாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்: ஜாதகன் கல்வியில் சிறந்தவனாக இருப்பான். சூதாட்ட மனப்பான்மை மிகுந்திருக்கும். ஒழுக்கக் குறைவு ஏற்படும். சிலருக்கு மரணம் - அது வரும் நேரத்தில் அமைதியானதாகவும், ஒரு நொடியில் ஏற்படுவதாகவும் அமையும். இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகன் நீண்ட ஆயுளை உடையவன். ஆனால் வாழ்க்கை சிரமத்துடன் நடக்கும். ஜாதகன் பலரின் மனக்கசப்பிற்கு ஆளாக நேரிடும். சிலருக்கு உடலில் அங்கக் குறைபாடுகள் இருக்கும் சிலருக்கு குழந்தை பாக்கியம் இருக்காது. தத்துப் பிள்ளையை எடுத்து வளர்க்க நேரிடும். இந்த அமைப்பை பாபக்கிரகம் பார்த்தால், ஜாதகன் மத்திம ஆயுளை உடையவன். வாழ்க்கையில் வறுமை ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும் சிலருக்குப் பலவிதங்களில் அவப்பெயர்
9. லக்கினாதிபதி ஒன்பதாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்: பொதுவாக இந்த அமைப்பு மிகவும் அதிர்ஷ்டகரமானதாகும். ஜாதகன் பலருக்கும் உதவுபவனாக இருப்பான். நல்ல மனைவி, குழந்தைகள் கிடைக்கும் அமைப்பு இது. இது பாக்கியஸ்தானம் அதை மனதில் கொள்க! ஜாதகனுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும். இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு நல்ல தந்தை கிடைப்பார். அவரால் ஏற்படும் சகல பாக்கியங்களும் ஜாதகனுக்குக் கிடைக்கும். முன்னோர் சொத்துக்கள் கிடைக்கும் ஜாதகன் பெரியவர்களை மதிக்கும் குணம் உடையவனாக இருப்பான் சிறந்த பக்திமானாக விளங்குவான். தர்மத்தைக் கடைப்பிடிப்பவனாக இருப்பான், நேர்மையாளனாக இருப்பான். வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். இந்த அமைப்பை பாபக்கிரகம் பார்த்தால், மேற்சொன்ன பலன்கள் எதுவும் இருக்காது.
10. லக்கினாதிபதி பத்தாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்: தொழிலில் அல்லது வேலையில் பல வெற்றிகளைப் பெறுவதற்கான அமைப்பு இது. பத்தாம் அதிபதிக்கும், லக்கின அதிபதிக்கும் சம்பந்தப்பட்ட தொழிலைச் ஜாதகன் செய்து அதில் மேன்மையடைவான். இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு நல்ல தொழில் அல்லது நல்ல வேலை அமையும். கை நிறையச் சம்பாதிப்பான். நற்பெயரையும், செல்வாக்கையும் உடையவனாக இருப்பான். தொழிலில் மேன்மை அடைவான். அதிகாரமும், பதவிகளும் தேடிவரும். அரசியல் செல்வாக்கு அல்லது அரசாங்க செல்வாக்கு இருக்கும். சிலர் தலைமைப் பதவிவரை உயர்வார்கள். நிலபுலன்கள், பெரிய வீடு, வண்டி, வாகன வசதிகளுடனான வாழ்க்கை ஏற்படும்.
11. லக்கினாதிபதி பதினொன்றாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்: இந்த அமைப்பை சுபகிரகம் பார்த்தால், ஜாதகன் லாபகரமான தொழிலைச் செய்வான். நற்பெயரும், செல்வாக்கும் தேடிவரும். மூத்த சகோதர, சகோதரிகளின் ஆதரவு இருக்கும். இந்த அமைப்பை சுபக்கிரகங்கள் பார்த்தாலும், அல்லது இந்த பதினொன்றாம் இடத்து அதிபதி உச்சம் அல்லது ஆட்சி பெற்று இருந்தாலும், ஜாதகனுக்கு நீண்ட ஆயுள். ஜாதகனுக்கு, அவனுடைய 2ஆம் வீட்டினால் ஏற்படும் பயன்களுடன் இந்த அமைப்பும் சேர்ந்து மேலும் பலவிதமான நன்மைகளைச் செய்யும் Gains; Gains: Gains - அவ்வளவுதான். ஜாதகனுக்குப் பணக்கஷ்டமே இல்லாத வாழ்க்கை அமையும். இந்த அமைப்பைப் பாபக்கிரகம் பார்த்தால், ஜாதகனுக்கு மேற்கூறிய நன்மைகள் இருக்காது. ஜாதகனுக்குப் பலவிதமான கஷ்டங்கள், நஷ்டங்கள் உண்டாகும்
12. லக்கினாதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்: எவ்வளவு பணம் இருந்தாலும், அல்லது வந்தாலும் அது கரைந்து கொண்டே இருக்கும். எட்டாம் வீட்டினால் ஏற்படும் கஷ்டங்களுடன், இந்த அமைப்பின் கஷ்டங்களும் சேர்ந்து கொண்டு படுத்தி எடுக்கும். வியாபாரம் செய்தால் லாபமே இருக்காது. நஷ்டம்தான் ஏற்படும். வாழ்க்கையில் நிறையப் பொருள் இழப்புக்களைச் சந்திக்க நேரிடும். இந்த அமைப்பே சரியில்லாதது. அதிலும் இந்த அமைப்பைத் தீய கிரகங்கள் பார்த்தால், ஜாதகன் வேளா வேளைக்குச் சரிவர போஜனம் செய்யாதவனாகவும், நித்திரை இல்லாதவனாகவும், மன அமைதி இல்லாதவனாகவும் இருப்பான். அலைச்சல் இருக்கும். குடும்பத்தை அடிக்கடி இடம் மாற்றம் அல்லது ஊர் மாற்றம் செய்ய நேரிடும். திறமையற்றவன், சோம்பேறி என்று அவப்பெயர் கிடைக்கும் வம்புகளும், வழக்குகளும் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும் சிலர் பொது சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மன நிறைவு, மன அமைதி பெறுவார்கள்

------------

குருசந்திர யோகம் என்றால் என்ன?

குருவும் சந்திரனும் ஒன்றாக இருந்தால் அது குருசந்திர யோகம் என்று கூறப்படும். குருவும் சந்திரனும் எந்த வீட்டில் (மேஷம் முதல் மீனம் வரை) இருந்தாலும் அது குருசந்திர யோகமாகவே கருதப்படும்.
இந்த யோகம் உடையவர்கள் மிகவும் சிரத்தையுடன், தீர்க்கமான சிந்தனை, எதிலும் நேர்வழியை கடைபிடிப்பது, நீண்ட ஆயுள், சத்தியம் தவறாமை, மனசாட்சிக்கு கட்டுப்படுவது போன்ற குணங்கள் உடையவர்களாக இருப்பர். மற்றவர்களைக் காட்டிலும் இவர்கள் தாய்ப்பாசம் அதிகம் உடையவர்கள்.சந்திரன் ஆட்சி பெறுவதாலும், குரு உச்சம் பெறுவதாலும் கடகத்தில் குருசந்திர யோகம் அமையப் பெற்றவர்கள் மிகப் பெரிய ராஜயோகம் உடையவர்களாகவும், நான்கு வேதங்களையும், 64 கலைகளையும் கற்றறிந்தவர்களாகவும், மற்றவர்களுக்கு போதிக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அதே குருசந்திர யோகம் மீனத்தில் இருந்தால் சிறப்பான பலன்கள் கிட்டும். ரிஷபத்தில் குருசந்திர யோகம் இருந்தால் நாடாளும் யோகம் கிடைக்கும்.பொதுவாக குருசந்திர யோகம் பெற்றவர்கள் பலர் மதிக்கக் கூடிய பதவியில் அமர்வார்கள். எந்தத் துறையில் இருந்தாலும் அத்துறையில் சிறந்து விளங்குவர்.சந்திரன் மனோகாரகன். அவர்தான் உடலுக்கு உரியவர். இதன் காரணமாக சந்திரனுடன் குரு சேரும் யோகம் பெற்றவர்களின் மனது, உடலும் சுத்தமானதாக இருக்கும். எனவே மனதாலும், உடலாலும் (தனது செய்கையால்) யாருக்கும் அவர்கள் தீங்கு செய்ய மாட்டார்கள். இவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையும், தேக பலமும் கிடைக்கும்.
மனைவி, குழந்தைகள் மீது அதிக பிரியம் உள்ளவர்களாகத் திகழ்வர். மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பர்.
ஆனால் குருசந்திர யோகத்தால் சில பிரச்சனைகளும் ஏற்படும். உதாரணமாக ஒரு சில விடயங்களில் மற்றவர்களுடன் ஒத்துப்போக மாட்டார்கள். தாங்கள் பிடித்த முயலுக்கு 3 கால்கள் என்பது போல் இருப்பர்.
விருச்சிகத்தில் குருசந்திர யோகம் காணப்பட்டால் தன்னைப் பற்றி எப்போதுமே ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்து கொண்டே இருக்கும். நிறைய முயற்சிகள் செய்தாலும் அதற்கு உண்டான பலன் கிடைக்கவில்லையே என்ற எண்ணம் தோன்றும். தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே என்றும் புலம்புவர்.
சரியாகக் கூறவேண்டுமென்றால் மேம்பட்ட நிலைக்கும், தாழ்வு மனைப்பான்மைக்கும் இடையே சிக்கித் தவிப்பர்.
இதுமட்டுமின்றி, குருவும், சந்திரனும் எந்தப் பாகையில் இணைகின்றது. எவ்வளவு பாகை (டிகிரி) வித்தியாசப்படுகிறது என்பதைப் பொறுத்தும் யோகப் பலன்கள் மாறுபடும். எனவே, குரு-சந்திரன் சேர்ந்துவிட்டாலே அது ராஜயோகம் என்று கூறிவிட முடியாது.




கால சர்ப தோஷத்திற்கு பரிகாரம் எ‌ன்ன?

கால சர்ப தோஷத்திற்கு என்று குறிப்பிடும்படி எதுவும் கிடையாது. கால பைரவரை வழிபட்டாலே போதும். (நாயை வளர்த்தாலே போதும். கால பைரவர் வாகனம்). உலகிலேயே சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஒரு சன்னதி இருக்கிற
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum