தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எட்டுக் கரங்களாலும் அருள்வாரி வழங்கும் அன்னை

Go down

எட்டுக் கரங்களாலும் அருள்வாரி வழங்கும் அன்னை Empty எட்டுக் கரங்களாலும் அருள்வாரி வழங்கும் அன்னை

Post  ishwarya Thu May 23, 2013 6:11 pm

சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் அம்மன்குடி

அம்மன் குடிகொண்ட கோயில் என்பதால் அம்மன்குடி ஆயிற்று. இங்குறையும் சிவலிங்கம், தேவி துர்க்கா பரமேஸ்வரியால் பூஜிக்கப்பட்ட புராதன லிங்கம் ஆகும். இவரே கைலாசநாதர். இங்குள்ள புனித தீர்த்தம் பாவவிமோசன தீர்த்தம். இங்கு எழுந்தருளியிருக்கும் அன்னை துர்க்கா பரமேஸ்வரியே மகிஷாசுரமர்த்தினி ஆவாள். எட்டுக் கரங்களில் வில், அம்பு, கத்தி, கேடயம், மகிஷாசுரன் தலை, சங்கு, சக்கரம், அக்னி என ஆயுதங்களை தாங்கி, முகத்தில் சாந்தம் நிறைந்த புன்னகையுடன், சிம்ம வாகனத்தில் சம்ஹார மூர்த்தியாய் அருள்பரிபாலிக்கின்றாள். ஒவ்வொரு பக்தரையும் காக்கின்றாள். அவரது எதிரிகளை நண்பர்களாக மாற்றுகின்றாள் அல்லது அழிக்கின்றாள். கொங்கணசித்தர்,

‘‘அட்ட புயகரத்தொடு அன்னை தங்
கோலங் கண்டு இன்புற்றேன் -
நாராயண
புய நாயகி தமை துர்காஷ்டமி
தொழுவார் வினையாவுந் தொலை
யுந்திண்ணமே
பூர்வந் நோக்குமன்னை துர்க்காபர
மேச்சுவரி
செல்மொடு தாம்பத்யயைஸ்வர்
யமு
மீவாளே யல்லால் பிணி யோடுமே”

-எனப் பாடி குதூகலிக்கின்றார். ஒரு சிவன் கோயிலில் துர்க்கைக்கு கிழக்கு நோக்கிய சந்நதி அமைவது மிகவும் சிறப்புடையது ஆகும். அந்த வகையில் இந்த அம்மன்குடி துர்க்கை கிழக்கு நோக்கி அருள்பரிபாலிப்பது மிகவும் சிறப்புடையது. துர்க்காஷ்டமி அன்று அனைத்து வானுறை தேவர்களும் இங்கு வந்து தொழுவர். அன்று அன்னை துர்க்கையை இங்கு வந்து ஆராதிப்பார்க்கு எல்லா வினையும் அகலும், செல்வம் பெருகும், நோய் அகலும் எனப் பாடி ஆனந்தமடைகின்றார் சித்தர். இங்குள்ள விநாயகர் சிற்பம் தெய்வீக சிறப்புடையது.

இவரை கொங்கணர் ‘தபசு மரகத விநாயகர்’ எனப் போற்றுகின்றார். ஆம், கையில் தபசு மாலை ஏந்தி, நாகாபரணத்தை வயிற்றில் தாங்கி வழவழப்பான சாளக்கிராம சிற்பத்தால் ஆனவர். அதுமட்டும் அல்ல. சூரிய ஒளி விநாயகரின் சிற்பத்தில் காலையில் விழுகையில் பச்சை வர்ணமாகவும், மதியம் நீல வர்ணமாகவும், மீண்டும் மாலை வேளையில் பச்சை வர்ணமாகவும் நிற மாற்றம் ஏற்படும். இந்த கணபதியை அனைத்து சித்தர் புருஷர்களும் தொழுது இன்புற்றனர் என்கிறார் அகத்தியர்.

‘‘யாமறிந்த சித்தரெல்லாம் கேரளாந்தக
சதுர்வேத மங்களங்குடி நின்ற
தனித் துதிக்கையானை - சாளக்
கிராம மேனியனை சிசுவடிவான
அருணனோடு ஆடிப்பாடி தொழ
கண்டோமே”

எனப் பேசுகின்றார். நாக தோஷம் கொண்ட மாந்தர் தம் தோஷம் நீக்க, பூமியில் பற்பல க்ஷேத்திரங்கள் உண்டு. ஆனால், தேவர்களுக்கு நாகதோஷம் நீங்க வேண்டு மாயின் அவர்கள் தொழநிற்கும் க்ஷேத்திரம் இந்த சாளக்கிராம விநாயக க்ஷேத்திரம். இவரின் துதிக்கை, தம் உடல் மீதே படாத வண்ணம் இருப்பது சகல க்ஷேமங்களையும் தரவல்லது, ஞானத்தை நம்முள் தோய வைப்பதும் ஆகும்.

இங்குள்ள அருணன் என்னும் சூரியபகவான் குழந்தை வடிவாய், தண்டை ஆபரணத்தை அணிந்து அருள்பரிபாலிக்கின்றார். சூரியதசை நடக்கும் ஜாதகக்காரர் எவரும் விரத கிரமங்களை பின்பற்றி இவரைத் தொழு தால் பெரிய மேன்மைகளை, பதவிகளை அடையலாம். இந்தக் கோயில் சனி பகவானையும் பைரவப் பெருமானையும் ஸ்தோத்திரம் செய்வோருக்கு பெரும் வியாதிகள் அண்டாது, வழக்குகளிலிருந்து நிவாரணம் கிட்டும் என்கின்றார் பதஞ்சலி முனிவர்.

‘‘நாராயண புறந்நிற்குந் துர்க்காபரமேச்
சுவரியை கயிலாயநாதருடன் ஏத்துவார்
தம் பிறவியஞ் சிறை யகலுமே - ஆங்கு
பாவநாசனந் நீராடி மந்தரொடு பயிர
வரை வழிபட்டோர் வாழ்வு வாடாது
தளிருஞ் சத்தியமே”

-என்பதிலிருந்து நாராயணபுரம் என்ற பெயர் இந்த அம்மன்குடிக்கு முந்தைய பெயர் என அறியலாம். பாவநாசனம் என்ற பொய்கையில் நீராடி, மந்தர் என்ற சனி பகவானையும், பைரவப் பெருமானையும் பூஜிப்போருக்கு வாட்டமிலாப் பெருவாழ்வு சித்திக்குமே எனப் பேசுகிறார் சித்தர். இங்குள்ள சரஸ்வதி தேவிக்கு யோக சரஸ்வதி என்று பெயர். கம்பர், ஒட்டக்கூத்தர் போன்ற பெருங்கவிகள் போற்றிய மூர்த்தி ஆவாள். கல்வி மேன்மை, ஒருமுகமான மனது, நல்ல நினைவாற்றல் போன்றவற்றை தரும் தெய்வம். வாக்குவன்மை தர வல்லவள்.

பெரிய வக்கீலாக, பேச்சாளராக வர விரும்புபவர் இந்த யோக சரஸ்வதியை தொழ, பெரும் ஜெயம் கூடும். ஒவ்வொரு கல்வி ஆண்டு தொடக்கத்தின்போதும் இங்கு வந்து குழந்தைகள் ஆராதனை செய்து, பின் தன் கல்வி பணியை மேற்கொண்டால் தோல்வி என்பது அவர்களுக்கு எப்போதும் இல்லை. ஆசிரியர்களும் இவ்வண்ணமே செய்யின், பெருங்கீர்த்தி, பிணியின்மை, க்ஷேமங்கிட்டும் என்கின்றனர் சித்தர் பெருமக்கள். நக்கீரர் கூறுவது:

‘‘ஆற்றுப்படை கட்டுமுன் அன்னை
யோகவாணியை தொழுதனம் -
அருமுகனே அமர்ந்தப்பா கேட்டரு
ளினன்”

தன்னுடைய திருமுருகாற்றுப்படை பாக்களைப் பாடுகையில், பேயால் தொல்லை, பில்லி சூன்யத்தால் தொல்லை, உடல்நலிவு என நக்கீரருக்கு பலவித உபாதைகள். இந்த யோக மாதா சரஸ்வதியை தொழுதபின், இடைஞ்சல் நீங்கிற்று. திருமுருகப் பெருமானே வந்திருந்து இந்த முருகாற்றுப்படையை கேட்டு இன்புற்றனன் என்கின்றார் நக்கீரர். மணக்கால் சித்தர், தமது சிவபக்தியை ஒ ருமைப்படுத்திய அன்னை என இந்த வீணையில்லா வாணியைப் போற்றுகின்றார். இங்குள்ள துர்க்கை மாதாவுக்கு நூறு கண்கள் உண்டு என்கின்றார் மணக்கால் சித்தர்.

‘‘கண்டோம் கண்கள் நூறு
அன்னை துர்க்கை கொண்டிருக்கக்
கண்டோம்: தனமொடு தான்யமும்
பெருநீருந் தரவல்லாளிவள் கண்டீர்
கண்டோம் யாமே”

-என்ற பாடல் வரியிலிருந்து அன்னை துர்க்கை நூறு கண்களைக் கொண்டிருப்பாள் என்பது புரிகிறது. தனம், தான்யமோடு, மழை தரும் தெய்வம் இவள். ‘நீரின்றி யமையாது உலகு’ என்ற மொழிக்கு வித்தாக மழை தரும் துர்க்கை இவரே என்று சித்தர் பேசுவது உண்மையிலும் உண்மை. அமாவாசை, அஷ்டமி திதியில் தொழுவர் செல்வந்தராய் வாழ்வர். பவுர்ணமியில் இங்கு பூஜிப்பவருக்கு தக்க பிராயத்தில் திருமணம் தடையின்றி சிறப்புடன் அமையும். வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் 26 வாரங்கள் நம்பிக்கையுடன் பூஜித்து வருபவர்கள் வெளிநாட்டில் நல்ல வேலை பெற்று யோகத்துடன் வாழ்வர், உறவு பலமாகும் என்கின்றார் அகஸ்தியர்:

‘‘நாராயணபுர துர்க்கை தமை
எட்டுந்தியுடனே மதியிலாத்தித்
தொழுதக்கால் பெருஞ்செல்வம்
சேரப்பெருவாரே - முழுமதிதொழ
நிற்பர்
மணந் தடையின்றி சேருமே -
ஓரையுந்த நாளுஞ் சுங்கனாக
பஞ்சபஞ்சமேக நாட் தொழுவார்
பலதேசமோடி பெருந்தனம் குவித்து
உறவோடு இசைந்து வாழ்வாரே”

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த அம்மன்குடி இத்தனை சிறப்புகள் கொண்டு, அமைதியாய், கும்பகோணம் அருகில் இருக்கிறது. நாம் உடனே இதனை நினைவில் வைத்து தக்க காலம் வருகையில் சென்று தொழுது பிறவிப் பயனை அடையலாமே!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum