தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாசு கட்டுப்பாட்டு வாரிய பணியாளர்களுக்கு வீட்டு கடன் வசதி: ஜெயலலிதா அறிவிப்பு

Go down

மாசு கட்டுப்பாட்டு வாரிய பணியாளர்களுக்கு வீட்டு கடன் வசதி: ஜெயலலிதா அறிவிப்பு Empty மாசு கட்டுப்பாட்டு வாரிய பணியாளர்களுக்கு வீட்டு கடன் வசதி: ஜெயலலிதா அறிவிப்பு

Post  ishwarya Thu May 02, 2013 4:21 pm

முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

சமுதாயம் நலமாக அமையவும், பிணியற்ற மக்கள் பெருகவும் நலமுள்ள மனிதனும், வளமுள்ள நாடும் உருவாகவும் இன்றியமையாததாக விளங்குவது சுற்றுச்சூழல் என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு சுற்றுச் சூழல் துறை மூலமாகவும், தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் மூலமாகவும் முனைப்பான திட்டங்களை எனது தலைமையிலான அரசு நிறைவேற்றி வருகிறது.

ஏரிகளை மறு சீரமைப்பு செய்தல், சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் சிறப்புடன் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு விருதுகள் வழங்குதல் பிளாஸ்டிக் கழிவுகளை கணிசமான அளவு குறைக்கும் வகையில், பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு தார் சாலைகள் அமைத்தல், பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தினை குறைத்து அவற்றை மறுசுழற்சி செய்ய பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு, ஊரகப் பகுதிகளில் 1,255 கிலோ மீட்டர் நீளமுள்ள தார்ச் சாலைப் பணிகளை மேற்கொள்வதற்காக, 2011-12 மற்றும் 2012-13ஆம் ஆண்டுகளில் 153 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 1,002 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைப் பணிகள் முடிவடைந்துவிட்டன. மீதமுள்ள சாலைப் பணிகள் விரைவில் முடிக்கப்பட உள்ளன.

இந்த ஆண்டும் 1,000 கிலோ மீட்டர் நீளமுள்ள தார்ச் சாலைகள் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நகரப் பகுதிகளை எடுத்துக் கொண்டால் 2011-ம் ஆண்டு 566 கிலோ மீட்டர் நீளமுள்ள பிளாஸ்டிக் தார்ச் சாலைகள் அமைக்க 153 கோடியே 61 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2012-2013 ஆம் ஆண்டில் 499 கிலோ மீட்டர் நீளமுள்ள பிளாஸ்டிக் தார்ச் சாலைகள் அமைக்க 219.58 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்தப் பணிகள் எல்லாம் தற்போது நடைபெற்று வருகின்றன.

2013-2014-ம் ஆண்டில் 100 கிலோ மீட்டர் நீளத்திற்கு பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி சாலைகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மேம்பாட்டு நிதியின் கீழ் 2011-12-ம் ஆண்டில் 50 கோடி ரூபாய் செலவில் பிளாஸ்டிக் கழிவுகளைப் பயன்படுத்தி 446 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் மறு சீரமைக்கப்பட்டன.

2012-13-ம் ஆண்டில் 84 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் 577.70 கிலோ மீட்டர் நீளத்திற்கு பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி சாலைகளை மறு சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பிளாஸ்டிக் சாலைகளின் தரம் சிறந்ததாகவும், மேம்பட்டதாகவும் உள்ளதால் 2013-14ஆம் ஆண்டிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிதியின் கீழ் 50 கோடி ரூபாய் செலவில் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி சாலைகள் மறு சீரமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் முறையாக மறு பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படுவதுடன் சாலைகளின் தரமும் உயர்கிறது. மேலும், சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மேம்பாட்டு நிதியின் கீழ் 50 கோடி ரூபாய் செலவில் நுண்ணுயிரி மூலம் ஏரிகளில் உள்ள நீரினைத் தூய்மையாக்குதல் திட்டம், சோலை காடுகளில் உள்ள தாவரங்களை மறு உற்பத்தி செய்தல் திட்டம், உதகை ஏரிப் பாதுகாப்பு நிதி மற்றும் மன்னார் வளைகுடா உயிர்கோள் காப்பக அறக்கட்டளையின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

சுற்றுச் சூழல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 32 மாவட்ட அலுவலகங்கள் மற்றும் 15 மாவட்ட ஆய்வகங்களுடன் தற்போது செயல்பட்டு வருகிறது.

இந்த வாரியத்திற்கான தலைமை அலுவலகம் மற்றும் அரும்பாக்கம், அம்பத்தூர், வேலூர், ஓசூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் மறைமலை நகர் ஆகிய 9 மாவட்ட அலுவலகங்கள் சொந்த கட்டடங்களில் இயங்கி வருகின்றன.

நடப்பாண்டில், சிவகங்கை, திண்டுக்கல், நாமக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் செயல்படும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் மாவட்ட அலுவலகங்களுக்கு சொந்த அலுவலக கட்டடங்கள் 12 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வரும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வீட்டுக் கடன் வசதி இதுவரை வழங்கப்படவில்லை என்பது எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய பணியாளர்களுக்கு 2013-14 ஆம் நிதியாண்டு முதல் வீட்டுக் கடன் வசதி ஏனைய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் சுமார் 700 வாரிய பணியாளர்கள் பயன் அடைவார்கள்.

இந்த அறிவிப்புகள் மாசுத் தொல்லையை கட்டுப்படுத்தவும், மாசுக் கட்டுப்பாடு வாரியப் பணியாளர்களின் வீட்டு வசதி தேவையை பூர்த்தி செய்யவும் வழி வகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  மாசு கட்டுப்பாட்டு வாரிய பணியாளர்களுக்கு வீட்டு கடன் வசதி: ஜெயலலிதா அறிவிப்பு
» வீட்டு வசதி வாரிய வீடு பெற்றவர்கள் இடித்து புதிதாக கட்ட தடை இல்லை
» வீட்டு வசதி வாரிய வீடு பெற்றவர்கள் இடித்து புதிதாக கட்ட தடை இல்லை
» காவல்துறை பணியாளர்களுக்கு நிகராக வனப்பணியாளர்களுக்கு சீருடை-இடர்படி: ஜெயலலிதா அறிவிப்பு
» காவல்துறை பணியாளர்களுக்கு நிகராக வனப்பணியாளர்களுக்கு சீருடை-இடர்படி: ஜெயலலிதா அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum