தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எதிரிகளே இல்லாமல் செய்வார் வீரபத்ரர்

Go down

எதிரிகளே இல்லாமல் செய்வார் வீரபத்ரர் Empty எதிரிகளே இல்லாமல் செய்வார் வீரபத்ரர்

Post  ishwarya Sat Feb 16, 2013 5:12 pm

வீரபத்ர சுவாமி திருக்கோயிலை அபூர்வமாக சில இடங்களில் மட்டுமே தரிசிக்க முடியும். அப்படிப்பட்ட ஓர் ஆலயம் திருச்சி திருவானைக்காவலில் உள்ளது. ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலய முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம். அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாயிலில் இரு துவார பாலகர்கள் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறார்கள். கருவறை முகப்பில் இடதுபுறம் விநாயகரும் வலதுபுறம் மு ருகனும் அருள்பாலிக்கின்றனர். கருவறையில் இறைவன் வீரபத்ர சுவாமி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இறைவனின் தேவகோட்டத்தின் தென்புறம் தட்சிணாமூர்த்தியும் மேற்கில் லிங்கோத்பவரும் வடக்கில் விஷ்ணு துர்க்கையும் அருள்கின்றனர்.

யார் இந்த வீரபத்ரர்?

பிரம்மதேவன் தன் படைப்புத் தொழிலைப் பெருக்கிப் பராமரிக்க பத்து புதல்வர்களைப் பெற்றான். அவர்களுள் ஒருவனே தட்சன். அவன் சிவபெருமா னைக் குறித்து ஆயிரம் ஆண்டுகள் கடுமையாக தவம் புரிந்து ஏராளமான வரங்களைப் பெற்றான். அந்த வரங்களுள் ஒன்று உமா தேவியைத் தனது மகளாக அடைந்து அவளை சிவபெருமானுக்கே திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது. அந்த வரத்தின்படி இமயமலைச் சாரலில் காலிந்தி நதியில் ஒரு வலம்புரிச் சங்கைக் கண்டான். அந்த சங்கினைக் கையில் எடுத்த மறுகணம் சங்கு வடிவம் நீங்கி அழகிய பெண் குழந்தையானாள் உமாதேவி.

அவளை எடுத்து வந்து தாட்சாயணி என்ற பெயர் சூட்டி அன்புடன் வளர்த்து வந்தான் தட்சன். தனது சிறு வயது முதலேயே சிவபெரு மானை கணவராக அடையும் நோக்குடன் ஊருக்கு வெளியே ஒரு தவ மாடத்தை அமைத்து சிவபெருமானை குறித்து கடுமையாக தவம் இருக்கத் தொடங்கினாள் தாட்சாயணி. அவளது தவத்திற்கு மெச்சிய சிவபெருமான் கூடிய விரைவில் அவளை மணம் புரிவதாய்க் கூறி மறைந்தார். அவர் கூறியது போல தட்சன் கன்னிகாதான மந்திரங்களை கூறி அம்பிகையின் கரத்தை சிவபெருமான் கரத்தில் வைத்து தத்தம் செய்தான். அடுத்த கணம் சிவபெருமான் திடீரென மறைந்தார். அதனால் கடும் கோபம் கொண்ட தட்சன் சிவனை கொடிய வார்த்தைகளால் தூற்றினான்.

பின்னர் உமா தேவி முன்னிலும் கடுமையான தவம் புரிந்ததால் மனம் இளகிய சிவபெருமான் அவள் முன் தோன்றி அவளை தனது பக்கத்தில் அமர்த்திக் கொண்டு மறைந்தார். அதனைக் கண்ட சேடிப்பெண்கள் நடந்தவற்றை தட்சனிடம் சென்று உரைத்தனர். தந்தையான தனக்குத் தெரியாமல் தனது மகளை களவு கொண்ட வன் என்றும் தன் குலத்திற்கே இழிவைத் தேடியவன் என்றும் சிவபெருமானை பலவாறாக இகழ்ந்தான் தட்சன். பின் ஒரு சமயம், அவன் தனது மகளைக் காண கயிலையங்கிரிக்கு சென்ற போது வாயிலில் காவல் புரிந்து கொண்டிருந்த பூதகணங்கள் சிவபெரு மானை இகழ்ந்த காரணத்தால் அவனை உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர். அதனால் கோபம் கொண்ட தட்சன் தன் இடத்திற்குத் திரும்பினான்.

பின்னாளில் கங்கை ஆற்றின் கரையில் கனகலகம் எனும் இடத்தில் வேள்விச்சாலை அமைத்து பெரிய யாகம் ஒன்றை நடத்தத் தீர்மானித்த தட்சன் சனகாதியர் நால்வர், சப்த ரிஷிகள் மற்றும் கின்னர, கிம்புருட, அசுரர் ஆகியோரை அழைத்து விட்டு சிவபெருமானை மட்டும் புறக்கணித்தான். தந்தை தட்சன் செய்யும் யாகத்தினை நாரதமுனி மூலம் கேள்வியுற்ற தாட்சாயணி அவனது தவறை எடுத்துக் கூறி திருத்தும் நோக்குடன் சிவபெருமானிடம் மன்றாடி அனுமதி பெற்றுக் கொண்டு வேள்விச் சாலையை அடைந்தாள். அவளைக் கண்டதும் கோபம் தலைக்கேற கொடிய வார்த்தைகளால் இகழ்ந் தான் தட்சன்.

அதனால் கோபம் அடைந்த தேவி கயிலைக்குத் திரும்பினாள். தட்சனுக்கு அறிவு புகட்டும் வகையில் அந்த வேள்வியை அழிக்கும்படி சிவபெருமா னிடம் வேண்டினாள். நீண்டநேர சிந்தனைக்குப் பின் தட்சனது யாகத்தை அழிக்க ஒப்புக் கொண்டார் இறைவன். அவரது கண்டத்திலிருந்த கருத்த விஷத்தின் ஒரு கூறு அவரது நெற்றிக் கண் வழியாக குமாரனாக வெளிப்பட்டது. அந்தக் குமாரன் ஆயிரம் முகங் களும் இரண்டாயிரம் கரங்களும் அவற்றிற்கு உரிய ஆயுதங்களும் உடையவனாக இருந்தான். மணி மாலைகள், ஆமை ஓட்டு மாலைகள், பன்றிக் கொம்பு மாலைகள், கபால மாலைகள் ஆகியவற்றை அணிந்திருந்தான். சிங்க முகங்களை கோர்த்த பாம்பாலான கச்சம் அணிந்திருந்தான். அவனே வீரபத்ரன்.

சிவபெருமானின் மகனான வீரபத்ரனும், பராசக்தியால் உருவாக்கப்பட்ட பத்ரகாளியும் தட்சனின் யாகத்தை அழித்த கதை இலக்கியங்களில், புராணங் களில் இடம் பெற்றுள்ளன. பல தெய்வங்கள் வீராவேசம் கொண்ட போர்த் தெய்வங்களாகவும் வெற்றிக் கடவுள்களாகவும் இருப்பினும் இவருக்கு மட்டுமே வெற்றிலை படல் உற் சவமும் வெற்றிலை படலும் உரியனவாக உள்ளன. இவரது ஆலயங்கள் பெரும்பாலும் வடக்கு நோக்கியே அமைந்துள்ளன. மேற்கரங்களில் வில்லும், அம்பும் ஏந்தி, கீழ் வலது கரத்தில் வாளும், இடது கரத்தில் பெரிய கேடயத்தையும் கொண்டு காட்சி தரும் இவரின் சிரசின் முன் உச்சியில் சிவலிங்கம் திகழ்கிறது.

ஐப்பசி மாதம் வளர்பிறை அஷ்டமியில் நோற்கப்படும் விரதம் மகாஷ்டமி விரதம். இது வீரபத்ரரையும் பத்ரகாளியையும் குறித்து நோற்கப்படும் விர தம். இந்த நாளில் தும்பை, நந்தியாவட்டை முதலான வெண்மையான மலர்களாலும் வெண்பட்டாலும் வீரபத்ரரை அலங்கரித்து வழிபடுகின்றனர். இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் வீரபத்ரரை தும்பைப் பூ மாலை சார்த்தி வழிபட்டால் எதிரிகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு பெறலாம். திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஆலயத்தின் மேற்கு ராஜ கோபுரத்திற்கு அருகே இந்த வீரபத்ரர் ஆலயம் உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum