தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கடலளவு கஷ்டமும் காணாமல் போகும்

Go down

கடலளவு கஷ்டமும் காணாமல் போகும் Empty கடலளவு கஷ்டமும் காணாமல் போகும்

Post  ishwarya Sat Feb 16, 2013 12:34 pm

ஒருசமயம் தூம்ரலோசனன் எனும் அரக்கன் நீண்ட தவமிருந்து பல அரிய வரங்களை சிவ பெருமானிடமிருந்து பெற்றான். அந்த கர்வத்தினால் மூவுலக ஜீவராசிகளையும் வதைக்கவும், துன்புறுத்தவும் தொடங்கினான். பொறுமை இழந்த ஜீவராசிகள் சிவத்தை துதித்து காத்தருள வேண்டினர்.

ஈசன் உமையை நோக்கினார். பார்வையின் நோக்கத்தை அம்பிகை உணர்ந்து துர்க்கையாய் அவதரித்தாள். அசுரனான தூம்ரலோசனனை கடுமையாகத் தாக்கினாள். அரிய வரங்கள் பெற்ற அசுரன், அன்னையின் தாக்குதலை எளிதாக சமாளித்தான். அன்னை கோபமுற்றாள். கண்கள் சிவந்தது, மேனி சிலிர்த்தது. அண்ட சராசரங்களும் நடுங்க அன்னையின் உடலிலிருந்து பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகிய ஏழு சப்த கன்னிகள் தோன்றினர். பல்வேறு ஆயுதங்களை கையிலேந்தி அசுரனையும், அசுரப் படைகளையும் கடுமையாக தாக்கத் தொடங்கினர். அசுரப் படைகள் பின் வாங்கின. தூம்ரலோசனன் அங்கிருந்த ரதம் ஒன்றில் ஏறி தப்பி ஓடினான். சப்த கன்னிகளும் அசுரனை துரத்தினர்.

அடர்ந்த வனத்திற்குள் ஓடிய அசுரன் காத்யாயன முனிவரின் ஆசிரமத்திற்குள் ஒளிந்து கொண்டான். தொடர்ந்து வந்த சப்த கன்னியர் அவனை மிகுந்த கோபத்துடன் தேடினர். ஆசிரமத்தின் முன்பு நிஷ்டையில் இருந்த காத்யாயன முனிவரைக் கண்டனர். அசுரன்தான் முனிவர் வேடத்தில் அமர்ந்திருப்பதாக தவறுதலாக எண்ணினர். போர்க் கோபத்தோடு இருந்த சப்த கன்னிகள் முனிவரை வதைத்தனர். அந்தக் கணமே சப்த கன்னியர்களை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. ஆசிரமத்தில் ஒளிந்திருந்த அசுரனும் வதம் செய்யப்பட்டான். ஆனால், பல்வேறு ஆலயங்களில் வழிபாடுகள் நடத்தியும் சப்த கன்னியருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்க பெறவில்லை.

இதையடுத்து சப்த கன்னிகள் காவேரி ஆற்றின் தென்கரையிலுள்ள கடம்ப வனத்தில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருந்த கடம்பவனேஸ்வரரை வழிபட்டனர். நாகலிங்க மலர் கொண்டு அர்ச்சித்தனர். பலமுறை வலம் வந்து பூஜித்தனர். மனமிரங்கிய ஈசன் சப்த கன்னியருக்கு காட்சியளித்து அவர்களின் தோஷங்களை நீக்கினான். இன்றளவும் குளித்தலை கடம்பவனேஸ்வரர் ஆலயத்தின் கருவறையில் சப்த கன்னிகள், சிவலிங்கத்தை பூஜிக்கும் காட்சியினை நாம் காண முடியும். தோஷ நிவர்த்தித் தலமாக கருதப்படும் இத்தலத்தில் இறைவன் கடம்பவனேஸ்வரர், கடம்பவனநாதர், சுந்தரேஸ்வரர், சௌந்தரேஸ்வரர் என்று பல திருப்பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

கருவறையின் அருகில் சென்று கடம்பவனேஸ்வரரை கையெடுத்து தொழும்போதே மனதை அமைதி ஆட்கொள்கிறது. கடலளவு கஷ்டம்தானென்றாலும் அதெல்லாமும் காணாமல் போக்கிவிடும் இந்த கடம்பவனேஸ்வரர் தரிசனம்.வடநாட்டில் காசியைப்போல தென்நாட்டில் வடக்கு நோக்கி உள்ள தலம் என்பதால் இவ்வாலயத்திற்கு தட்சிணகாசி என்ற பெயரும் உண்டு. தனிச் சந்நதியில் நின்ற திருக்கோலத்தில் கைகளில் தாமரை மொட்டுடன் அபயஹஸ்த முத்திரையுடன் எழில்மிகு புன்னகையை இதழ்களில் காட்டி முற்றில்லா முலையம்மை என்ற திருநாமத்தோடு அன்னை அருள்கிறாள். அன்னைக்கு பாலகுஜாம்பிகை, திருவேணி என்ற பெயர்களும் உண்டு. இத்தலத்து இறைவனை பிரம்மா, அகத்தியர் ஆகியோரும் வழிபட்டு பேறடைந்துள்ளனர்.

சோமுகன் எனும் அரக்கன் நான்கு வேதங்களையும் திருடிச் சென்று பாதாள லோகத்தில் மறைத்து வைத்தபோது திருமால் மச்ச அவதாரம் எடுத்து கடம்பவனேஸ்வரரின் ஆசி பெற்று பாதாள லோகம் சென்று அரக்கனை கொன்று வேதங்களை மீட்டு கடம்பவனநாதரின் சந்நதியில் சேர்ப்பித்ததாக புராணங்கள் கூறுகின்றன. எனவே இத்தலத்திற்கு வேதபுரி என்ற பெயரும் உண்டு.காலைக் கடம்பர், மத்தியான சொக்கர், அந்தி திருவேங்கிநாதர் எனும் கூற்றுப்படி, ஒரேநாளில் காலையில் கடம்பவனேஸ்வரரையும், மதியம் அய்யர்மலையிலுள்ள ரத்தினகிரீஸ்வரரையும், மாலையில் திருஈங்கோய்மலை மரகதாஜலேஸ்வரரையும் தரிசித்தால் 108 சிவாலயங்களை தரிசித்த பயன் நிச்சயம் உண்டு.

ஸ்தல தீர்த்தமாக காவிரியும், ஸ்தல விருட்சமாக கடம்ப மரமும் விளங்குகின்றன. ஆலய வளாகத்திற்குள் அமைந்துள்ள நாகலிங்கமரம் அனுதினமும் நாகலிங்கப் பூவை உதிர்த்து இறைவனை வழிபடுகிறது! உற்சவ மூர்த்திகளில் இரண்டு நடராஜ மூர்த்திகளும், இரண்டு சோமாஸ்கந்த மூர்த்திகளும் உள்ளனர். ஒரு நடராஜ மூர்த்தி முயலகனோடும், மற்றொருவர் முயலகன் இல்லாமலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆலய பிராகாரத்தில் ஜேஷ்டாதேவி, நால்வர், அறுபத்துமூவர், சேக்கிழார், விஸ்வநாதர், விநாயகர், சுப்ரமணியர், சோமாஸ்கந்தர், கஜலட்சுமி, அண்ணாமலையார் ஆகிய தெய்வங்களும் அருளுகின்றனர். கடம்பவனேஸ்வரர் குறித்து அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், ஐயடிகள் காடவக் கோன் நாயனார் ஆகியோர் பாடியுள்ளனர். திருச்சி-கரூர் சாலையில் 40 கி.மீ. தொலைவில் கடம்பவனேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. திருச்சி ஜங்ஷனிலிருந்து ரயில் வழியாகவும் குளித்தலைக்கு வரலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கடலளவு கஷ்டமும் காணாமல் போகும்
» ் கடலளவு கஷ்டமும் காணாமல் போகும்குளித்தலை ஒருசமயம் தூம்ரலோசனன் எனும் அரக்கன் நீண்ட தவமிருந்து பல அரிய வரங்களை சிவ பெருமானிடமிருந்து பெற்றான். அந்த கர்வத்தினால் மூவுலக ஜீவராசிகளையும் வதைக்கவும், துன்புறுத்தவும் தொடங்கினான். பொறுமை இழந்த ஜீவராசிகள் சிவத்த
» நான் காணாமல் போகும் கதை
» விதி போகும் வழியே மதி போகும்.
» கடுகளவு உழைத்தாலே கடலளவு பயன் பெறலாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum