தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில், காஞ்சிபுரம்,

Go down

அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில், காஞ்சிபுரம்,  Empty அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில், காஞ்சிபுரம்,

Post  ishwarya Fri Feb 15, 2013 5:16 pm



சித்ரகுப்தர் காயத்ரி

ஓம் தத்புருஷாய வித்மஹே
சித்ரகுப்தாய தீமஹி
தந்நோ: லோகப் பிரசோதயாத்


சித்ரகுப்த பூஜையை முறையாகச் செய்தால் உயர்நிலை அடையலாம் என்பது திண்ணம். கேது பகவானின் அதிதேவதை சித்ரகுப்தர். ஆகையால் சித்ரகுப்தரை வணங்குவதால் கேதுவினால் துன்பம் உண்டாகாது. வளமான வாழ்வு, மேன்மை, ஞானம், மோட்சம் அனைத்தும் கிட்டும்.

சித்ரகுப்தரைக் போற்றும் " ஓம் யமாய தர்மராஜாய ஸ்ரீசித்ரகுப்தாய வை நமஹ" மந்திரத்தையும் எழுதி, தங்கள் பெயர், முகவரி, அன்றைய தேதி மற்றும் முழு வரவு செலவு கணக்கை எழுதி, அதை மடித்து படத்தின்முன் வைத்து பூஜிப்பார்கள். அடுத்துவரும் ஆண்டில் எதிர்பார்க்கும் வரவு செலவையும் உத்தேசமாகக் குறித்து, அது நிறைவேற சித்ரகுப்தரின் ஆசியை வேண்டுவார்கள்.



சித்ரகுப்தருக்கு நேர்த்திகடனாக அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

முன்னொரு காலத்தில், சௌதாஸ் என்ற மன்னன் தற்போது சௌராஷ்டிரம் எனப்படும் பிரதேசத்தை ஆண்டு வந்தான். கொடுங்கோலனாகவும், அசுரர்களை விடவும் மோசமாக ஆட்சி செய்து மக்களைத் துன்புறுத்தி வந்தான். தனது ஆணையில்லாமல் ஒரு செயலும் நடக்கவிட மாட்டான். தன்னை ராஜாதி ராஜன், பேரரசன் எனக் கூறிக்கொண்டான். ஒரு நாள், காட்டில் அவன் வேட்டையாடச் சென்ற போது தன் பரிவாரங்களை விட்டு வெகு தூரம் வழிதவறிச் சென்றுவிட்டான். அலைந்து திரிந்த சமயத்தில் அவன் செவியில்,

ஓம் தத்புருஷாய வித்மஹே
சித்ரகுப்தாய தீமஹி
தந்நோ: லோகப் பிரசோதயாத்

என்று எவரோ சித்ரகுப்த கயாத்ரியை மந்திர உச்சாடனம் செய்யும் ஒலி விழுந்தது. சத்தம் வந்த திசை நோக்கிச் சென்றான். அங்கு சீடர்கள் புடைசூழ, தவசிகளும் முனிவர்களும் வேள்வி செய்வதைப் பார்த்து வெகுண்டான். என் ஆணையில்லாமல் இப்படியொரு யாகமா செய்கிறீர்கள்? நிறுத்தாவிட்டால், அனைவரையும் கொன்றுவிடுவேன் ! என்று கத்தினான்.

துறவிகள் அவனைச் சட்டை செய்யவில்லை. அதனால் மேலும் வெகுண்டு, வேள்வி நடத்தும் முதியவரை அணுகித் தன் உடைவாளால் அவரைக் கொல்ல வந்தான். அதைக் கண்ட ஒரு இளம் சீடன், அப்பனே ! நீ யார்? எதற்காக இடையூறு செய்கிறாய்? என்று வினவ, சௌதாஸ், நான் ராஜாதி ராஜன் சௌதாஸ். நீங்கள் எல்லாம் யார்? என்று கோபமாகக் கேட்டான்.

அந்தச் சீடனோ புன்முறுவல் பூத்து, சௌதாஸ் ! ராஜாதிராஜன் என்பவர் சித்ரகுப்தர் ஒருவர்தான் ! அந்தப் பட்டம் பெற வேறு எவருக்கும் தகுதியில்லை. நாங்கள் சித்ரகுப்த வம்சாவளியினரான காயஸ்தர்கள். எங்கள் குலதெய்வம் சித்ரகுப்தருக்கு பூஜை செய்கிறோம். தாங்களும் கலந்துகொண்டு புண்ணியம் பெறுங்கள். செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக இந்த பூஜை செய்து, நரகத்திலிருந்து விடுபட்டு சித்ரகுப்தரின் அருள்பெற முன் வாருங்கள் என்று பூஜையின் மகிமையை விளக்கினான். அதைச் செவிமடுத்த சௌதாஸ், தான் செய்த பாவச் செயல்களுக்கு வருந்தி மனம் மாறினான். வேள்வியில் கலந்துகொண்டவன், பின்னால் ஆண்டுதோறும் சித்ரகுப்த பூஜையை முறையாக நடத்தி ஆராதித்து வந்தான்.

அந்திமக் காலத்தில் உயிர்பிரிந்த அவனது ஆத்மாவை, யமதூதர்கள் யமலோகத்துக்கு இழுத்துச் சென்றார்கள். அங்கு சித்ரகுப்தர் யமனிடம், சௌதாஸின் கர்மவினைகளைத் தன் பதிவேட்டிலிருந்து படித்தார். பிரபு! இவன் செய்த பாவச் செயல்கள் எண்ணில் அடங்காது. அதர்மமே மேலோங்கி நிற்கிறது. நரகத்தில்தான் இவன் உழல வேண்டும். ஆனால், வாழ்வின் பின்னாளில் மனம் திருந்தி, நம் இருவரையும் முறையாக பூஜித்துள்ளான். அதனால் இவனுக்கு, சொர்க்கலோகத்துப் பலனை அனுபவிக்க அனுமதிக்கலாம். பிரபு ! என்று கூற, யமனும் தலையசைத்து சம்மதித்தான். சித்ரகுப்தரின் வாக்குக்கு மறுப்பு ஏது! சௌதாஸ் சொர்க்கலோகவாசியானான்.

பார்வதி பரமேஸ்வரர் அருளால் அவதரித்தவர். பிள்ளையில்லா குறை நீங்க, இந்திரன் - இந்திராணிக்கு தெய்வப் பசு காமதேனு மூலம் அவதரித்தவர் என்று இவரது பிறப்பு பற்றிச் சொல்வதுண்டு. யமலோகத்தில் நிலவிய நிர்வாகச் சீர்கேட்டைச் சரிசெய்ய, பிரம்மன் தன் மனதுள் ரகசியமாக உருவகப்படுத்திய உருவத்தை இருத்தி, 11,000 ஆண்டுகள் ஈசனை நோக்கித் தவமியற்றினார். முடிவில், தன் மனதில் இருந்தவரே தன் முன், கையில் எழுத்தாணி ஓலைச்சுவடியுடன், இடையில் தொங்கும் உடைவாளுடன் தெய்வீகக் களை சொட்ட தோன்ற, தவத்தின் பலனை உணர்ந்தவராக அகமகிழ்ந்தார். ரகசியமாக என் உடம்பிலிருந்து (காயம்) தோன்றியதால், சித்ரகுப்தர் என அழைக்கப்படுவாய். உனது சந்ததியினர் காயஸ்தா என அறியப்படுவர் என்று அருளினார் பிரம்மன். தமிழகத்தில் இவர்கள் கருணீகர் என அழைக்கப்படுகிறார்கள். சித்ரகுப்தர் இவர்களது முழுமுதற் கடவுளாக வணங்கப்படுகிறார்.

பின்னர் நான்முகனின் ஆணைப்படி சித்ரகுப்தர் காளிதேவியை உபாசித்து, அவளது கருணையால் எண், எழுத்து இரண்டிலும் புலமைபெற்ற உலகின் முதல் மாணாக்கராக ஆனார். பிறகு, அவந்திகாபுரி (உஜ்ஜயினி) சென்று மகா காலேஸ்வரரின் அருளால் கணக்கு வழக்குகளைப் பேரேட்டில் பதியும் திறமையைப் பெற்று, ஐப்பசி மாத யம துவிதியை நாளில் யமதர்மராஜனின் கணக்கராகப் பதவி ஏற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.

தமிழகத்தில் சித்ரகுப்தருக்கென ஒரு சில கோயில்களே உள்ளன. அதில் முதன்மையானது இக்கோயில்.

http://img1.dinamalar.com/kovilimages/news/TN_141457000000.jpg

உலக மக்களின் கர்மபலன்களை நியாயம் தவறாமல் நிர்ணயிப்பவர் சித்ரகுப்தர் ஆவார். என்றும் பதினாறு சிரஞ்சீவியாக மார்க்கண்டேயர் இருப்பது போல், இவரும் பன்னிரண்டு வயது சிரஞ்சீவியாகத் திகழ்பவர். தேவ ஸ்வரூபர். பிரம்ம குரு. அனைத்து லோகங்களின் அமைப்பைப் பரிபாலனம் செய்பவர். உலகத்து உயிரினங்கள் அன்றாடம் செய்யும் பாவ புண்ணிய செயல்களைத் தொகுத்து தனது பதிவேட்டில் பதிய வைக்கும் தலையாய பணியைப் பொறுமையுடன் செயல்படுத்துபவர். மனிதர்கள் தங்களுக்குத் தானே ஆத்ம விசாரம் செய்துகொள்வதற்கு வித்திடுபவரும் இவரே! நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கும் கர்மவினைகளை இம்மியும் பிசகாமல் குறிப்பெடுப்பது அவ்வளவு எளிதா என்ன! சித்ரகுப்த மகராஜர் சாதாரணமாகக் கிரீடம் தரித்த தோற்றத்தில் காட்சியளிப்பார். மராட்டிய புண்ணிய புருஷர்களான ஏகநாதர், நாமதேவர் அணிந்திருப்பது போன்று துணியிலான தலைப்பாகையிலும் சிறப்புத் தோற்றத்தில் காட்சியளிக்கும் கோலமும் உண்டு.
உமாமகேஸ்வரரின் அருளால் தோன்றியவர்! பார்வதி தேவியின் ரூபமாகவும் பராசக்தியின் அவதாரமாகவும் அறியப்படும் இவர், தன் எட்டுக் கரங்களிலும் சித்தர்களை அமர்த்திக் கொண்டுள்ளதோடு, எட்டாவது கரத்தில் கார்க்கினி தேவியை அமுதக்கலசமாகவும் கொண்டு அன்ன வாகனத்தில், ஆயுர்தேவியின் சந்நிதானத்தில் தலைப்பாகை, எழுதுகோல் ஏட்டுடன் அமர்ந்திருக்கும் சிறப்புக் கோலத்திலும் சித்ரகுப்தரைத் தரிசிக்கலாம்! சித்ரகுப்தருக்கு பட்டுப் பீதாம்பரத் தலைப்பாகை வந்து சேர்ந்ததற்கு ஒரு சுவாரஸ்யமான பின்னணியும் உண்டு! ஒருமுறை பலகோடி ஜீவன்களின் கர்மவினைகளைக் கணக்கெழுதும் போது, அவருக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. அந்த வினைப்பயன் கணக்கில் பெரும் பகுதி தீவினையாகவே இருப்பதைக் கண்டு கலங்கினார். தனது எழுதுகோலால் புண்ணிய ஆத்மாக்களின் கணக்கை எழுதவே முடியாதோ? இது என்ன சோதனை? இப்படி ஒரு இக்கட்டில் சிக்கிக்கொண்டு விட்டோமே என வருந்தியவர், தன் தலையில் ஓங்கிக் குட்டிக்கொண்டார். அவ்வளவு தான்! தன் வேலையில் கண்ணும் கருத்துமாய் இருக்காமல் ஏன் விசாரப்பட வேண்டும் என இறைவன் நினைத்தாரோ என்னவோ, அவருக்கு ஒரு சோதனையை ஏற்படுத்தி வேடிக்கை பார்த்துவிட்டார். அழுத்திக் குட்டிக்கொண்டதில் சித்ரகுப்தருக்கு தீராத மண்டையிடி ஏற்பட்டுவிட்டது.
தாங்கிக்கொள்ள முடியாத வலியால் அவதிப்பட, தனது அன்றாட வேலையில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் கர்மங்கள் தேக்கமடைய, அனைத்து லோகங்களும் செயலிழக்க ஆரம்பித்தன. பதற்றமடைந்த சித்ரகுப்தர் ஸ்ரீகிருஷ்ணரை மானசீகமாகத் தொழுது வேண்டிக்கொண்டார். பரந்தாமன் மனமிரங்காமல் இருப்பாரா? சித்ரகுப்தர் முன் தோன்றினான் கேசவன்! சித்ரகுப்தா! தலைவலி ரொம்பப் பலமோ? என்று புன்முறுவலுடன் வினவிய மாயவனை அடிபணிந்த கணக்கர், பிரபோ! என்னை இந்த இக்கட்டிலிருந்து காத்தருளுங்கள் சுவாமி! என வேண்டினார். முறுவலித்த மாதவன், தன் இடையில் அணிந்திருந்த பட்டுப் பீதாம்பரக் கச்சையை அவிழ்த்து, சித்ரகுப்தரின் சிரசில் கிரீடமாக அணிவித்தார். அதுவரை வாடிய முகத்துடன் தென்பட்டவர், மனம் லேசாகிப் போனதை உணர்ந்தார். வாட்டியெடுத்த தீராத் தலைவலி, உடனே அகன்றது. தலைக்கு வந்த வலி, தலைப்பாகையை அணிவித்ததும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது! அகமகிழ்ந்த சித்ரகுப்தன், மாலவனைத் தொழுதுப் போற்றினார். இன்றிலிருந்து உன்னை வழிபடுவோருக்கு, தங்கள் குறைகளைக் களைந்து அவற்றை நிவர்த்தி செய்துகொள்ளும் பக்குவம் உண்டாகட்டும்! என்ற வரத்தை அருளினார் பரந்தாமன். மறுபடியும் கணக்கர் வேலையில் மூழ்கிவிட்டார் சித்ரகுப்தர். ஆகவே வேணுகானம் இசைக்கும் ஸ்ரீகிருஷ்ணரைத் தினமும் வழிபட்டால், சித்ரகுப்தரின் அருட்பார்வை நம்மீது பரவும் என்பது ஐதீகம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum