தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வளவனூர் முருகன் கோவில்

Go down

வளவனூர் முருகன் கோவில்  Empty வளவனூர் முருகன் கோவில்

Post  ishwarya Wed May 22, 2013 5:57 pm

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் குமாரக்குப்பத்தில் அமைந்துள்ளது சிவசுப்பிரமணியர் திருக்கோவில். செவ்வாய் தோஷம் நீங்கவும், திருமணப்பேறு, குழந்தைப்பேறு பெறவும் கண்கண்ட தலமாக இது விளங்குகிறது.

தொன்மைச் சிறப்பு.......... முதலாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்தில் வளவனூர் இருந்துள்ளதை இவ்வூர் ஜெகந்நாதீசுவரர் ஆலயத்தின் கல்வெட்டு உறுதி செய்கிறது. சோழ மன்னர்களுக்கு வளவன் என்ற பட்டப்பெயர் வழங்கப்படுவதுண்டு. அந்த வகையில் வளவனின் ஊராக திகழ்ந்ததால், இந்த ஊர், வளவனூர் என பெயர் பெற்றிருக்கலாம்.

மேலும், வளவனூர் பகுதி ஆலயங்கள், பிரபுட தேவராஜன் ஆட்சிக் காலத்திலும், குமாரக்குப்பம் பகுதி ஆலயங்கள் சம்புவராயர்கள் ஆட்சிக் காலத்திலும் திருப்பணி செய்யப்பட்டுள்ளன.

இதன்பின், செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட ராஜாதேசிங் ஆட்சியின் எல்லையில் வளவனூர் இருந்துள்ளது. பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய 'தமிழச்சியின் கத்தி' என்ற காவியத்தில் வரும் கதாநாயகியின் சொந்த ஊராக வளவனூர் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலவரலாறு....... பழங்காலத்தில் தென் தமிழகத்தில் பாஞ்சாலம் என்ற ஊர் இருந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் அனைவரும் அவ்வூரில் கோவில் கொண்ட முருகப்பெருமானை மனமுவந்து வழிபட்டு வந்தனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் பஞ்சம் ஏற்பட்டு மக்களை வாட்டி வதைத்தது.

அதனால் பஞ்சம் பிழைக்க ஊரைக் காலி செய்துவிட்டு வெளியூர் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்படி வேறு ஊருக்கு பயணிக்கும் போது, தாங்கள் வழிபட்ட முருகப்பெருமானை அங்கேயே விட்டுச் செல்ல அந்த ஊர் பொதுமக்களுக்கு மனமில்லை.

எனவே மூலவர் முருகப்பெருமானைத் தங்களுடன் எடுத்துக் கொண்டு, வடக்குத் தமிழகம் நோக்கிப் பயணம் செய்தனர். காடுமலைகளைக் கடந்து திக்கு திசை தெரியாமல் பய ணித்துக் கொண்டே இருந்தனர்.

முருகர் தீர்மானித்த இடம்........... பயணத்தின் வழியில் ஒரு நாள் இரவு ஒரு ஊரில் தங்கினர். மறுநாள் காலையில் வழக்கம் போல முருகப்பெருமான் சிலையைத் தூக்கிக் கொண்டு புறப்படத் தயாராகினர். ஆனால், அந்தச் சிலையை அவர்களால் தூக்க முடியவில்லை. சிறிதளவு கூட அசைக்க முடியாமல் அச்சிலை அங்கேயே நிலைத்து விட்டது.

இதற்குக் காரணம் என்ன என்று யோசித்துப் பார்த்த போது, அப்பகுதி நீர் வளம் நிறைந்து பசுமை வெளியாகக் காட்சிதந்தது. எனவே, இதுவே நாம் வசிக்க வேண்டிய இடம் என முருகப்பெருமான் தீர்மானித்துள்ளார் என முடிவு செய்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் அனைவரும் அந்தப் பகுதியிலேயே நிரந்தரமாகத் தங்கினர்.

இச்செய்தி அப்பகுதியில் செஞ்சியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த ராஜாதேசிங்குவின் கவனத்திற்கு வரவே, அவன் ஆணைப்படி, நரையூரை ஆண்ட குறுநில மன்னன் மூலம் அங்கு குடியேறிய மக்களுக்கு நிலமும், வீட்டு மனைகளும் மானியமாக வழங்கி, முருகன் அடியார்களை கவுரவித்தான். இதன் நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில் கோவிலின் முன்பு எழுந்துள்ளார் மானிய விநாயகர்.

குமாரபுரி....... குமரனின் விருப்ப இடமாக விளங்கியதால், குமாரபுரி என்று அந்த பகுதிக்கு பெயர் வைக்கப்பட்டது. மேலும் முருகப்பெருமானுக்கு சிறிய ஆலயமும் எழுப்பப்பட்டது. அதன்பின் இப்பகுதி வளம் கொழித்த பகுதியாகத் திகழ்ந்ததால் பல்வேறு ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் குமாரபுரிக்கு வந்து குடியேறினர்.

இறைவன் எளிய வடிவில் வள்ளி தெய்வயானையுடன் அழகுறக் காட்சியளிக்கின்றார். மயில் தெய்வயானையைப் பார்த்த வண்ணம் இருப்பதால், இது தேவமயில் என அழைக்கப்படுகிறது. இச்சிலை கி.பி.12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஆலய அமைப்பு.............. குமாரபுரி சிவசுப்பிரமணியர் கோவில், ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் உயர்ந்து நிற்கிறது. வலதுபுறம் மானிய விநாயகர், இடதுபுறம் இடும்பன் ஆகியோர் தனித்தனி சன்னதி கொண்டுள்ளனர்.

ஆலயத்திற்குள் கருவறையின் இடதுபுறம் கணபதி, வலதுபுறம் காசி விஸ்வநாதர், விசாலாட்சி சன்னதிகளும், கருவறைச் சுற்றில் உற்சவமூர்த்திகளாக சோமாஸ்கந்தர், சண்முகசுவாமி, முத்துக்குமார சுவாமி, தண்டபாணி, கல்யாண கோலத்தில் முருகப்பெருமான் மற்றும் பரிவார தேவதைகளும் காட்சி தருகின்றனர்.

அண்ணாமலையார், உண்ணாமுலையம்மை, பாலசுப்பிரமணியர், நிருத கணபதி, அருணகிரி நாதர், பழனியாண்டவர், நக்கீரர், அகத்தியர், பிரம்மா, கருடாடிநவார், வீரவாகு, கண்ணன், அனுமன், தேசிகர், இடும்பன், சுமத்திர சண்டிகேஸ்வரர், நடராஜர், பதஞ்சலி, வியாக்கிரபாதர், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், நவக்கிரகம் என அனைத்து சிலா வடிவங்களும் ஒருங்கே அமைந்துள்ளன. அங்காரகனுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.

விழாக்கள்...... நாள்தோறும் இருகால பூஜை நடக்கும் இத்திருக்கோவிலில், கிருத்திகை, சஷ்டி, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம் ஆகியவை சிறப்பான விழாக்கள். கந்தர் சஷ்டி, பிரம்மோற்சவ விழாவாக ஏழுநாட்கள் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. வளர்பிறை சஷ்டியில் இரவு மரத்தேரில் சுவாமி வீதியுலா நடைபெறும்.

குழந்தை வரம் வேண்டுவோர் வேண்டுதல் நிறைவேறிய பிறகு தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திருக்கோவில் பக்தர்கள் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும்.

அமைவிடம்.......... விழுப்புரம் -புதுச்சேரி நெடுஞ்சாலை வழித்தடத்தில், வளவனூர் அமைந்துள்ளது. விழுப்புரத் திற்குக் கிழக்கே 10 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து மேற்கே 30 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ள வளவனூர் சத்திரம் நிறுத்தத்தில் இருந்து அரை பர்லாங்கு தூரம் சென்றால் குமாரபுரியில் சிவசுப்பிரமணியர் கோவிலை தரிசனம் செய்யலாம். குமாரபுரி என்பது மருவி இன்று குமாரக் குப்பம் என்று அழைக்கப்படுகிறது.

ஆன்மிக பூமி....

வளவனூரும், குமாரக்குப்பமும் ஆன்மிக பூமியாக திகழ்கிறது. இந்த பகுதியில் விநாயகர் ஆலயம், பெரிய நாயகி சமேத கரையேறிவிட்ட பாடலீசுவரர் திருக்கோவில், பெருந்தேவித் தாயார் உடனுறை கலிவரதராஜப் பெருமாள் திருக்கோவில், அங்காள பரமேஸ்வரி ஆலயம், மாரியம்மன் ஆலயம், திரவுபதியம்மன் ஆலயம், அபிராமி அம்மன் சமேதஜெகந்நாதீசுவரர் கோவில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் ஆகியவை அமைந்துள்ளன.

இது தவிர, சத்திரத்தில் சண்முக சுவாமி மடம், சொரூபானந்த சுவாமி மடம், மாரியம்மன் கோவில் அருகில் முத்தைய தேசிக சுவாமிகள் மடம், புதுச்சேரி சாலையில் நடராஜர் கோவில் நடராஜர் சுவாமி மடம் என்று குமாரக்குப்பம், சிவன் மற்றும் முருகன் ஆலயங்களை நடுநாயகமாகக் கொண்டு விளங்குகின்றன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum